வெள்ளி, 3 மார்ச், 2023

புறநானூறு - சிறப்புத்தமிழ்

புறநானூறு

1

கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே

மூதின் மகளிர் ஆதல் தகுமே

மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை

யானை எறிந்து களத்துஒழிந் தன்னே

நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்       5

பெருநிரை விலக்கி ஆண்டுப்பட் டனனே

இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி

வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்

பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி

ஒருமகன் அல்லது இல்லோள்       10

செருமுக நோக்கிச் செல்க என விடுமே!  

பாடியவர் - ஒக்கூர் மாசாத்தியார். ஒக்கூர் என்பது ஊரின் பெயர். இவர் பெண் புலவர்களுள் ஒருவர்.

திணை - வாகை. பகைவர்களைக் கொன்று வெற்றி பெற்ற வீரர்கள் வாகைப் பூவினை அணிந்து வெற்றியைக் கொண்டாடுவர்.

துறை  - மூதின் முல்லை. மறக்குடியில் பிறந்த பெண்களுக்கும்  வீரம் உண்டு என்பதை இத்துறை விளக்குகிறது.

பாடல் விளக்கம்:

    நாட்டில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வீரம் பொருந்திய ஆண்கள் போரில் பற்கேற்கச் சென்றனர். பாதி பேர் இறந்தனர். வீரம் பொருந்திய மறக்குடியில் பிறந்த மகள் ஒருத்தி, தன் தந்தை நேற்று பகைவர்களின் யானையைக் கொன்று தானும் இறந்தது கண்டு மனம் வருந்தினாள். இன்று பசுக்கூட்டங்களைப் பகைவர் கவர்ந்து செல்லாத வண்ணம் தடுத்துப் போரிட்டதால் தன் கணவனும் இறந்து விட்டான் என்பதை அறிந்து மனம் பதைத்தாள். ஆனால் போர்ப்பறை சத்தம் கேட்டவுடன் மனம் தெளிந்து தன் ஒரே மகனை அழைத்து அவன் கையில் வேலை கொடுத்தாள். வெண்மையான ஆடையை அவனுக்கு அணிவித்தாள். அவன் தலைமுடியை எண்ணெய் தடவி முடிந்தாள். பின்னர் ‘போர்க்களம் நோக்கிப் போய் வாஎன்று அனுப்பினாள். தன்னைப் பாதுகாக்கத் தன் மகன் மட்டுமே உள்ளான் என்ற நிலையிலும், தன் தாய் நாட்டிற்காக, சுயநலமின்றி தன் ஒரே மகனை போருக்கு அனுப்பும் அளவிற்குச் சங்ககாலப் பெண்கள் மனவலிமை பெற்றிருந்தனர் என்பதை இப்பாடல் காட்டுகின்றது.

 2

ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே

வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே

ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

பாடியவர் - பொன்முடியார்

திணை - வாகை. பகைவர்களைக் கொன்று வெற்றி பெற்ற வீரர்கள்  வாகைப் பூவினை அணிந்து வெற்றியைக் கொண்டாடுவர்

துறை - மூதின்முல்லை. மறக்குடியில் பிறந்த பெண்களுக்கும் வீரம் உண்டு என்பதை இத்துறை விளக்குகிறது.

பாடல் விளக்கம்:

          மறக்குடியில் பிறந்த ஒரு பெண், தாய், தந்தை, கொல்லன், வேந்தன் ஆகியோரின் கடமைகள் குறித்துத் தன் மகனுக்கு எடுத்துரைக்கின்றாள்.

தாயின் கடமை

  மகனைப் பெற்று, வளர்த்து, பாதுகாத்து, அவனை உடலிலும் உள்ளத்திலும் வலிமையுள்ளவனாக வளர்ப்பது ஒரு தாயின் கடமையாகும்.

தந்தையின் கடமை: 

    அவனைத் தன் குலத்திற்குரிய படைக்கலப் பயிற்சியாகிய கல்வி, அதனைப் பெறுவதற்குரிய அறிவு ஆகியவற்றைக் கொடுத்து அறிவுள்ளவனாக வளர்ப்பது ஒரு தந்தையின் கடமையாகும்.

கொல்லனின் கடமை: 

    அம் மகனுக்கு வேல் முதலிய படைக்கருவிகளைச் செய்து கொடுத்தல் ஒரு கொல்லனுக்குக் கடமையாகும்.

வேந்தன் கடைமை: 

    அவனும் அவன் குடும்பத்தாரும் குறைவின்றி வாழ நீர் நிலங்களைக் கொடுத்தல் அந்நாட்டை ஆளும் வேந்தனின் கடமையாகும்.

மகனின் கடமை: 

    போரில் பங்கேற்று வாள் வீசி பகைவர்களைத் தோற்கடித்து, யானைகளை அடக்கி மீண்டு வருதல் ஒரு மகனின் கடமையாகும்.

3

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்

இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

இன்னா தென்றலும் இலமே மின்னொடு

வானம் தண்துளி தலைஇஇ ஆனாது

கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

பாடியவர் : கணியன் பூங்குன்றனார்

திணை : பொதுவியல். வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத கருத்துக்களையும், அத்திணைகளுக்குப் பொதுவாக உள்ள கருத்துகளையும் எடுத்துரைப்பது பொதுவியல் திணையாகும்.

துறை: பொருண்மொழிக்காஞ்சி. துறவியர்கள் கற்று உணர்ந்த நன்மையான செய்திகளை எடுத்துக் கூறுவது இத்துறையாகும்.

பாடல் விளக்கம்:

  • எல்லா ஊரும் நமக்கு சொந்தமான ஊரே. எல்லோரும் நம் உறவினர்களே.
  • தீமையும் நன்மையும் துன்பமும் இன்பமும் பிறரால் வருவதில்லை. நாம் செய்யும் செயல்களாலேயே வருகின்றது.
  • இறப்பு என்பது புதியதன்று. நாம் கருவில் தோன்றிய நாள் முதலே நம் இறப்பு தீர்மானிக்கப்பட்டதாகும்.
  • வாழ்க்கை இனிமையானது என்று மகிழவும் வேண்டாம். வெறுப்பு வரும்போது துன்பமானது என்று ஒதுக்குவதும் வேண்டாம்.
  • நீர் வழியே செல்லும் தெப்பம் போல, நம் உயிரானது விதியின் வழியே தான் செல்லும் என்பதை அறிஞர் தம் கருத்துகளால் அறிவோம்.
  • ஆகையால், பெரியோரை மதித்தலும் வேண்டாம். சிறியோரை பழித்தலும் வேண்டாம்.


வெள்ளி, 9 டிசம்பர், 2022

பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர் - சிறுகதை

 

பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்

அறிமுகம்

தனக்கென்று ஒரு தனி உலகத்தை ஏற்படுத்திக் கொண்டு, தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்கின்ற ஒரு பெண்ணின் மனநிலையை இச்சிறுகதை சித்தரிக்கின்றது.

கதைக்கரு

கணவனை இழந்த ஒரு பெண் தான் தனி மரமான பின்பு வெளிநாட்டில் வசிக்கும் தன் பிள்ளைகளிடம் வாழ்ந்திடச் செல்கின்றாள். தன் உடமையென அவள் கொண்டு போவது பராசக்தி முதலிய சில கடவுள்களின் உருவச்சிலைகளை உள்ளடக்கிய ஒரு பிளாஸ்டிக் டப்பா. வெளிநாட்டுச் சூழ்நிலை, வெவ்வேறான மனிதர்கள், விலங்குகள் எவையும் அவளைப் பாதிக்கவில்லை. எங்கு சென்றாலும் எப்போதும் ஒரே மனநிலையில் இருந்து தன் இயல்பான ஆளுமைப் பண்பை, இரக்கக் குணத்தை வெளிக்காட்டுகின்றாள். எந்தச் சூழ்நிலையிலும் பாதிப்புக்குட்படாத அவளின் இந்நிலையைக் கண்டு வியந்து போன மகள்கள் தன் தாயின் சுதந்திரத்தைத் தடை செய்ய விரும்பாமல் சொந்த ஊரிலேயே ஒரு வீடு கட்டித் தர முடிவு செயகின்றனர். இதுவே இக்கதையின் கரு.

கதைச் சுருக்கம்

தனம், பாரதி, தினகரன் ஆகியோரின் தாய் குமுதா. தன் கணவனின் வேலை மாற்றங்களால் அசாம், அகமதாபாத், ஒரிசா எனப் பல மாநிலங்களில் வாழ்ந்தவர். ஆனால் எங்கு சென்றாலும், உணவை ஆதாரமாக வைத்து, தான் இருக்குமிடத்தில் அன்பால் தனக்குப் பிடித்த சூழலைக் கட்டியெழுப்பிக் கொள்கிறவர். ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் தனக்கான தெய்வங்களை உடன் வைத்துக் கொண்டு, திருமணமாகி விவாகரத்தான தன் மகள் பாரதிக்கு ஆதரவாக இருக்க, தன் கணவனின் வேண்டுகோளுக்கு இணங்கி அமெரிக்கா செல்கின்றார்.

பாரதியின் கடிதம்

அமெரிக்க வீட்டிற்கு வந்துள்ள தங்கள் தாயைப் பற்றி, தன் சகோதரி தனத்திற்குக் கடிதம் எழுதுகின்றாள் பாரதி. அதில், விமானப் பரிசோதனையின் போது அவள் கொண்டு சென்ற நாரத்தங்காய் ஊறுகாயைச் சுவைத்துப் பார்த்த விமானக் கம்பெனிக்காரர்கள் ஊறுகாய் செய்ய காண்ட்ராக்ட் தருவதாக சொல்லி பாரதியை நச்சரித்த நிகழ்வு, பக்கத்து வீடுகளில் தாய்மையடைந்திருக்கும் பெண்களுக்குப் பால்கோவா செய்து தருவது, குங்குமப்பூவின் மருத்துவக் குணங்களை எடுத்துரைப்பது எனத் தன் தாய் செய்கின்ற செயல்களை விவரிக்கின்றாள். சில நேரங்களில் அவை தொல்லையாகத் தெரிந்தாலும் அவளுடைய வரவு தனக்கு இன்பம் அளிப்பதாகக் கூறுகின்றாள். அவள் பாடுகின்ற பாரதியார் பாடல், அவள் அழைத்ததும் வருகின்ற அணில் கூட்டங்கள், அவள் செய்து தரும் சுவையான உணவுகள், விவாகரத்து பெற்ற தன் கணவனைச் சந்தித்துத் தனக்குத் திருமணமான பொழுது கொடுக்கப்பட்ட சீர் வரிசைகளைத் திரும்ப வரைவழைத்தல் எனத் தன் சோர்வான நம்பிக்கையிழந்த வாழ்வை மீண்டும் சுவையாக்கிவிட்டாள் என்று மகிழ்ந்து கடிதத்தை நிறைவு செய்கின்றாள்.

தனத்தின் கடிதம்

தன் கணவன் இறந்த பிறகு தன் மற்றொரு மகள் தனத்தின் வீட்டில் தங்க வேண்டிய சூழல் குமுதாவிற்கு ஏற்படுகின்றது. வீட்டைக் காலி செய்துவிட்டு, அவளை அழைத்துப் போக வந்த தனம், இதுவரை அவள் வாழ்ந்திருந்த வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்திலும் தன் தாயின் சுவடுகள் இருப்பதை அறிந்து அவற்றைத் தூக்கி எறிய மனமில்லாமல், இரண்டு வீடு தள்ளி உபயோகத்தில் இல்லாமல் இருக்கும் ஒரு கார்ஷெட்டை வாடகைக்கு எடுத்து, அதில் தன் தாயின் அனைத்து உடமைகளையும் பாதுகாப்பாக வைத்துவிட்டு, அவளின் வீணையை மட்டும் எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றாள் தனம். அப்போதும் தன் கையில் பிளாஸ்டிக் டப்பாவில் சில தெய்வங்களை எடுத்து வைத்துக் கொண்டு செல்கின்றாள் அவளுடைய தாய். கடவுள் நம்பிக்கை இல்லாத அவர்களின் வீட்டில், புத்தகத்திற்காக அடித்த பலகையில் தன் பிளாஸ்டிக் டப்பாவில் உள்ள தெய்வங்களை வைத்து வழிபடுகின்றார். இச்சூழலில் தனம் பாரதிக்குக் கடிதம் எழுதுகின்றாள். அக்கடித்ததில், மழைக்காலத்திற்கு ரசப்பொடி, சாம்பார் பொடி அரைப்பது, ஊறுகாய் போடுவது, செம்பருத்திப் பூ போட்டு எண்ணெய் காய்ச்சுவது, பக்கத்து வீட்டின் உறவினர்களுக்குச் சித்த மருத்துவம் தயாரிப்பது எனத் தன் தாய் செய்த செயல்களை விவரிக்கின்றாள். இறுதியாக, தன் சகோதரியிடம், நம் தாய் எங்கிருந்தாலும் தன் இயல்பை விட்டுவிடுவதில்லை. நம் வீட்டில் தங்கியிருந்தாலும் அவள் மனதில் தனக்கென்று ஓர் இடம் இல்லை என்று அவள் மனம் துன்பமடைகின்றது. எனவே நீயும் நானும் நம்முடைய நகைகளை விற்று இதுவரை அவள் வாழ்ந்திருந்த வீட்டை விலைக்கு வாங்கி அவளுக்குக் கொடுத்துவிடுவோம். விடுமுறைக்கு வீட்டிற்கு வரும் தன் பேரப்பிள்ளைகளுடன் அவள் பொழுது மிக இனிமையாகக் கழியட்டும் என்று கடிதத்தை முடிக்கின்றாள்.

முடிவுரை

         இக்கதையில் குமுதாவிற்குத் தேவை தன் மன விருப்பம் போல் செயல்பட தனக்கென்று ஒரு வீடு. தனக்கான ஒன்றைக் கண்டடைந்து அதன்வழி மகிழ்கின்ற உள்ளம் தான் நிறைவான வாழ்க்கை என்ற கருத்தை உள்ளடக்கியதாக இச்சிறுகதை காணப்படுகின்றது. தன்னைச் சுற்றியிருக்கும் எந்தவிதச் சூழலும் தன்னைப் பாதிப்பதில்லை என்ற மனப்போக்கில், தன்இயல்பிலேயே நிறைவுகாணும் ஆளுமையாகக் குமுதா என்ற கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளார் எழுத்தாளர் அம்பை அவர்கள்.

 

 

 

சனி, 5 நவம்பர், 2022

சிற்றிலக்கிய வரலாறு

சிற்றிலக்கிய வரலாறு

தமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தில் சிற்றிலக்கியங்கள் தோன்றியதாகக் கூறுவர். புலவர்கள் தெய்வத்தின் அருளைப் பெறுவதற்காகவும், மன்னனிடம் பொருள் பெறுவதற்காகவும் பாடிய சிறு நூல்கள் அனைத்தையும் சிற்றிலக்கியம் என்பர். வட மொழியில் இதைப் பிரபந்தம் என்று அழைப்பர்.

சிற்றிலக்கியம் – விளக்கம்

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு வகை உறுதிப்பொருட்களுள் எவையேனும் ஒன்றைப் பற்றியோ, இரண்டைப் பற்றி மட்டுமோ பாடப்படுபவை சிற்றிலக்கியங்கள் எனப்படுகின்றன. இறைவன், மன்னன், வள்ளல், குரு ஆகியோரின் சிறப்புகளை எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

தோற்றம்

அக்கால அரசியல் சூழல் காரணமாக, 12ஆம் நூற்றாண்டு தொடங்கி காப்பிய இலக்கியங்கள் படைப்பது குறைந்து போனது. சிற்றிலக்கியங்களின் ஆதிக்கம் பெருகியது. பேரரசர்களைப் பாடிப் பெரும்பொருள் பெற்று பேரிலக்கியங்களைப் படைத்த புலவர்கள், குறுநில மன்னர்களை விரைவாகப் பாடி உடனே பொருள் பெறும் எளிய நிலை ஏற்பட்டது. ஆகவே சிற்றிலக்கியங்கள் பெருகத் தொடங்கின.

சிற்றிலக்கிய வகை

தமிழில் உள்ள சிற்றிலக்கியங்களை 96 என்னும் தொகையில் அடக்கிக் கூறுவது மரபு. சிற்றிலக்கியங்களுக்குப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன. இவ்விலக்கியங்கள் குறித்துப் பின்வருமாறு காணலாம்.

கலம்பகம்

பல பூக்களைக் கலந்து மாலையாகத் தொடுப்பது போல பல வகையான செய்யுள் உறுப்புகளைக் கொண்டு, அகம் புறப் பொருட்களை கலந்து பாடப்படும் இலக்கியம் கலம்பகம் ஆகும். தெய்வங்கள், மன்னர்கள், மக்களுள் சிறந்து விளங்குபவர்கள் இவ்விலக்கியத்தின் பாட்டுடைத் தலைவர்ளாவர்.

கலம்பக உறுப்புகளும் அமைப்பும்

கலம்பக இலக்கியம் 18 உறுப்புகளைக் கொண்டது. அவை, புயவகுப்பு, அம்மானை, தவம், வண்டு, வாண், மதங்கு, கைக்கிளை, சித்து, ஊசல், களி, மடக்கு, ஊர், மறம், காலம், தழை, இரங்கல், சம்பிரதம், கார், தூது, குறம், பிச்சியார், கொற்றியார் ஆகியனவாகும்.  இவ்விலக்கியம் அந்தாதித் தொடையால் 100 பாடல்கள் வரை பாடப்படும். கடவுளுக்கு 100, முனிவர்க்கு 95, அரசர்க்கு 90, அமைச்சர்க்கு 70, வணிகர்க்கு 50, வேளாளர்க்கு 30 என்னும் பாடல் எண்ணிக்கை அமைப்பைப் பெற்று பாடப்படுகின்றது.

சில கலம்பக நூல்கள் 

திருவரங்கக் கலம்பகம், நந்திக் கலம்பகம், தில்லைக் கலம்பகம், ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம், திருக்காவலூர்க் கலம்பகம், காசிக் கலம்பகம், அழகர் கலம்பகம் முதலியன குறிப்பிடத்தக்கனவாகும்.

திருவரங்கக்கலம்பகம்

காவிரிக் கரையில் கோயில்கொண்ட ரங்கநாதப் பெருமாளின் மேல் பாடப்பட்டது. இதனை இயற்றியவர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார். இந்நூலில் திருமாலின் அவதாரங்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. 107 செய்யுள்கள் உள்ளன.

தூது

தன் கருத்தைப் பிறிதொருவருக்குத் தெரிவிக்குமாறு இடையில் ஒருவரைத் தன் சார்பாக அனுப்புவதே தூது எனப்படும். இத்தூது அகத்தூது, புறத்தூது என இரண்டு வகைப்படும்.

அகத்தூது – தலைவன் மேல் காதல் கொண்ட தலைவி, தனது காதல் துன்பத்தைத் தலைவனுக்குக் கூறி, தூது உரைத்துவா என்றும், மாலை வாங்கி வா என்றும், உயர்திணைப் பொருள்களையோ, அஃறிணைப் பொருள்களையோ தூதாக அனுப்புவது அகத்தூது ஆகும்.

தூது விடுக்கும் பொருட்கள் – அன்னம், மயில், கிளி, மேகம், பூவை, தோழி, குயில், நெஞ்சு, தென்றல், வண்டு ஆகிய பத்துப் பொருட்கள் தூதுக்குரியவை எனக் கூறப்பட்டன. தற்காலத்தில் பணம், தமிழ், புகையிலை, செருப்பு, மான், நெல் ஆகிய எவையும் தூதுக்குரிய பொருள்களாகக் கொண்டு இலக்கியம் படைக்கின்றனர்.

புறத்தூது – போர் காரணமாக மன்னனுக்காக ஒரு புலவரோ, அமைச்சரோ அல்லது வேறு யாரேனுமோ தூது செல்வது புறத்தூது ஆகும். அதியமானுக்காகத் தொண்டைமானிடம் ஔவையார் தூது சென்றமையைப் புறத்தூதிற்குச் சான்றுரைக்கலாம்.

சில தூது நூல்கள் 

உமாபதி சிவாச்சாரியார் பாடிய நெஞ்சு விடு தூது நூலே முதல் தூது இலக்கியமாகக் கருதப்படுகின்றது. அது தவிர தமிழ்விடுதூது, நெஞ்சு விடுதூது, அழகர் கிள்ளை விடுதூது முதலியன குறிப்பிடத்தக்கன.

தமிழ்விடு தூது

இந்நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. நூலின் கருத்தினைக் கொண்டு இதன் ஆசிரியர் தமிழ்ப்பற்று மிக்கவர் என்பதும், சைவ சமயத்தைச் சார்ந்தவர் என்பதும் அறியப்படுகின்றது. மதுரையில் குடி கொண்டிருக்கும் சொக்கநாதர் மேல் காதல் கொண்ட தலைவி, தன் காதல் துன்பத்தை எடுத்துக் கூற, தமிழைத் தூதாக அனுப்புவதே தமிழ்விடு தூது ஆகும்.

உலா

“ஊரோடு தோற்றமும் உரித்தென மொழிப“என்ற தொல்காப்பிய நூற்பாவே பிற்காலத்தில் உலா இலக்கிய வகைக்கு வழிவகுத்தது எனலாம். அனைத்துப் பண்புகளில் சிறந்து விளங்கும் ஆண்மகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அவனுடைய குலம், குடிப்பிறப்பு, பெருமை ஆகியனவற்றை விளங்கக்கூறி, அவன் உலா வரும்போது பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் உள்ளிட்ட ஏழு பருவத்துப் பெண்களும் காதல் கொள்வதாகப் பாடப்படுவது உலா இலக்கியம் ஆகும். உலாக் காட்சிகள் முதன் முதலாக இலக்கிய வடிவம் பெறுவது முத்தொள்ளாயிரம் என்ற நூலில்தான் எனலாம்.

சில உலா நூல்கள் 

திருக்கையிலாய ஞான உலா, மூவருலா, ஏகாம்பர நாதர் உலா, திருக்குற்றலாநாதர் உலா, திருவானைக்கா உலா, திருவிடை மருதூர் உலா முதலியன குறிப்பிடத்தக்கன.

பிள்ளைத் தமிழ்

“குழவி மருங்கினும் கிழவதாகும்“ என்ற தொல்காப்பிய நூற்பா பிற்காலத்தில் பிள்ளைத்தமிழ் என்ற இலக்கிய வகைக்கு வித்திட்டது. கண்ணனைக் குழந்தையாக எண்ணித் தாலாட்டுப் பாடல்களைப் பாடி இவ்விலக்கிய வகையைத் தோற்றுவித்தவர் பெரியாழ்வார் என்பர். இவ்விலக்கியம் பிள்ளைப் பாட்டு என்றும், பிள்ளைக் கவி என்றும் கூறப்படும். புலவர்கள் தாம் விரும்பும் மன்னனையோ, தலைவனையோ, வள்ளலையோ குழந்தையாகப் பாவித்து பாடப்படுவது பிள்ளைத் தமிழ் எனப்படும். குழந்தையின் மூன்றாம் மாதம் முதல் 21ஆம் மாதம் வரை ஒவ்வொரு பருவத்திற்கும் பத்துப் பாடல்கள் வீதம் பத்துப் பருவங்கள் வகுத்துப் பாடப்படுகின்றது. இது ஆண்பாற் பிள்ளைத் தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இரண்டு வகைப்படும்.

ஆண்பாற் பிள்ளைத்தமிழ்

காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில் சிதைத்தல், சிறுபறை கொட்டல், சிறு தேர் உருட்டல் ஆகிய பருவங்கள் ஆண்பாற்பிள்ளைத் தமிழுக்குரியன.

பெண்பாற் பிள்ளைத்தமிழ்

காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, நீராடல், அம்மானை, ஊசல் ஆகிய பருவங்கள் பெண்பாற்பிள்ளைத் தமிழுக்குரியன.

சில பிள்ளைத் தமிழ் நூல்கள் 

கி.பி.12ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் பாடிய குலோத்துங்கன் பிள்ளைத் தமிழே முதல் பிள்ளைத் தமிழ் நூலாகும். கி.பி.17இல் குமரகுருபரர் பாடிய மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ் இரண்டும் பக்தி இலக்கிய வரலாற்றில் பெரும்புகழ் படைத்தவை.

பள்ளு

நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது” என்ற முதுமொழியைக் கொண்டு பள்ளு இலக்கியப் பெருக்கினை அறியலாம். பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்தரிப்பது பள்ளு இலக்கியமாகும். இதனை உழத்திப்பாட்டு என்றும் பள்ளுப் பாட்டு என்றும் கூறுவர்.

சில பள்ளு நூல்கள் 

திருவாரூர்ப் பள்ளு, திருமலை முருகன் பள்ளு, சீர்காழிப்பள்ளு, முக்கூடற்பள்ளு, திருச்செந்தூர்ப் பள்ளு ஆகியன குறிப்பிடத்தக்கன.

முக்கூடற்பள்ளு

பள்ளு இலக்கியங்களிலேயே தலைசிறந்து விளங்குவதும் முதன்முதலில் தோன்றியதும் முக்கூடற்பள்ளு ஆகும். இதனை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. காலம் 18ஆம் நூற்றாண்டு. நெல்லை மாவட்டத்தில் முக்கூடல் நகரம் உள்ளது. தாமிரபரணி, சிற்றாறு, கயத்தாறு மூன்றும் கூடும் இடம் முக்கூடல் எனப்படும்.  இந்நகரில் எழுந்திருளியுள்ள அழகரின் பெருமையை இந்நூல் பேசுகின்றது.

பள்ளர் பெருமை, பள்ளியர் இருவரின் வரலாறு, நாட்டுவளம், மழை வேண்டி நிற்றல், மழைக்குறி அறிதல், பண்ணைக்காரன் வருகை, பள்ளியர் பண்ணையாரிடம் முறையிடல், பண்ணையார் பள்ளனைத் தண்டித்தல், பள்ளியர் புலம்பல், உழவுப்பணி தொடங்கல், பள்ளனைச் சிறையிடல், ஏசிய பள்ளியர் மீண்டும் இணைதல் ஆகியவற்றைப் பாடுவது பள்ளு இலக்கிய அமைப்பு முறையாகும்.

குறவஞ்சி

குறவஞ்சி இலக்கியத்திற்கு “இறப்பு நிகழ்வு எதிர் என்னும் முக்காலமும் திறம்பட உரைப்பது குறத்திப் பாட்டே” என்று பன்னிரு பாட்டியல் இலக்கணம் கூறுகின்றது. இந்நூல் அரசனையோ, தெய்வத்தையோ தலைவனாகக் கொண்டு பாடப்படுகின்றது.

சில குறவஞ்சி நூல்கள் 

குற்றாலக் குறவஞ்சி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, பெத்லகேம் குறவஞ்சி, அர்த்தநாரீசுவரர் குறவஞ்சி ஆகியன குறிப்பிடத்தக்கன.

திருக்குற்றாலக் குறவஞ்சி

குற்றாலம் என்னும் ஊரில் விளங்கும் குற்றாலநாதரைப் போற்றும் வகையில் தெய்வக் காதல் அமையப் பாடப்பட்டது திருக்குற்றாலக் குறவஞ்சி ஆகும். இந்நூல் குறவஞ்சி நாடகம் என்றும் போற்றப்படும். திரிகூட ராசப்பக் கவிராயர் இந்நூலை இயற்றியுள்ளார். திருக்குற்றாலநாதரின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட இந்நூலுக்கு அன்றைய மதுரை மன்னன் சொக்கநாத நாயக்கர் குறவஞ்சி மேடு என்னும் பெருநிலத்தை பரிசாகக் கொடுத்தார்.

இக்கதை குற்றால நாதரின் திருவுலாவோடு தொடங்குகின்றது. குற்றால நாதரின் திரு உலாவைக் காணப் பெண்கள் வருகின்றனர். தோழியின் வாயிலாக இறைவனின் அருளைப் பற்றி அறிந்த வசந்தவல்லி இறைவன் மீது காதல் கொள்கின்றாள். இந்நிலையில் குறத்தி, வசந்தவல்லியின் கைகளைப் பார்த்து குறிசொல்கின்றாள். அதனால் மனம் மகிழ்ந்த வசந்தவல்லி அவளுக்குப் பரிசு கொடுக்கின்றாள். குறவன் குறத்தியைத் தேடி வருகிறான். இருவரும் குற்றாலநாதரைப் பாடி இன்பம் அடைகின்றனர். இதுவே குற்றாலக் குறவஞ்சியின் கதை ஆகும். 

பரணி

போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி பெற்ற வீரரைச் சிறப்பித்துப் பாடும் இலக்கியம் பரணி ஆகும். கடவுள் வாழ்த்து, கடை திறப்பு, காளி வழிபாடு உள்ளிட்ட அமைப்புகளுடன் பாடப்படும். “ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி” என்ற இலக்கண விளக்கப்பாட்டியல் இலக்கணம் கூறுகின்றது.

அரசனின் படைக் கருவிகளான வில், வாள், வேல் ஆகியவற்றால் அமைக்கப்பட்ட போர்ப்பரண் மீதிருந்து போர்க்காட்சியை நேரில் கண்டு புலவர் பாடுவதால் பரணி எனப்பட்டது என்றும் கூறுவர். பரணி நாளில் பேய்கள் கூடி சமைத்து, உண்டு மகிழ்ந்து ஆடிப்பாடி போரில் வென்ற மன்னரைப் புகழ்ந்து கூறும் வகையில் இந்நூல் அமைகின்றது.

சில பரணி நூல்கள் 

இரணியவதைப் பரணி, கலிங்கத்துப் பரணி, தக்கயாகப் பரணி, பாசவதைப் பரணி, மோகவதைப் பரணி ஆகியன குறிப்பிடத்தக்கன.

கலிங்கத்துப் பரணி

காலத்தால் முற்பட்ட பரணி கலிங்கத்துப்பரணியாகும். இதனை இயற்றியவர் செயங்கொண்டார். இவர் தீபங்குடியைச் சேர்ந்தவர்.  முதல் குலோத்துங்கனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட இந்நூல் அனந்தவர்மன் என்னும் கலிங்க மன்னன் மீது போர்தொடுத்துப் பெற்ற வெற்றியைப் புகழ்ந்து கூறும் வகையில் பாடப்பட்டுள்ளது.  

அந்தாதி

ஒரு பாடலின் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சொல், சீர் அடி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று அடுத்த பாடலின் முதலில் வருவதாக அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும். “அந்தம் முதலாகத் தொடுப்பது அந்தாதி” என்று யாப்பருங்கலக்காரிகை அந்தாதிக்கு இலக்கணம் கூறுகின்றது. அந்தாதியைத் தனி ஒரு இலக்கியமாக உருவாக்கிய பெருமை காரைக்காலம்மையாரையே சாரும். அவருடைய அற்புதத் திருவந்தாதி என்னும் நூலே முதல் அந்தாதி நூலாகப் போற்றப்படுகின்றது. 

சில அந்தாதி நூல்கள் 

அபிராமி அந்தாதி, திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி,சடகோபர் அந்தாதி ஆகியன குறிப்பிடத்தக்கன.

அபிராமி அந்தாதி

அந்தாதி இலக்கியங்களில் சிறந்த ஒன்று அபிராமி அந்தாதி ஆகும். இதை இயற்றியவர் அபிராமி பட்டர். திருக்கடையூரில் உள்ள அபிராமி அன்னையை இந்நூல் பாடுகின்றது. 101 பாடல்கள் உள்ளன. இவர் வாழ்ந்த காலம் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை எனக் கணக்கிடப்படுகின்றது.