புதன், 10 மே, 2023

திருஞானசம்பந்தர் திருப்பதிகம் - திருவீழிமிழலை

 

திருஞானசம்பந்தர் திருப்பதிகம் - திருவீழிமிழலை

 பாடல் எண் : 1

அரைஆர் விரிகோ வணஆடை

நரைஆர் விடையூர்தி நயந்தான்

விரையார் பொழில்வீ ழிம்மிழலை

உரையால் உணர்வார் உயர்வாரே.

விளக்கம்

இடையிற் கட்டிய விரிந்த கோவண ஆடையையும்வெண்மை நிறம் பொருந்திய இடப வாகனத்தை விரும்பி ஏற்றுக் கொண்ட சிவபெருமான் உறைகின்றமணம் பொருந்திய பொழில்களால் சூழப்பட்ட திருவீழிமிழலையின் புகழை நூல்களால் உணர்கின்றவர் உயர்வை அடைவார்கள்.

பாடல் எண் : 2

புனைதல் புரிபுன் சடைதன்மேல்

கனைதல் ஒருகங் கைகரந்தான்

வினையில் லவர்வீ ழிம்மிழலை

நினைவில் லவர்நெஞ் சமும்நெஞ்சே.

விளக்கம்

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிவந்த சடைமுடி மீது கங்கை நதியை மறைத்து வைத்துள்ள சிவபெருமான் உறைகின்றதீவினை இல்லாத மக்கள் வாழ்கின்ற திருவீழிமிழலையை நினையாதவர் நெஞ்சம் என்றும் மகிழ்ச்சியடைவதில்லை.

பாடல் எண் : 3

அழவல் லவர்ஆ டியும்பாடி

எழவல் லவர்எந் தைஅடிமேல்

விழவல் லவர்வீ ழிம்மிழலை

தொழவல் லவர்நல் லவர்தொண்டே.

விளக்கம்

அழவல்லவர்ஆடியும் பாடியும் எழவல்லவர் ஆகிய எம் தந்தை சிவபெருமான் திருவடிமேல் விழ வல்லவருமான அடியவர்கள் நிறைந்துள்ள திருவீழிமிழலையைத் தொழவல்லவரே நல்லவர் ஆவர். அவர் செய்யும் தொண்டே நல்ல தொண்டாகும்.

பாடல் எண் : 4

உரவம் புரிபுன் சடைதன்மேல்

அரவம் அரையார்த்த அழகன்

விரவும் பொழில்வீ ழிம்மிழலை

பரவும் அடியார் அடியாரே.

விளக்கம்

சிவந்த சடைமுடியின் இடையில்பாம்பை அணிந்துள்ள சிவபிரான் எழுந்தருளியபொழில்கள் சூழ்ந்துள்ள திருவீழிமிழலையைப் பரவித் துதிக்கும் அடியவரே அடியவராவர்.

பாடல் எண் : 5

கரிதா கியநஞ்சு அணிகண்டன்

வரிதா கியவண்டு அறைகொன்றை

விரிதார் பொழில்வீ ழிம்மிழலை

உரிதா நினைவார் உயர்வாரே.

விளக்கம்

நஞ்சினை உண்டு அதனை அணிகலனாகத் தன் தொண்டையில் நிறுத்திய நீலகண்டன் எழுந்தருளிய வண்டுகள் ஒலி செய்யும் கொன்றை மரங்களில் மலரும் மலர்களால் நிறைந்த சோலைகளால் சூழப்பெற்ற திருவீழிமிழலையைத் தமக்கு உரிய தலமாகக் கருதுவோர் சிறந்த அடியவராவர்.

பாடல் எண் : 6

சடையார் பிறையான் சரிபூதப்

படையான் கொடிமே லதொர்பைங்கண்

விடையான் உறைவீ ழிம்மிழலை

அடைவார் அடியா ரவர்தாமே.

விளக்கம்

சடையின் இடையில் பிறைமதியை சூடியவனும் பூதப்படைகளை உடையவனும், இடப வாகனத்தை உடையவனுமாகிய சிவபெருமான் உறைகின்ற திருவீழிமிழலையை அடைபவர்கள் சிறந்த அடியவர்கள் ஆவர்.

பாடல் எண் : 7

செறிஆர் கழலும் சிலம்புஆர்க்க

நெறிஆர் குழலா ளொடுநின்றான்

வெறிஆர் பொழில்வீ ழிம்மிழலை

அறிவார் அவலம் அறியாரே.

விளக்கம்

கால்களிற் செறிந்த கழல்சிலம்பு ஆகிய அணிகள் ஆர்ப்பரிக்க, சுருண்ட கூந்தலை உடைய உமையம்மையோடு நின்று அருள் புரிகின்ற சிவபெருமான் எழுந்தருளிய, மணம் கமழும் பொழில்களால் சூழப் பெற்ற திருவீழிமிழலையைத் தியானிப்பவர்களுக்குத் துன்பம் ஏற்படுவதில்லை.

பாடல் எண் : 8

உளையா வலிஒல்க அரக்கன்

வளையா விரல்ஊன் றியமைந்தன்

விளைஆர் வயல்வீ ழிம்மிழலை

அளையா வருவார் அடியாரே.

விளக்கம்

கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின வலிமை கெடுமாறு தன் காலை வளைத்து விரலால் ஊன்றிய வலிமை வாய்ந்த சிவபெருமான் எழுந்தருளியவிளைச்சல் மிகுந்த வயல்களை உடைய திருவீழிமிழலையை சிந்தையால் நிறைத்து வருகை புரிபவர் சிறந்த அடியவராவர்.

பாடல் எண் : 9

மருள்செய்து இருவர் மயலாக

அருள்செய் தவன்ஆர்அழலாகி

வெருள்செய் தவன்வீ ழிம்மிழலை

தெருள்செய் தவர்தீ வினைதேய்வே.

விளக்கம்

திருமால் பிரமன் ஆகிய இருவரும் அஞ்ஞானத்தினால் அடிமுடிகாணாது மயங்க தீ வடிவமாக வெளிப்பட்டு நின்று, அவர்களுக்கு அருள் செய்த சிவபெருமான் எழுந்தருளிய திருவீழிமிழலையைச் சிறந்த தலம் என்று தெளிந்தவர்களுக்குத் தீவினைகள் அகலும்.

பாடல் எண் : 10

துளங்கும் நெறியார் அவர்தொன்மை

வளங்கொள் ளன்மின்,புல் அமண்தேரை

விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை

உளங்கொள் பவர்தம் வினைஓய்வே.

விளக்கம்

 தடுமாற்றமுறும் கொள்கைகளை மேற்கொண்டுள்ள அமணர் தேரர் ஆகியோரின் சமயத் தொன்மைச் சிறப்பைக் கருதாமல், பொழில்கள் சூழ்ந்த திருவீழிமிழலையை நினைப்பவர்களின் தீவினைகள் நீங்கிவிடும்.

பாடல் எண் : 11

நளிர்கா ழியுள்ஞா னசம்பந்தன்

குளிர்ஆர் சடையான் அடிகூற

மிளிர்ஆர் பொழில்வீ ழிம்மிழலை

கிளர்பா டல்வல்லார்க்கு இலைகேடே.

விளக்கம்

காழி என்னும் ஊரில் தோன்றிய திருஞானசம்பந்தன், சடைமுடியை உடைய சிவபெருமானின் திருவடிப் பெருமைகளைக் கூறத் தொடங்கி, பொழில்கள் சூழ்ந்த திருவீழிமிழலையின் புகழ்கூறும் இப்பதிகப் பாடல்களை ஓதுபவர்களுக்குத் துன்பம் இல்லை.

வெள்ளி, 5 மே, 2023

கண்ணிநுண் சிறுத்தாம்பு – மதுரகவி ஆழ்வார்

 

 கண்ணிநுண் சிறுத்தாம்பு – மதுரகவி ஆழ்வார்

1

வேறொன்றும் நான் அறியேன்
வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்
வண்குருகூர் ஏறெங்கள் வாழ்வாம் என்றேத்தும் மதுரகவியார்
எம்மை ஆள்வார் அவரே அரண்.


விளக்கம்

 “வேதத்தைத் தமிழிலே அருளிச்செய்த, அழகிய திருக்குருகூருக்குத் தலைவரான மாறன் என்கிற நம்மாழ்வாரைத் தவிர வேறொன்றை அறியேன்” என்று சொன்ன மதுரகவி ஆழ்வாரே நம்மை ஆள்பவர், அவரே நமக்குப் புகலிடம்.


2

கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே


விளக்கம்

 யசோதைப் பிராட்டி சிறிய கயிற்றினால் தன்னைக் கட்டும்படி அமைத்துக்கொண்ட கண்ணனை விட்டு, தென் திசையில் உள்ள திருக்குருகூருக்குத் தலைவரான நம்மாழ்வாரின் திருநாமத்தைச் சொன்னால் அது என்னுடைய நாவினுக்கு இனியதாகவும் அமுதமாகவும் உள்ளது.


3

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே


விளக்கம்

நான் ஆழ்வாரின் பாசுரங்களைச் சொல்லி மிகப்பெரிய ஆனந்தத்தை அடைந்தேன். ஆழ்வாரின் திருவடிகளிலே நன்கு சரணடைந்திருக்கிறேன். திருக்குருகூருக்குத் தலைவரான ஆழ்வாரைத் தவிர வேறு ஒரு தெய்வத்தை அறியேன். ஆழ்வாருடைய பாசுரங்களை இசையுடன் பாடிக்கொண்டு எல்லா இடங்களுக்கும் செல்வேன்.

4

திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடைக்
கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே


விளக்கம்

 ஆழ்வாருக்கே அடியவன் என்றிருந்த நானும் அந்த நிலையில் இருந்து நழுவினேன். அழகிய திருமேனியை உடைய திருமாலை, எம் ஆழ்வார் காட்டிக் கொடுக்க நான் கண்டேன். அங்ஙனம் வள்ளல் தன்மை மிகுந்த திருக்குருகூரில் அவதரித்த ஆழ்வாரின் உண்மையான அடியவனாக இருக்கும் எனக்குக் கிடைத்த நன்மையைப் பாருங்கள்!


5

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மை ஆகக் கருதுவர் ஆதலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே


விளக்கம்

 நான்கு வேதங்களில் சிறந்த ஞானம் உடையவர்கள் யாவரும் என்னைக் கைவிட்டார்கள். ஆழ்வாரோ தாயும் தந்தையுமாக இருந்து என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டார். எனவே அவரே என் இறைவன்.


6

நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன்னெலாம்
செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே


விளக்கம்

முற்காலத்தில் பிறருடைய பொருளையும் பெண்களையும் விரும்பினேன். இன்றோ, தங்கத்தால் செய்யப்பட்ட மாட மாளிகைகள் நிறைந்த திருக்குருகூருக்குத் தலைவரான ஆழ்வாரால் திருத்தப்பட்டு அவரின் அடியவனாகி, மேன்மையை அடைந்தேன்.


7

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே


விளக்கம்

 திருக்குருகூருக்குத் தலைவரான, என்னுடைய இறைவனாகிய நம்மாழ்வார், இன்று முதல் நான் அவருடைய பெருமையைப் பாடும் படியான நிலையை எனக்கு அருளினார். இனி அவர் எம்மை ஒருநாளும் கைவிட மாட்டார்!


8

கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான்
பண்டை வல் வினை பாற்றி அருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே


விளக்கம்

 காரிமாறன் என்னும் ஆழ்வார் என்னை ஏற்றுக்கொண்டார். என்னுடைய பாவங்களைப் போக்கினார். அற்புதத் தமிழ்ப் பாசுரங்களை அருளிச் செய்த ஆழ்வாரின் கருணையின் பெருமைகளை எட்டுத்திக்கிலும் உள்ளோர் உணரும்படிப் பாடுவேன்.


9

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ்வருமறையின் பொருள்
அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே


விளக்கம்

 இறைவனின் அருளைக் கொண்டாடும் அடியார்களின் ஆனந்தத்துக்காக, ஆழ்வார் தன் பெருங்கருணையால் வேதத்தின் மூலப்பொருளைத் திருவாய்மொழியில் ஆயிரம் பாசுரங்களாக அருளினார். ஆழ்வாரின் இந்தக் கருணை இவ்வுலகினில் மிகப் பெரியது.


10

மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே


விளக்கம்

 வேதத்தின் சாரத்தை என்னுடைய நெஞ்சிலே நிலைத்து நிற்கும்படி அருளினார் ஆழ்வார். இதனால் அவருக்குத் தொண்டு செய்யும் அந்த உயரிய நிலை எனக்கு உடனே கிடைத்தது.


11

பயன் அன்று ஆகிலும் பாங்கு அல்லர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன்தன் மொய் கழற்கு அன்பையே


விளக்கம்

 குயில்களின் ஓசை நிறைந்திருக்கும் சோலைகள் சூழப்பட்ட திருக்குருகூரில் வசிக்கும் ஆழ்வாரே! இவ்வுலகில் உள்ளவர்களாலே தேவரீருக்கு எந்தப் பயனும் இல்லை என்றபோதிலும், இவர்கள் திருந்தும் நிலையில் இல்லாவிட்டாலும், உம் உபதேசங்களாலும் நடத்தையாலும் இவர்களைத் திருத்தி நற்செயல்களில் ஈடுபடுத்துகின்றீர். இப்படிப்பட்ட தேவரீர் திருவடிகளில் அன்பை வளர்த்துக்கொள்ள முயல்கின்றேன்.


12

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே   


விளக்கம்

 எம்பெருமானாகிய திருமால் எல்லோரிடத்திலும் அன்புடையவன். நம்மாழ்வார் திருமாலின் அடியார்களிடத்தில் அன்பு பூண்டவர். மதுரகவியாழ்வாராகிய நான் நம்மாழ்வாரிடத்தில் அன்பு பூண்டவன். நான் பக்தியுடன் பாடிய இந்த பிரபந்தத்தை முழுவதுமாக படிப்பவர்கள் வைகுந்தத்தை அடைவார்கள்.

 

திங்கள், 3 ஏப்ரல், 2023

மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ் - வருகைப்பருவம்

 

மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ்

வருகைப்பருவம்

அறிமுகம்

இந்நூலின் ஆசிரியர் குமரகுருபரர். ஐந்து வயது வரை பேசாதிருந்தமையால் இவருடைய பெற்றோர் திருச்செந்தூர் முருகனை வேண்டினர். முருகன் அருளால் பேசியதன் காரணமாக முதற்கண் கந்தர் கலிவெண்பா என்னும் பாமாலையை இயற்றினார்.  திருமலை நாயக்கரின் வேண்டுகோளுக்கிணங்க மதுரை மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் படைத்தார். இந்நூல் கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டது. 102 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. காப்புப் பருவத்தில் திருமால், சிவபெருமான், முருகன், விநாயகன், திருமகள், கலைமகள் ஆகியோரிடம் மீனாட்சியம்மையைக் காக்குமாறு 11 பாடல்களில் குமரகுருபரர் வேண்டுகின்றார். இந்நூலில் இடம்பெற்றுள்ள வருகைப் பருவத்தின் முதல் ஐந்து பாடல்களின் விளக்கத்தைப் பின்வருமாறு காண்போம்.

பாடல் 1

அஞ்சிலம்பு ஓலிட அரிக்குரல் கிண்கிணி

                அரற்றுசெஞ் சீறடிபெயர்த்து

        அடிஇடும் தொறும்நின் அலத்தகச் சுவடுபட்டு

                அம்புவி அரம்பையர்கள் தம்

மஞ்சு துஞ்சு அளகத்து இளம்பிறையும் எந்தைமுடி

                வளர்இளம் பிறையும்நாற

        மணிநூ புரத்துஅவிழும் மென்குரற் கோஅசையும்

                மடநடைக் கோதொடர்ந்துஉன்

செஞ்சிலம்பு அடிபற்று தெய்வக் குழாத்தினொடு

                சிறைஓதி மம்பின்செலச்

        சிற்றிடைக்கு ஒல்கிமணி மேகலை இரங்கத்

                திருக்கோயில் எனஎன்நெஞ்சக்

கஞ்சமும் செஞ்சொல் தமிழ்க்கூட லும்கொண்ட

                காமர்பூங் கொடிவருகவே

        கற்பக அடவியில் கடம்பாடு அவிர்பொலி

                கயல்கண்நா யகிவருகவே

பாடல் விளக்கம்

அழகிய சிலம்பு ஒலிக்க, சிறிய அடி வைத்து நீ பூமியில் கால் வைத்து நடக்கும்போது, உன் செம்மையான பாதத்தின் தழும்புகள், தேவமகளிர் கூந்தலில் அணிந்துள்ள இளம்பிறையிலும், சிவபெருமானின் சடைமுடியில் உள்ள இளம் பிறையிலும் தோன்றுகின்றன. நீ அணிந்திருக்கும் சிலம்பில் இருந்து வெளிவரும் ஓசையினால், தளர்கின்ற உன் இளநடையினால் மனம் பறி கொடுத்து, உன்னைப் பின்பற்றி வருகின்ற தெய்வப் பெண்கள் வருகின்றனர். அவர்களின் கூட்டத்தினுள்ளே அன்னப்பறவைகளும் தொடர்ந்து வருகின்றன. மணிமேகலை என்னும் அரையணி ஒலிக்க என் மனமாகிய தாமரை மலரையும், தமிழ்மொழி பழகும் மதுரை மாநகரையும் திருக்கோயிலாகக் கொண்டிருக்கும் அழகிய மலர்க்கொம்பு போன்றவளே வருக. கற்பகக் காடு போலக் கடம்பவனத்தில் நிறைந்து விளங்குகின்ற கயற்கண் அம்மையே வருக.

பாடல் 2

குண்டுபடு பேர்அகழி வயிறுஉளைந்து ஈன்றபைங்

                கோதையும் மதுரம்ஒழுகும்

        கொழிதமிழ்ப் பனுவல் துறைப்படியும் மடநடைக்

                கூந்தல்அம் பிடியும் அறுகால்

வண்டுபடு முண்டக மனைக்குடி புகச்சிவ

                மணங்கமழ விண்டதொண்டர்

        மானதத் தடமலர்ப் பொன்கோயில் குடிகொண்ட

                மாணிக்க வல்லிவில்வேள்

துண்டுபடு மதிநுதல் தோகையொடும் அளவில்பல

                தொல்உரு எடுத்துஅமர்செயும்

        தொடுசிலை எனக்ககன முகடுமுட் டிப்பூந்

                துணர்த்தலை வணங்கிநிற்கும்

கண்டுபடும் கன்னல்பைங் காடுபடு கூடல்

                கலாபமா மயில்வருகவே

        கற்பக அடவியில் கடம்பாடு அடவிப்பொலி

                கயல்கண்நா யகிவருகவே

பாடல் விளக்கம்

திருப்பாற்கடலில் இருந்து தோன்றிய இலக்குமியும், பெண் யானை போன்றவளாகிய கலைமகளும், வண்டுகள் மொய்க்கும் தாமரை மலரில் புகுந்து கொண்டனர். அதுபோல, சிவமணம் கமழ தொண்டர்களின் மதியாகிய மலர்கள் பூத்திருக்கும் பொய்கை என்னும் கோயிலில் புகுந்துள்ள மாணிக்க வல்லியே! மன்மதன் தன் மனைவி ரதி தேவியுடன் பலவகையான பழைய வடிவங்களைத் தாங்கிப் போர் புரிவதற்கு எடுத்திருக்கும் பல வில்களைப் போல, வானத்தின் உச்சியை எட்டிப் பார்க்கின்ற கரும்புக் காடுகள் நிறைந்த மதுரையில் எழுந்தருளியிருக்கும் தோகையுடைய மயில் போன்றவளே வருக.

பாடல் 3

முயல்பாய் மதிக்குழவி தவழ்சூல் அடிப்பலவின்

                முள்பொதி குடக்கனியொடு

        முடவுத் தடம்தாழை முப்புடைக் கனிசிந்த

                மோதிநீர் உண்டுஇருண்ட

புயல்பாய் படப்பைத் தடம்பொழில்கள் அன்றிஏழ்

                பொழிலையும் ஒருங்குஅலைத்துப்

        புறம்மூடும் அண்டச் சுவர்த்தலம் இடித்துஅப்

                புறக்கடல் மடுத்துஉழக்கிச்

செயல்பாய் கடல்தானை செங்களம் கொள அம்மை

                திக்குவிச யம்கொண்டநாள்

        தெய்வக் கயல்கொடிகள் திசைதிசை எடுத்துஎனத்

                திக்குஎட்டும் முட்டவெடிபோய்க்

கயல்பாய் குரம்புஅணை பெரும்பணைத் தமிழ்மதுரை

                காவலன் மகள் வருகவே

        கற்பக அடவியில் கடம்பாடு அடவிப்பொலி

                கயல்கண்நா யகிவருகவே.

பாடல் விளக்கம்

பாண்டியனின் மதுரை நகரத்தின் சோலைகளில், சந்திரன் சூழ்ந்திருக்கின்ற பலாமரத்தில் முட்கள் நிறைந்த பழங்கள் காணப்படுகின்றன. நீண்டு வளர்ந்த தென்னை மரங்களில் மூன்று பக்கமும் புடைத்திருக்கின்ற தேங்காய்கள் நீரைச் சிந்துகின்றன. அந்நீரைப்பருகிய மேகங்கள் கருநிறமாக வானத்தைச் சூழ்ந்துள்ளன. அதுபோல, கடல் போன்ற சேனைகளைக் கொண்டு, ஏழு உலகங்களையும் வென்று, நீ திசையெங்கும் வெற்றியடைந்தாய். வெற்றியடைந்ததன் காரணமாக, வெற்றிக் கொடிகளைத் திசையெங்கும் எடுத்து வந்ததுபோல, பாண்டியனின் மதுரையில் அனைத்துத் திசைகளிலும் கயல்மீன்கள் பாய்கின்றன. வரம்புகள் நெருங்கிய பெரிய வயல்கள் காணப்படுகின்றன. அத்தகு சிறப்பு மிக்க தமிழ் வளர்த்த மதுரைக்குக் காவலனாக விளங்கும் பாண்டியன் மகளே! வருக.

பாடல் 4

வடம்பட்ட நின்துணைக் கொங்கைக் குடம்கொட்டு

                மதுரஅமு துண்டுகடைவாய்

        வழியும்வெள் அருவியென நிலவுபொழி கிம்புரி

                மருப்பில் பொருப்புஇடித்துத்

தடம்பட்ட பொன்தாது சிந்துரம் கும்பத்

                தலத்துஅணிவது ஒப்பஅப்பிச்

        சலராசி ஏழும் தடக்கையின் முகந்துபின்

                தானநீ ரால்நிரப்பி

முடம்பட்ட மதியம் குசப்படை எனக்ககன

                முகடுகை தடவிஉடுமீன்

        முத்தம் பதித்திட்ட முகபடாம் எனவெழு

                முகில்படாம் நெற்றிசுற்றும்

கடம்பட்ட சிறுகண் பெருங்கொலைய மழஇளங்

                களிறுஈன்ற பிடிவருகவே

        கற்பக அடவியில் கடம்பாடு அடவிப்பொலி

                கயல்கண்நா யகிவருகவே

பாடல் விளக்கம்

மணி வடங்கள் பொருந்திய உன் மார்பில் பாலருந்தி, கிம்புரிப் பூண் அணிந்த தந்தங்களினால் மலையை இடித்து, செந்தூளை மத்தகத்தில் பூசி, ஏழு கடலையும் தன் பெரிய கையால் முகந்து, குறைத்து, பின் மத நீரினால் நிறைத்து, வானத்து உச்சியைத் துதிக்கையால் தடவி, நட்சத்திரங்கள் ஆகிய முத்துக்களைத் தன் முகத்தில் பதித்துக் கொண்டு, ஏழு முகில்கள் என்ற கூட்டங்களை நெற்றியில் சுற்றி, மதம் பொருந்திய சிறிய கண்களையும் பெரியகொலைத் தொழிலையுமுடைய பிள்ளையாரைப் பெற்ற பெண் யானையே! வருக.

பாடல் 5

தேனொழுகு கஞ்சப் பொலன்சீ றடிக்கூட்டு

                செம்பஞ்சி யின்குழம்பால்

        தெள்ளமுது இறைக்கும் பசுங்குழவி வெண்திங்கள்

                செக்கர்மதி யாக்கரைபொரும்

வானொழுகு துங்கத் தரங்கப் பெருங்கங்கை

                வாணிநதி யாச்சிவபிரான்

        மகுடகோ டீரத்து அடிச்சுவடு அழுத்தியிடு

                மரகதக் கொம்புகதிர்கால்

மீன்ஒழுகு மாயிரு விசும்பில் செலும்கடவுள்

                வேழத்தின் மத்தகத்து

        வீற்றிருக் கும்சேய் இழைக்கும் பசுங்கமுகு

                வெண்கவரி வீசும்வாசக்

கான்ஒழுகு தடமலர்க் கடிபொழில் கூடல்வளர்

                கவுரியன் மகள்வருகவே

        கற்பக அடவியில் கடம்பாடு அவிப்பொலி

                கயல்கண்நா யகிவருகவே

பாடல் விளக்கம்

உன் சிறிய பாதங்கள் செம்பஞ்சு குழம்பினால் பூசப்பட்டுள்ளன. அச்சீறடிகள் சிவபெருமானின் தலை மீது படுவதால், அங்குள்ள வெண்மை நிறமுடைய சந்திரன் சிவந்த நிறம் பெறுகின்றான். சிவனின் தலையில் உள்ள கங்கையாறு சோணை நதியாக உருப்பெருகின்றது. சிவபெருமானுடைய மகுடமான சடையில் உன் பாதத்தின் சுவடுபட அழுத்துகின்ற பச்சை நிறமுள்ள பூங்கொம்பே! (ஊடல் காலத்தில் சிவபெருமானின் முடி மீது பார்வதி தேவியின் சீறடி படும் என்பது புராணச் செய்தி) ஒளியை வீசுகின்ற நட்சத்திரங்கள் நடக்கின்ற பெரிய வானத்தில் ஐராவதமாகிய யானையின் முதுகில் வீற்றிருக்கின்ற இந்திராணிக்கு, பாண்டியனின் நாட்டில் உள்ள பச்சைநிற கமுகமரம் வெண்கவரி வீசுவது போல உயர்ந்து நிற்கின்றது. அச்சிறப்பு மிக்க பூக்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த கூடலில் வளர்கின்ற பாண்டியன் மகளே! வருக.