சனி, 12 ஆகஸ்ட், 2023

சுடர்த்தொடீஇ! கேளாய்!

கலித்தொகை 

பாடியவர்  - கபிலர்

திணை  - குறிஞ்சி

துறை - “புகாஅக்காலைப் புக்கு எதிர்ப்பட்டுழி பகாவிருந்தின்  பகுதிக்கண்” தலைவி தோழிக்குக் கூறியது.

துறை விளக்கம்

தலைவன் தலைவியைக் காண வேண்டும் என ஆசையுற்றான். அதனால் தான் புகுதற்குத் தகுதியில்லாத பகற்பொழுதில் தலைவன், உணவு நேரத்தில் தலைவியின் வீட்டுக்குள் புகுதல். அவ்வாறு புகுந்தவனைத் தலைவி காட்டிக்கொடுக்காமல் தாயின்முன் சமாளித்து ஏற்றுக்கொள்ளல்.

புகாஅக்காலை : உணவு உண்ணும் நேரம். பகல் சாப்பிடும் நேரம் பார்த்து ஒரு வீட்டிற்குள் புகுதல்.  

பகாஅ விருந்து - ஆனால் தலைவன் விலக்கப்படாத விருந்தாக தலைவி (காதலி) ஏற்றுக் கொள்கிறாள்.  

பாடல்

சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்

மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய

கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி,

நோ தக்க செய்யும் சிறு, பட்டி, மேல் ஓர் நாள்,

அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே!    5

உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை,

'அடர் பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!

உண்ணு நீர் ஊட்டி வா' என்றாள்: என, யானும்

தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை

வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு,      10

'அன்னாய்! இவனொருவன் செய்தது காண்' என்றேனா,

அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,

'உண்ணு நீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்

தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்

கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக் கூட்டம்       15

செய்தான், அக் கள்வன் மகன்.   

பாடல் விளக்கம்

ஒளிமிக்க வளையல் அணிந்த தோழியே! நான் சொல்வதைக் கேள். தெருவில் நாம் மணலால் செய்த சிறுவீட்டைத் தன்காலால் கலைத்தும், நாம் கூந்தலில் சூடிய மலர்மாலையை அறுத்தும், வரியை உடைய நாம் விளையாடிக் கொண்டிருந்த பந்தைப் பறித்துக் கொண்டு ஓடியும் நாம் வருந்தத் தக்க செயல்களைச் செய்யும் சிறியவனாகக் கட்டுக்கடங்காமல் திரிந்தான். முன்பு ஒருநாள் தாயும் (அம்மாவும்) நானும் வீட்டில் இருந்தபோது வந்தான். வீட்டின் வாசலில் நின்று, “வீட்டில் இருப்பவர்களே! உண்ணும் நீரை உண்ண விரும்பினேன்” என்று குரல் கொடுத்தான். அவ்வாறு வந்து கேட்டவனுக்கு என் தாய், என்னிடம், “ஒளி வீசும் அணிகலன்களை அணிந்தவளே. தங்கத்தாலான குவளையில் கொண்டு போய் நீர் கொடுத்து வா” என்றாள். அவ்வாறு தாய் சொன்னதால் வந்தவன் சிறு பட்டியாய் இருக்கும் தன்மை அறியாமல் தண்ணீர் கொண்டு போனேன். நான் சென்றதும் வளையல் அணிந்த முன் கையைப் பிடித்து இழுத்தான். (சிறுபட்டி எனில் பட்டியில் அகப்படாத மாடு போன்றவன் எனப் பொருள்) அதனால் நான் வருந்தி அம்மா என அலறி இவன் செய்த செய்த செயலைப் பார்த்தாயா? என்றேன். அம்மா அலறிக்கொண்டு ஓடி வந்தாள். நான் அவன் செய்த குறும்புச் செயலை மறைத்து, இவன் நீர் குடிக்கும் போது விக்கல் எடுத்து வருந்தினான், அதனால் கத்தினேன்” என்றேன். நான் மறைத்துக் கூறியதை ஏற்று அம்மாவும் அவன் முதுகைப் பலமுறை தடவிக் கொடுத்தாள். அப்போது அக்கள்வன் மகன் (அந்தத் திருடன்) தன் கடைக்கண்ணால் என்னைக் கொல்வது போல் திருட்டுப்பார்வை பார்த்தான். தன் புன்முறுவலால் என்னை மயக்கி என்னுள்ளத்தில் புகுந்தான்” என்று தன் தோழியிடம் தலைவி கூறுகின்றாள்.

 

நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க!

 

ஐங்குறுநூறு

திணை - மருதம்

பாடியவர் - ஓரம்போகியார்

கூற்று - புறத்தொழுக்கத்திலே நெடுநாள் ஒழுகி, “இது தகாது” எனத் தெளிந்த மனத்தனாய் மீண்டு தலைவியோடு கூடி ஒழுகா நின்ற தலைமகள் தோழியோடு சொல்லாடி “யான் அவ்வாறு ஒழுக, நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்கு அவள் சொல்லியது.

கூற்று விளக்கம் - பரத்தையர் உறவில் நெடுநாள் வாழ்ந்த தலைமகன் தன் பிழையுணர்ந்து தன் மனைவியை மீண்டும் கூடினாள். அப்பொழுது தோழியை நோக்கி, “நான் உங்களைப் பிரிந்து வாழும் நாட்களில் நீங்கள் என்ன எண்ணியிருந்தீர்கள்?” என வினவினான். அதற்கு விடையாகத் தோழி சொல்லியது.

கூற்று - தோழி தலைவனிடம் கூறியது.

பாடல்
வாழி ஆதன் வாழி அவினி
நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க!
என வேட்டோளே, யாயே! யாமே,
நனைய காஞ்சிச் சினைய சிறு மீன்
யாணர் ஊரன் வாழ்க!
பாணனும் வாழ்க என வேட்டேமே.

பாடல் விளக்கம்

         “தலைவனே! எம் மன்னனாகிய ஆதன் அவினி நெடிது வாழ்க! எம் நாட்டு வயல்களில் நெல்வளம் சிறக்கட்டும்! நாட்டில் பொன் வளம் பெருகட்டும் என்று விரும்புகின்றாள் எம் தாய் (தலைவி). அரும்புகள் நிரம்பிய புன்னை மரங்களும், முட்டைகளை மிகுதியாகக் கொண்ட சிறுமீன்களும் நிறைந்த ஊரின் தலைவன் வாழட்டும்! அவனுடன் அவன் பாணனும் வாழட்டும் என விரும்புகிறேன் எனத் தலைவி கூறினாள்” என்று தோழி தலைவனிடம் கூறுகின்றாள்.

குறிப்பு

சேர நாட்டைச் சேர்ந்த மன்னர்கள்  ஆதன் என்று அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர்.  முதல் வரி மன்னனை வாழ்த்துகின்றது. தோழி, தலைவியைத் தாய் என்று குறிப்பிடுகின்றாள்.

உள்ளுறை

          நறுமணம் கமழும் காஞ்சி மலர்களும், புலால் நாற்றம் வீசும் மீன்களும் ஒரு சேர விளையும் நாட்டைச் சேர்ந்தவன் தலைவன் என்று கூறியது, கற்பில் சிறந்த குல மகளிரையும், பரத்தையரையும் ஒரு நிகராகக் கொண்டு தலைவன் வாழ்கின்றான் என்பதைக் குறிப்பிடுகின்றது.

 

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;

 

குறுந்தொகை

திணை குறிஞ்சி

பாடியவர்தேவகுலத்தார்

துறை - தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி, தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது.

துறை விளக்கம் தலைவன் தலைவி வீட்டின் அருகே வந்து நின்றான்.  தலைவியை அவன் மணந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவன் இயல்புகளை இகழ்ந்து கூறுகின்றாள் தோழி. அதைக் கேட்ட தலைவி, தலைவனின் இயல்புகளைப் புகழ்ந்து கூறுகின்றாள்.

பாடல்

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;

நீரினும் ஆர் அளவின்றே- சாரல்

கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு,

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

பாடல் விளக்கம்

“எம் தோழியே! கரிய கொம்புகளில்  பூத்துக் குலுங்குகின்ற குறிஞ்சிப் பூக்களில் உள்ள தேனை எடுத்து, மலையில் உள்ள உயர்ந்த மரங்களில் தேனடைகளைச் சேகரித்து வைக்கின்ற  மலைநாட்டில் வாழ்கின்றவன் எம் தலைவன்.  அவனோடு நான் கொண்ட நட்பு, நிலத்தை விடப் பெரியது, வானத்தை விட உயர்ந்தது. கடலைவிட ஆழமானது” என்று தலைவி தோழிக்குக் கூறுகின்றாள்.

குறிப்பு

         தலைவன் மீது தலைவி கொண்ட அன்பு மனம், மொழி, மெய் என்ற மூன்றாலும் அளந்து காண்பதற்கு அரிது என்பதைத் தலைவி நிலம், வானம், கடல் ஆகியவற்றோடு ஒப்ப வைத்து எண்ணுகின்றாள். நிலம் நீரின்றிப் பயன்படாது. வானம் மேல் நின்ற அளவில் பயன்படாது. கடல் சூழ்ந்து நின்றாலும் பயன்தருவதில்லை. மாறாக, மேகங்கள் கடல் நீரை முகந்து, வானத்தில் உயர்ந்து எழுந்து, மழையாகப் பொழிந்தால் மட்டுமே நிலத்திற்குப் பயன் உண்டாகும். இம்மூன்றன் சேர்த்கை போல எங்கள் இருவருடைய நட்பும் இயைந்த நட்பு என்ற தலைவி கூறுகின்றாள்.