சனி, 7 அக்டோபர், 2023

கட்டை விரல் - அண்ணாதுரை

 

கட்டை விரல் - அண்ணாதுரை

(சுருக்கம்)

ஏகலைவன்:

ஏகலைவன் வேடர் குலத்தைச் சேர்ந்தவன். தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவன் என்றாலும் நல்ல பண்புகள் பல பெற்றவன். துரோணாச்சாரியாரை நேரில் காணாவிட்டாலும் தன் மனதில் குருவாக நினைத்துக் கொண்டவன். அவன் வில் வித்தையில் வல்லவன்.

அர்ஜுனனின் கோபம்:

இதைக் கேட்ட அர்ஜுனன் தன் குருவான துரோணாச்சாரியாரிடம் ‘தாங்கள் எனக்கு மட்டுமே வில் வித்தையைக் கற்றுக் கொடுத்தீர்கள் என்று நம்பி மோசம் போனேன்’ என்று கோபம் கொண்டான். குரு சீடன் உறவே இதனால் முறிந்துபோய் விடுமோ என்று அஞ்சிய குரு அவன் கட்டளையை ஏற்று ஏகலைவனை வீழ்த்த எண்ணினார்.

குரு - ஏகலைவன் சந்திப்பு:

ஏகலைவனைச் சந்தித்த அவர் அவனது குரு பக்தியைக் கண்டு வியந்தார். அவனைச் சோதிக்க விரும்பி ‘ஏகலைவா நீ என்னை குரு என்று அழைக்கிறாய். ஆனால் நான் உனக்கு சிட்சை கொடுத்ததில்லை. நீயும் எனக்குக் குரு காணிக்கை தரவில்லை’ என்று கூறினார். உடனே ஏகலைவன் ‘குருவே தாங்கள் கேட்கும் காணிக்கை எதுவாயினும் நான் தருவேன்’ என்று பணிவுடன் கூறினான். அதைக் கேட்டு சிரித்த குரு ‘உன் வாய் வார்த்தையில் நான் மயங்க மாட்டேன். நீ தர முடியாத காணிக்கையை நான் கேட்பேன். பின்பு அதை தரமுடியாது நீ வருத்தம் கொள்ள நேரிடும்’ என்று எச்சரித்தார். அது கேட்ட ஏகலைவன் ‘இல்லை குருவே தாங்கள் கேட்கும் எந்தக் காணிக்கையையும் நான் தருவேன்’ என்று உறுதி கூறினான்.

கட்டை விரல் காணிக்கை:

 ‘அப்படியானால் குரு காணிக்கையாக உன் கட்டைவிரலை அறுத்துக் கொடு’ என்று கேட்டார். அது கேட்ட ஏகலைவன் ‘சுவாமி இன்னும் அரை மணி நேரத்தில் வந்து விடுகின்றேன்’ என்று கூறிச் சென்று நீர் எடுத்து வந்து தன் குருவின் பாதங்களைக் கழுவி ‘இதோ என் காணிக்கை’ என்று தன் வலது கட்டைவிரலை அறுத்து அவர் பாதங்களில் வைத்தான். அவன் செயலைக் கண்டு திகைத்த குரு மயங்கி விழுந்தார்.

கதையின் நீதி:

  • ஒரு குற்றமும் செய்யாமலேயே தன் வலதுகைக் கட்டைவிரலை இழந்து தன் குரு பக்தியின் மேன்மையை உலகறியச் செய்தான் ஏகலைவன்.
  • ஆனால் நேர்மையான குருவாக இருந்து அனைத்து மாணவர்களையும் சரிசமமாகப் பார்க்காது ஏகலைவனுக்குத் தெரிந்தே துரோகம் செய்தார் துரோணாச்சாரியார்.
  • தன் பொறாமை எண்ணத்தால் தான் மட்டுமே புகழ் பெற வேண்டும் என்று எண்ணி குருவிடம் ஏகலைவனை வீழ்த்துமாறு கட்டளையிட்டதால் ஏகலைவனை விடத் தாழ்ந்து போனான் அர்ஜுனன்.

ஆசிரியர் கருத்து:

இந்தக் கதையை நாளைய சமுதாயத்தினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தக் கதை பின்னாளில் வெவ்வேறு மாற்றங்களைப் பெறலாம்.

  • அர்ஜுனன் பொறாமை குணம் கொள்ளாமல் ஏகலவனைக் கண்டு பெருமை கொள்ளலாம்.
  • கண்ணால் காணாத தன் குருவிற்காக தன் கட்டைவிரலை இழக்கத் தயாரான ஏகலவனைக் கண்டு அவன் கூட்டத்தார் சினம் கொள்கின்றனர். ‘ஏகலைவா நாம் காட்டில் வாழ்வதால் இயல்பாகவே நாம் வில் வித்தையில் வல்லவர்கள். அதை உணராது நீ உன் கட்டைவிரலை இழந்து நம் வேடர் குலத்திற்கு அவமானத்தைச் சேர்க்காதே என அறிவுரை கூறியபோதும், அதை ஏற்காது தன் கட்டைவிரலை இழந்து வந்த ஏகலைவன் மீது கோபம் கொண்டு அவனை வெறுத்து ஒதுக்கலாம்.
  • ஆசிரியர் என்பவர் மாணவர்களின் வாழ்விற்கு வழிகாட்டுபவர் என்ற நிலையிலிருந்து இறங்கி, தன் மாணவனுக்குத் தெரிந்தே துரோகம் செய்த துரோணாச்சாரியரை மக்கள் இழிந்து பேசலாம்.
  • ஆகவே காலம்காலமாக நாம் கூறிக்கொண்டிருக்கும் புராணக் கதைகளை அந்தந்த காலத்திற்குத் தகுந்தாற்போல் சற்று மாற்றியமைத்து நீதி புகட்ட வேண்டியது நம் தலையாய கடமை என்கின்றார் அறிஞர் அண்ணா.

நிலத்தை ஜெயித்த விதை

 

நிலத்தை ஜெயித்த விதை

இரா.வைரமுத்து

அது எப்படி

எட்டயபுரத்தில் மட்டும்

ஒருத்திக்கு

நெருப்பைச் சுமந்த கருப்பை

அதுகூடச் சாத்தியம்தான்

ஆனால் இது எப்படி?

ஏகாதிபத்திய எரிமலையை

ஒரு

தீக்குச்சி சுட்டதே

இது எப்படி?

ஒரு வீரிய விதை

முளைக்கும் போதே

பூமியை ஜெயிக்கிறதே

அப்படித்தான் அது

பாரதீ

உனக்கு என் ராஜ வணக்கம்

சில நூற்றாண்டுகளின்

நித்திரை கலைந்து

தமிழ்

உன் தோளில் தொங்கிச்

சோம்பல் முறித்தது

உன் பேனா

தமிழ்த்தாயின் கூந்தலுக்குச்

சிக்கெடுத்தது

உன் கிழிசல் கோட்டு

கவிதாதேவிக்குப்

பீதாம்பரமானது

உன் எழுத்தில்தான்

முதன்முதலில்

வார்த்தை வாக்கியத்தைப் பேசியது.

உன் பாதங்களுக்குப்

பூச்சொரிவது – எங்கள்

பொறுப்பு.

ஆனால் பொறு.

உன் பாதங்களில்

சொரிவதற்கு

எங்கள்

பூக்களைக் கொஞ்சம்

புனிதப்படுத்திக் கொள்கிறோம்.

பாடல் விளக்கம்

    பாரதியார் சொல்லிலும் செயலிலும் நெருப்புப் போன்றவர். அவரது சுதந்திரப் பாடல்களும் ஆங்கிலேயருக்கு எதிராக நெருப்பாகச் சுடர்விட்டு எரிந்தது. பாரதி என்னும் தீக்குச்சி அந்நிய ஏகாதிபத்திய எரிமலையைத் தனி ஒருவனாக நின்று சுட்டது. நிலத்தை ஒரு சிறிய விதை பிறந்து வெளிவருவது விதைக்கு வெற்றி. பாரதி என்ற விதை இந்திய நாடு என்னும் நிலத்தில் வீரியம் மிக்கதாக முளைத்து எழுந்தது.

         கவிதைகளுக்குரிய வளமையின்றி சில நூற்றாண்டுகளாக உறங்கிக் கிடந்த தமிழன்னை பாரதியின் வருகையால் உறக்கம் கலைந்து எழுந்தாள். உரிமையும் மகிழ்ச்சியும் கண்டுவிட்ட துடிப்பில் பாரதியின் தோள்களில் சோம்பல் முறித்தாள். பாரதியின் எழுதுகோல் எளிமை, இனிமை, இயல்பு ஆகியவற்றைக் கவிதையாகத் தந்தது. அவருடைய கிழிந்த ஆடையே கவிதைத் தாய்க்குப் பட்டாடையாக ஆனது.

        பாரதியைப் போற்ற வேண்டியது கவிஞர்களின் கடமை. கவிதைப் பூக்களால் அருடைய பாதங்களுக்குப் பூசை செய்ய வேண்டும் என்பது கவிஞரின் எண்ணம். ஆனால் பாரதியைக் பாராட்டிப் பாத பூசை செய்வதற்குக் கவிதையில் தூய்மை காண வேண்டும். உண்மை காண வேண்டும் என்று கூறுகின்றார் கவிஞர் வைரமுத்து.

செந்தமிழ் நாடு

 

செந்தமிழ் நாடு

செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே

வேதம் நிறைந்த தமிழ்நாடு – உயர்

வீரம் செறிந்த தமிழ்நாடு – நல்ல

காதல் புரியும் அரம்பையர் போல் இளம்

கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு

காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்

கண்டதோர் வையை பொருனைநதி-என

மேவி யாறு பலவோடத்-திரு

மேனி செழித்த தமிழ்நாடு

முத்தமிழ் மாமுனி நீள்வரையே – நின்று

மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு – செல்வம்

எத்தணை யுண்டு புவிமீதே – அவை

யாவும் படைத்த தமிழ்நாடு

நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று

நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட

மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ்

மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.

கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க்

கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல

பல்வித மாயின சாத்திரத்தின்-மணம்

பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை

அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் மணி

ஆரம் படைத்த தமிழ்நாடு

சிங்களம் புட்பகம் சாவகம் ஆதிய

தீவு பலவினுஞ் சென்றேறி – அங்கு

தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று

சால்புறக் கண்டவர் தாய்நாடு

விண்ணை இடிக்கும் தலை இமயம் – எனும்

வெள்பை இடிக்கும் திறனுடையார் – சமர்

பண்ணிக் கலிங்கத்து இருள் கெடுத்தார் தமிழ்ப்

பார்த்திவர் நின்ற தமிழ்நாடு

சீன மிசிரம் யவனரகம் – இன்னும்

தேசம் பலவும் புகழ் வீசிக் – கலை

ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக

நன்று வளர்த்த தமிழ்நாடு

பாடல் விளக்கம்

  • இப்பாடலில் பாரதியார் தமிழ்நாட்டின் சிறப்புகளை  எடுத்துரைக்கின்றார்.
  • செந்தமிழ் நாடு என்ற சொல் செவிக்கு இனிமை தருகிறது. அது என் முன்னோர்களின் நாடு என்று கூறுவதில் உள்ளம் பெருமிதம் கொள்கின்றது.
  • காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வையை, பொருநைநதி எனப் பல ஆறுகள் ஓடி வளம் செழித்த நாடு.
  • இறைவனைப் போற்றிக் பரவும் வேதங்கள் பல நிறைந்து, தமிழர்களின் அடையாளமாகத் திகழும் காதலையும் வீரத்தையும் போற்றிய நாடு. தேவலோக மங்கையர் போன்று அழகில் சிறந்த பெண்கள் நிறைந்த நாடு.
  • முத்தமிழ்த் தந்த அகத்திய முனிவர் வாழ்ந்த பொதிய மலையை அரணாகப் பெற்று, உலகத்தின் செல்வங்கள் அனைத்தும் நிரம்பிய சிறப்புடையது.
  • தெற்கே கடலால் சூழப்பட்ட கன்னியாகுமரியையும், வடக்கே திருமால் கோயில் கொண்டுள்ள வேங்கடமலையையும் கொண்ட பெரிய நிலப்பரப்புடையது.
  • கல்வியால் சிறந்த நாடு. காலத்தால் அழியாத கம்பனின் கம்ராமாயணத்தால் புகழ் பெற்ற நாடு. கணிதம், வான சாத்திரங்கள், வேத சாத்திரங்கள் உள்ளிட்ட பல கலைகளை உலகுக்குக் கொண்டு சேர்த்த நாடு.
  • வள்ளுவனின் திருக்குறளால் புகழ் பெற்றது. மக்களுக்கு அறமுரைத்த சிலப்பதிகாரத்தைப் பெற்ற நாடு.
  • இலங்கை, சாவகம், புட்பகம் முதலான தீவுகளில் தங்கள் புலிக்கொடியையும், மீன் கொடியையும் நாட்டி, உலகைத் தங்கள் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஆட்சி புரிந்த பாண்டியர்களும், சோழர்களும் வாழ்ந்த நாடு.
  • வானத்தை முட்டும் அளவு உயர்ந்து நிற்கின்ற இமயமலையின் சிகரங்களை இடித்துத் தூளாக்கும் ஆற்றல் உடையவர் தமிழ் மன்னர். அத்தகு சிறப்புடைய வீரம் பொருந்திய மன்னர்கள் பலரும் வாழ்ந்த புகழுடையது தமிழ்நாடு.
  • சீனம், எகிப்து, கிரேக்க நாடு எனப் பல நாடுகளில் வாணிகம் செய்து சிறப்புற்ற நாடு. கலை, படைத்தொழில், வாணிகம் என அனைத்து நிலைகளிலும் புகழ் பெற்ற நாடு.