திங்கள், 29 ஜனவரி, 2024

அந்தகக்கவி வீரராகவ முதலியார் - இம்பர்வான் எல்லை

 

அந்தகக்கவி வீரராகவ முதலியார்

இராமன் பரிசளித்த யானையைப் புகழ்தல்

இம்பர்வான் எல்லை இராமனையே பாடி

என்கொணர்ந்தாய் பாணாநீ என்றாள் பாணி

வம்பதாம் களபமென்றேன், பூசுமென்றாள்

மாதங்கம் என்றேன், யாம் வாழ்ந்தேம் என்றாள்

பம்புசீர் வேழம் என்றேன், தின்னு மென்றாள்

பகடென்றேன், உழுமென்றாள் பழனந் தன்னை

கம்பமா என்றேன், நல்களியாம் என்றாள்

கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே

விளக்கம்

பாடினி என்னும் பாடல் பாடும் பெண், அரசர் வீடுகளில் பாடும் பாணனைப் பார்த்து, “இவ்வுலகத்திலும் மேல் உலகத்திலும் புகழ் பெற்ற இராமன் என்ற வள்ளலைப் பாடி என்ன பரிசில் கொண்டு வந்தாய்?” என்று வினவினாள். அதற்குப் பாணன் பதில் கூறத் தொடங்கினான்.

  • பாணன் களபம் (மும்மதம் கொண்ட யானைக் கன்று) என்று கூற, அவர் மனைவி அதனை சந்தனம் என்று எண்ணி, உடலில் பூசிக் கொள்ளுங்கள் என்றாள். 
  • மாதங்கம் (சிறப்பினைத் தரும் பொன்) என்று கூற, மிகுதியான பொன் என்று புரிந்து கொண்டு, நாம் எல்லோரும் புகழும் சிறந்த வாழ்க்கையினை அடைந்தோம் என்றாள். 
  • மிக்க புகழுடைய வேழம் என்று கூற, அவள் அதை கரும்பு என்று எண்ணி சாப்பிடுங்கள் என்றாள். 
  • பகடு என்று கூற, அவள் அதை மாடு என்று நினைத்து வயலை உழும் என்றாள். 
  • இறுதியில் கம்பமா என்றுரைக்க, அவள் கம்பு தானியத்தின் மாவு என்று எண்ணி நல்ல களியாகச் செய்யலாம் என்றாள். 
  • புலவர் பொறுமையிழந்து தான் கொண்டு வந்தது கைம்மா என்று கூற, கொண்டு வந்த பரிசில் யானை என்பதை உணர்ந்து, நம் வயிற்றுக்கு உணவில்லாத நிலையில் யானைக்கு எவ்வாறு உணவிடுவது என்று வீணாகக் கலங்கினாள்.
  • இப்பாடலில் யானைக்கு வழங்கப்படுகின்ற பல்வேறு பெயர்களைப் பற்றி அறிய முடிகின்றது.

ஔவையார் - வான் குருவியின் கூடு

 

ஔவையார் – தனிப்பாடல்

வான் குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கறையான்

தேன்சிலம்பி யாவருக்கும் செய்யரிதால் – யாம் பெரிதும்

வல்லோமே என்று வலிமை சொல் வேண்டாங்காண்

எல்லார்க்கும் ஒவ்வான்று எளிது.

விளக்கம்

ஔவையார் கம்பரைப் பழித்துப் பாடல் பாடினார். அதைக் கேட்ட சோழ மன்னன் வருத்தமடைந்து, “கம்பனைப் போல பெரிய காவியம் செய்து சிறப்புற்றவர் வேறு யார் இருக்கின்றனர்” என்று கேட்டார். அதற்கு ஔவையார், “சோழனே! தூக்கணாங்குருவியின் கூடு குளவிகள் கட்டுகின்ற அரக்குக்கூடு, கரையானின் புற்று, தேனீக்களின் கூடு, சிலந்தியின் வலை இவற்றைப்போல எவராவது செய்ய முடியுமா? யாராலும் செய்ய முடியாது. அதனால் அவர்களை மட்டும் தொழில்நுட்பத்தில் தலைசிறந்தவர்கள் என்று பாராட்டலாமா? அஃதன்றி வேறு எதுவும் அந்தச் சிற்றினங்களுக்குத் தெரியாது. அது போலவேதான் கவிதையும். ஒவ்வொரு புலவர்க்கும் ஒவ்வொன்று எளிதாக இருக்கும். அந்தந்த வல்லமையினை அறிந்துதான் பாராட்டுதல் வேண்டும். அதுதான் சிறப்பு” என்று கூறினார்.

காளமேகப்புலவர் - ஆமணக்கும் யானைக்கும் சிலேடை

 

காளமேகப்புலவர்

ஆமணக்கும் யானைக்கும் சிலேடை

பாடல்

முத்திருக்கும் கொம்பசைக்கும் மூரித்தண்டு ஏந்திவரும்

கொத்திருக்கும் நேரே குலைசாய்க்கும் – எத்திசைக்கும்

தேமணக்கும் சோலைத் திருமலைராயன் வரையில்

ஆமணக்கு மால்யானை யாம்.

விளக்கம்

எல்லாப் பக்கங்களிலும் மணம்வீசும் சோலைகளை மிகுதியாக உடையது திருமலைராயனது மலை.

ஆமணக்கு

முத்துக்களாகிய விதைகளைத் தன்னிடத்துப் பெற்றிருக்கும். கிளைகளை அசைத்துக் கொண்டே நிற்கும். முதிர்வுற்ற தண்டைத் தாங்கி வளர்ந்து வரும். லிங்கத்தைப் போன்ற காய்களைக் கொத்துக் கொத்தாகப் பெற்றிருக்கும். எதிர் நின்று காண்பவர்களைக் கவருகின்ற குலைகளைச் சாய்த்துக் கொண்டிருக்கும்.

யானை

நல் ஒளி வீசும் முத்துக்களை நெற்றியில் பெற்றிருக்கும். தனது கொம்பாகிய தந்தங்களை அசைத்துக் கொண்டே இருக்கும். வன்மையான கட்டைகளை மிகவும் எளிமையாக துதிக்கையால் தூக்கி வந்து கொண்டே இருக்கும்.  பாகர்கள் அங்குசத்தால் குத்திய வடுக்கள் காணப்படும். மலையில் உள்ள வாழைக் குலைகளை முறித்துப் பூமியிலே விழும்படி அடித்து உண்ணும்.