வெள்ளி, 12 மே, 2023

நந்திக் கலம்பகம் - காயிதே மில்லத் கல்லூரி பாடம்

 

நந்திக் கலம்பகம்

1. கண்டோர் கூற்று

உரைவரம் பிகந்த உயர்புகழ்ப் பல்லவன்
அரசர் கோமான் அடுபோர் நந்தி
மாவெள் ளாற்று மேவலர்க் கடந்த
செருவே லுயர்வு பாடினன் கொல்லோ
நெருநல் துணியரைச் சுற்றிப்
பரடு திறப்பத் தன்னால் பல்கடைத்
திரிந்த பாணன் நறுந்தார் பெற்றுக்
காஅர் தளிர்த்த கானக் கொன்றையின்
புதுப்பூப் பொலன்கலன் அணிந்து
விளங்கொளி ஆனனன் இப்போது
இளங்களி யானை எருத்தமிசை யன்னே.

விளக்கம்

பாணன் ஒருவன் வீதி வழியே வந்து கொண்டிருக்கின்றான். முன்பு தன் ஆடையின் துண்டு ஒன்றை இடையிலே சுற்றிக் கொண்டவனாய், உடுத்தியிருக்கும் ஆடை அகலம் இல்லாமல் கால்கள் மறையாது வெளிப்படும்படியாக நடந்து சென்று வீடு வீடாகத் திரிந்திருந்தான். அவனைக் கண்டோர் யாவரும் வியப்படைகின்றனர். அஏனெனில், இப்போது அவன் மாலையும், பொற்கலனும் அணிந்து கொண்டு, யானையின் மேல் ஏறி, அழகான தோற்றத்துடன் வருகின்றான். இச்சிறப்பு அவனுக்கு எவ்வாறு கிடைத்திருக்கும் என்று எண்ணி முடிவில், வெள்ளாற்றங்கரையில் பகைவரை வென்ற பெருமைக்குரிய நந்தி மன்னனைப் பாடிப் இப்பரிசுகளைப் பெற்றிருப்பான் என்று வியந்து கூறுகின்றனர். இதனால் நந்திவர்மனின் கொடைச் சிறப்பு விளக்கம் பெறுகின்றது.

2. தலைவன் தன் நெஞ்சொடு கிளத்தல்

மயில்கண்டால் மயிலுக்கே வருந்தி யாங்கே
மான் கண்டால் மனைக்கே வாடி மாதர்
குயிற்கண்டாற் குயிலுக்கே குழைதி ஆகின்
கொடுஞ்சுரம்போக் கொழிநெஞ்சே! கூடாமன்னர்
எயில் கொண்டான் மல்லையங்கோன் நந்தி வேந்தன்
இகல்கொண்டார் இருங்கடம்பூர் விசும்புக்கேற்றி
அயில் கொண்டான் காவிரிநாட் டன்னப்பேடை
அதிசயிக்கும் நடையாரை அகலன் நூற்றேன்.

விளக்கம்

பொருள் தேடுவதற்காகத் தலைவியை விட்டுப் பிரிந்து செல்ல எண்ணிய தலைவன் தன் நெஞ்சுக்குக் கூறுகின்றான். “நெஞ்சே! பகை மன்னனின் மதிலைக் கைக்கொண்டவனும், அழகிய மல்லைக்குத் தலைவனும், கடம்பூர் மக்களைத் தேவருலகத்திற்குக் குடியேறச் செய்து வெற்றி கொண்டவனும் ஆகிய நந்திவர்மனின் காவிரி நீர் பாயும் நாட்டில் உள்ள பெண் அன்னமும் கண்டு வியக்கும்படியான மென்மையான நடை கொண்டவள் எம் தலைவி. அவளை விட்டுப் பொருள் தேடப் பிரிந்து செல்ல எண்ணுகின்றேன். ஆனால், பொருள்தேடச் செல்லும் வழியில், சுற்றித் திரியும் மயிலைக் கண்டால், அதன் சாயல் எம் தலைவியின் முகச் சாயலையும், ஓடித்திரியும் மானைக் கண்டால் அதன் கண்கள் எம் தலைவியின் கண்களையும், கூவுகின்ற குயிலைக் கண்டால், அதன் குரல் தலைவியின் குரலையும் போன்றதாக எண்ணி என் மனம் வருத்தமடையும். தலைவியை எண்ணி மனம் கலங்கினால் பொருள் தேட முடியாது. எனவே கொடும் பாலையின் வழியாகச் செல்லும் பயணத்தைத் தவிர்த்து விடு” என்று கூறுகின்றான்.

3. ஊசல்

ஓடரிக்கண் மடநல்லீர் ஆடாமோ ஊசல்
 உத்தரியப் பட்டாட ஆடாமோ ஊசல்
ஆடகப்பூண் மின்னாட ஆடாமோ ஊசல் 

அம்மென்மலர்க் குழல்சரிய ஆடாமோ ஊசல்
கூடலர்க்குத் தெள்ளாற்றில் விண்ணருளிச் செய்த
கோமுற்றப் படைநந்தி குவலயமார்த் தாண்டன்
காடவற்கு முன்தோன்றல் கைவேலைப் பாடிக்

காஞ்சிபுர மும்பாடி ஆடாமோ ஊசல்.

விளக்கம்

இப்பாடல் மகளிர் ஊசல் ஆடுவதைக் குறிக்கின்றது. “செவ்வரி பரந்த கண்களை உடைய இளமையான பெண்களே! நாம் ஊசல் ஆடுவோம்! மேலாடையான பட்டு அசையும்படி ஊசல் ஆடுவோம்! ஆடகம் என்னும் பொன்னால் ஆன அணிகலன்கள் ஒளிவீச ஊசல் ஆடுவோம்! அழகிய மென்மையான மலரை அணிந்த கூந்தல் அவிழ்ந்து விட ஊசல் ஆடுவோம்! தெள்ளாறு என்னும் இடத்தில் பகைவனை வென்றவனும்வ, பெரும் படையைக் கொண்டனும்வ, உலகத்தில் தோன்றி சூரியன் போன்னும், காடவர் கோனுக்குத் தமையனுமாகிய நந்தியின் கையில் உள்ள வேலாயுதத்தைப் பாடி ஊசல் ஆடுவோம்! அவன் தலைநகரமான காஞ்சிபுரத்தையும் பாடி ஊசல் ஆடுவோம் என்று மகளிர் பாடுகின்றனர்.

4. பாட்டுடைத் தலைவன் வீரச் சிறப்பு

திருவின் செம்மையும் நிலமகள் உரிமையும்
பொதுவின்றி ஆண்ட பொலம்பூண் பல்லவ!
தோள் துணை ஆக மாவெள் ளாற்று
மேவலர்க் கடந்த அண்ணால் நந்திநின்
திருவரு நெடுங்கண் சிவக்கும் ஆகின் 5
செருநர் சேரும் பதிசிவக் கும்மே
நிறங்கிளர் புருவம் துடிக்கின் நின்கழல்
இறைஞ்சா மன்னர்க் கிடந்துடிக் கும்மே
மையில் வாளுறை கழிக்கு மாகின்
அடங்கார் பெண்டிர்
பூண்முலை முத்தப் பூண்கழிக்கும்மே
கடுவாய் போல்வளை அதிர நின்னொடு
மருவா மன்னர் மனம் துடிக் கும்மே
மாமத யானை பண்ணின்
உதிர மன்னுநின் எதிர்மலைந் தோர்க்கே.

விளக்கம்

திருமகளின் செல்வமும், நிலமகளின் உரிமையும் பொதுவின்றி ஆண்ட பல்லவ மன்னனே! உன் தோளின் வலிமையால் வெள்ளாற்றங்கரையை வென்றாய்! உன் நெடுங்கண் சினத்தால் சிவக்குமெனில் பகைவரின் ஊர் நெருப்பால் அழியும்! உன் புருவம் சினத்தால் துடிக்குமெனில் உன் வீரக்கழலுக்குப் பணியாத மன்னர்களின் இதயம் துடிக்கும்! உன் உறையிலிருந்து வாள் வெளிப்படுமெனில் பகை மன்னர் மனைவிகளின் மங்கலத்தாலிகள் அழியும்.  உன்னோடு போர்புரியும் மன்னர்களின் மனம் துடிக்கும்! உன் மாமத யானைகள் போருக்கென அழகுபடுத்தப்படுமெனில் குருதி ஆறு பெருக்கெடுத்து ஓடும்.

5. மதங்கியார்

பகையின்றி பார்காக்கும் பல்லவர்கோன் செங்கோலின்
நகையும்வாண் மையும்பாடி நன்றாடும் மதங்கிக்குத்
தகையும்நுண் ணிடையதிரத் தனபாரம் அவற்றோடு
மிகையொடுங்கா முன்இக்கூத் தினைவிலக்க வேண்டாவோ.

விளக்கம்

பகைவர் இல்லாமல் பூமியைக் காப்பாற்றுகின்ற பல்லவர் கோமானது செங்கோலின் ஒளியையும், அவனது வாட்போரின் திறத்தையும் பாடி மதங்கியர் எனப்படும் நடன மாதர்கள் நடனம் ஆடுகின்றனர். அதனைக் கண்டவர்கள், “அவர்களது நடனத்தால் அவர்களின் உடல் அதிர்கின்றது. இடை அவர்களின் நடன அசைவுகளைத் தாங்காது முறிந்து விடும். அக்குற்றம் உண்டாகும் முன்பு நாம் இந்தக் கூத்தை விலக்க வேண்டும்” என்று கூறுகின்றனர்.

புதன், 10 மே, 2023

திருஞானசம்பந்தர் திருப்பதிகம் - திருவீழிமிழலை

 

திருஞானசம்பந்தர் திருப்பதிகம் - திருவீழிமிழலை

 பாடல் எண் : 1

அரைஆர் விரிகோ வணஆடை

நரைஆர் விடையூர்தி நயந்தான்

விரையார் பொழில்வீ ழிம்மிழலை

உரையால் உணர்வார் உயர்வாரே.

விளக்கம்

இடையிற் கட்டிய விரிந்த கோவண ஆடையையும்வெண்மை நிறம் பொருந்திய இடப வாகனத்தை விரும்பி ஏற்றுக் கொண்ட சிவபெருமான் உறைகின்றமணம் பொருந்திய பொழில்களால் சூழப்பட்ட திருவீழிமிழலையின் புகழை நூல்களால் உணர்கின்றவர் உயர்வை அடைவார்கள்.

பாடல் எண் : 2

புனைதல் புரிபுன் சடைதன்மேல்

கனைதல் ஒருகங் கைகரந்தான்

வினையில் லவர்வீ ழிம்மிழலை

நினைவில் லவர்நெஞ் சமும்நெஞ்சே.

விளக்கம்

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிவந்த சடைமுடி மீது கங்கை நதியை மறைத்து வைத்துள்ள சிவபெருமான் உறைகின்றதீவினை இல்லாத மக்கள் வாழ்கின்ற திருவீழிமிழலையை நினையாதவர் நெஞ்சம் என்றும் மகிழ்ச்சியடைவதில்லை.

பாடல் எண் : 3

அழவல் லவர்ஆ டியும்பாடி

எழவல் லவர்எந் தைஅடிமேல்

விழவல் லவர்வீ ழிம்மிழலை

தொழவல் லவர்நல் லவர்தொண்டே.

விளக்கம்

அழவல்லவர்ஆடியும் பாடியும் எழவல்லவர் ஆகிய எம் தந்தை சிவபெருமான் திருவடிமேல் விழ வல்லவருமான அடியவர்கள் நிறைந்துள்ள திருவீழிமிழலையைத் தொழவல்லவரே நல்லவர் ஆவர். அவர் செய்யும் தொண்டே நல்ல தொண்டாகும்.

பாடல் எண் : 4

உரவம் புரிபுன் சடைதன்மேல்

அரவம் அரையார்த்த அழகன்

விரவும் பொழில்வீ ழிம்மிழலை

பரவும் அடியார் அடியாரே.

விளக்கம்

சிவந்த சடைமுடியின் இடையில்பாம்பை அணிந்துள்ள சிவபிரான் எழுந்தருளியபொழில்கள் சூழ்ந்துள்ள திருவீழிமிழலையைப் பரவித் துதிக்கும் அடியவரே அடியவராவர்.

பாடல் எண் : 5

கரிதா கியநஞ்சு அணிகண்டன்

வரிதா கியவண்டு அறைகொன்றை

விரிதார் பொழில்வீ ழிம்மிழலை

உரிதா நினைவார் உயர்வாரே.

விளக்கம்

நஞ்சினை உண்டு அதனை அணிகலனாகத் தன் தொண்டையில் நிறுத்திய நீலகண்டன் எழுந்தருளிய வண்டுகள் ஒலி செய்யும் கொன்றை மரங்களில் மலரும் மலர்களால் நிறைந்த சோலைகளால் சூழப்பெற்ற திருவீழிமிழலையைத் தமக்கு உரிய தலமாகக் கருதுவோர் சிறந்த அடியவராவர்.

பாடல் எண் : 6

சடையார் பிறையான் சரிபூதப்

படையான் கொடிமே லதொர்பைங்கண்

விடையான் உறைவீ ழிம்மிழலை

அடைவார் அடியா ரவர்தாமே.

விளக்கம்

சடையின் இடையில் பிறைமதியை சூடியவனும் பூதப்படைகளை உடையவனும், இடப வாகனத்தை உடையவனுமாகிய சிவபெருமான் உறைகின்ற திருவீழிமிழலையை அடைபவர்கள் சிறந்த அடியவர்கள் ஆவர்.

பாடல் எண் : 7

செறிஆர் கழலும் சிலம்புஆர்க்க

நெறிஆர் குழலா ளொடுநின்றான்

வெறிஆர் பொழில்வீ ழிம்மிழலை

அறிவார் அவலம் அறியாரே.

விளக்கம்

கால்களிற் செறிந்த கழல்சிலம்பு ஆகிய அணிகள் ஆர்ப்பரிக்க, சுருண்ட கூந்தலை உடைய உமையம்மையோடு நின்று அருள் புரிகின்ற சிவபெருமான் எழுந்தருளிய, மணம் கமழும் பொழில்களால் சூழப் பெற்ற திருவீழிமிழலையைத் தியானிப்பவர்களுக்குத் துன்பம் ஏற்படுவதில்லை.

பாடல் எண் : 8

உளையா வலிஒல்க அரக்கன்

வளையா விரல்ஊன் றியமைந்தன்

விளைஆர் வயல்வீ ழிம்மிழலை

அளையா வருவார் அடியாரே.

விளக்கம்

கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின வலிமை கெடுமாறு தன் காலை வளைத்து விரலால் ஊன்றிய வலிமை வாய்ந்த சிவபெருமான் எழுந்தருளியவிளைச்சல் மிகுந்த வயல்களை உடைய திருவீழிமிழலையை சிந்தையால் நிறைத்து வருகை புரிபவர் சிறந்த அடியவராவர்.

பாடல் எண் : 9

மருள்செய்து இருவர் மயலாக

அருள்செய் தவன்ஆர்அழலாகி

வெருள்செய் தவன்வீ ழிம்மிழலை

தெருள்செய் தவர்தீ வினைதேய்வே.

விளக்கம்

திருமால் பிரமன் ஆகிய இருவரும் அஞ்ஞானத்தினால் அடிமுடிகாணாது மயங்க தீ வடிவமாக வெளிப்பட்டு நின்று, அவர்களுக்கு அருள் செய்த சிவபெருமான் எழுந்தருளிய திருவீழிமிழலையைச் சிறந்த தலம் என்று தெளிந்தவர்களுக்குத் தீவினைகள் அகலும்.

பாடல் எண் : 10

துளங்கும் நெறியார் அவர்தொன்மை

வளங்கொள் ளன்மின்,புல் அமண்தேரை

விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை

உளங்கொள் பவர்தம் வினைஓய்வே.

விளக்கம்

 தடுமாற்றமுறும் கொள்கைகளை மேற்கொண்டுள்ள அமணர் தேரர் ஆகியோரின் சமயத் தொன்மைச் சிறப்பைக் கருதாமல், பொழில்கள் சூழ்ந்த திருவீழிமிழலையை நினைப்பவர்களின் தீவினைகள் நீங்கிவிடும்.

பாடல் எண் : 11

நளிர்கா ழியுள்ஞா னசம்பந்தன்

குளிர்ஆர் சடையான் அடிகூற

மிளிர்ஆர் பொழில்வீ ழிம்மிழலை

கிளர்பா டல்வல்லார்க்கு இலைகேடே.

விளக்கம்

காழி என்னும் ஊரில் தோன்றிய திருஞானசம்பந்தன், சடைமுடியை உடைய சிவபெருமானின் திருவடிப் பெருமைகளைக் கூறத் தொடங்கி, பொழில்கள் சூழ்ந்த திருவீழிமிழலையின் புகழ்கூறும் இப்பதிகப் பாடல்களை ஓதுபவர்களுக்குத் துன்பம் இல்லை.

வெள்ளி, 5 மே, 2023

கண்ணிநுண் சிறுத்தாம்பு – மதுரகவி ஆழ்வார்

 

 கண்ணிநுண் சிறுத்தாம்பு – மதுரகவி ஆழ்வார்

1

வேறொன்றும் நான் அறியேன்
வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்
வண்குருகூர் ஏறெங்கள் வாழ்வாம் என்றேத்தும் மதுரகவியார்
எம்மை ஆள்வார் அவரே அரண்.


விளக்கம்

 “வேதத்தைத் தமிழிலே அருளிச்செய்த, அழகிய திருக்குருகூருக்குத் தலைவரான மாறன் என்கிற நம்மாழ்வாரைத் தவிர வேறொன்றை அறியேன்” என்று சொன்ன மதுரகவி ஆழ்வாரே நம்மை ஆள்பவர், அவரே நமக்குப் புகலிடம்.


2

கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே


விளக்கம்

 யசோதைப் பிராட்டி சிறிய கயிற்றினால் தன்னைக் கட்டும்படி அமைத்துக்கொண்ட கண்ணனை விட்டு, தென் திசையில் உள்ள திருக்குருகூருக்குத் தலைவரான நம்மாழ்வாரின் திருநாமத்தைச் சொன்னால் அது என்னுடைய நாவினுக்கு இனியதாகவும் அமுதமாகவும் உள்ளது.


3

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே


விளக்கம்

நான் ஆழ்வாரின் பாசுரங்களைச் சொல்லி மிகப்பெரிய ஆனந்தத்தை அடைந்தேன். ஆழ்வாரின் திருவடிகளிலே நன்கு சரணடைந்திருக்கிறேன். திருக்குருகூருக்குத் தலைவரான ஆழ்வாரைத் தவிர வேறு ஒரு தெய்வத்தை அறியேன். ஆழ்வாருடைய பாசுரங்களை இசையுடன் பாடிக்கொண்டு எல்லா இடங்களுக்கும் செல்வேன்.

4

திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடைக்
கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே


விளக்கம்

 ஆழ்வாருக்கே அடியவன் என்றிருந்த நானும் அந்த நிலையில் இருந்து நழுவினேன். அழகிய திருமேனியை உடைய திருமாலை, எம் ஆழ்வார் காட்டிக் கொடுக்க நான் கண்டேன். அங்ஙனம் வள்ளல் தன்மை மிகுந்த திருக்குருகூரில் அவதரித்த ஆழ்வாரின் உண்மையான அடியவனாக இருக்கும் எனக்குக் கிடைத்த நன்மையைப் பாருங்கள்!


5

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மை ஆகக் கருதுவர் ஆதலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே


விளக்கம்

 நான்கு வேதங்களில் சிறந்த ஞானம் உடையவர்கள் யாவரும் என்னைக் கைவிட்டார்கள். ஆழ்வாரோ தாயும் தந்தையுமாக இருந்து என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டார். எனவே அவரே என் இறைவன்.


6

நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன்னெலாம்
செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே


விளக்கம்

முற்காலத்தில் பிறருடைய பொருளையும் பெண்களையும் விரும்பினேன். இன்றோ, தங்கத்தால் செய்யப்பட்ட மாட மாளிகைகள் நிறைந்த திருக்குருகூருக்குத் தலைவரான ஆழ்வாரால் திருத்தப்பட்டு அவரின் அடியவனாகி, மேன்மையை அடைந்தேன்.


7

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே


விளக்கம்

 திருக்குருகூருக்குத் தலைவரான, என்னுடைய இறைவனாகிய நம்மாழ்வார், இன்று முதல் நான் அவருடைய பெருமையைப் பாடும் படியான நிலையை எனக்கு அருளினார். இனி அவர் எம்மை ஒருநாளும் கைவிட மாட்டார்!


8

கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான்
பண்டை வல் வினை பாற்றி அருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே


விளக்கம்

 காரிமாறன் என்னும் ஆழ்வார் என்னை ஏற்றுக்கொண்டார். என்னுடைய பாவங்களைப் போக்கினார். அற்புதத் தமிழ்ப் பாசுரங்களை அருளிச் செய்த ஆழ்வாரின் கருணையின் பெருமைகளை எட்டுத்திக்கிலும் உள்ளோர் உணரும்படிப் பாடுவேன்.


9

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ்வருமறையின் பொருள்
அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே


விளக்கம்

 இறைவனின் அருளைக் கொண்டாடும் அடியார்களின் ஆனந்தத்துக்காக, ஆழ்வார் தன் பெருங்கருணையால் வேதத்தின் மூலப்பொருளைத் திருவாய்மொழியில் ஆயிரம் பாசுரங்களாக அருளினார். ஆழ்வாரின் இந்தக் கருணை இவ்வுலகினில் மிகப் பெரியது.


10

மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே


விளக்கம்

 வேதத்தின் சாரத்தை என்னுடைய நெஞ்சிலே நிலைத்து நிற்கும்படி அருளினார் ஆழ்வார். இதனால் அவருக்குத் தொண்டு செய்யும் அந்த உயரிய நிலை எனக்கு உடனே கிடைத்தது.


11

பயன் அன்று ஆகிலும் பாங்கு அல்லர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன்தன் மொய் கழற்கு அன்பையே


விளக்கம்

 குயில்களின் ஓசை நிறைந்திருக்கும் சோலைகள் சூழப்பட்ட திருக்குருகூரில் வசிக்கும் ஆழ்வாரே! இவ்வுலகில் உள்ளவர்களாலே தேவரீருக்கு எந்தப் பயனும் இல்லை என்றபோதிலும், இவர்கள் திருந்தும் நிலையில் இல்லாவிட்டாலும், உம் உபதேசங்களாலும் நடத்தையாலும் இவர்களைத் திருத்தி நற்செயல்களில் ஈடுபடுத்துகின்றீர். இப்படிப்பட்ட தேவரீர் திருவடிகளில் அன்பை வளர்த்துக்கொள்ள முயல்கின்றேன்.


12

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே   


விளக்கம்

 எம்பெருமானாகிய திருமால் எல்லோரிடத்திலும் அன்புடையவன். நம்மாழ்வார் திருமாலின் அடியார்களிடத்தில் அன்பு பூண்டவர். மதுரகவியாழ்வாராகிய நான் நம்மாழ்வாரிடத்தில் அன்பு பூண்டவன். நான் பக்தியுடன் பாடிய இந்த பிரபந்தத்தை முழுவதுமாக படிப்பவர்கள் வைகுந்தத்தை அடைவார்கள்.