வெள்ளி, 12 மே, 2023

திருஆசிரியம் – நம்மாழ்வார்

 

திருஆசிரியம் – நம்மாழ்வார்

பாடல் 1

செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்
பரிதிசூடி அஞ்சுடர் மதியம் பூண்டு
பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்
திகழ் பசுஞ்சோதி மரகதக் குன்றம்
கடலோன் கைமிசைக் கண் வளர்வதுபோல்
பீதகவாடை முடி பூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து  சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப  மீதிட்டுப்
பச்சை மேனி மிகப் பகைப்ப
நச்சு வினைக்கவர்தலை அரவினமளி ஏறி
எறிகடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த
தாமரை உந்தி தனிப் பெரு நாயக!
மூவுலகளந்த சேவடியோயே!

விளக்கம்

மேகங்களை இடுப்பில் கட்டி, சூரியனைத் தலையிலே வைத்துக்கொண்டு, சந்திரனை அணிந்து, நட்சத்திரங்களாகிய பல ஒளிபிழம்புகளைக் கொண்டுள்ள, பவளம் போன்று ஒளிவிடும் பச்சை நிறத்தில் இருக்கும் மரகத மலை ஒன்று உள்ளது. அந்த மலை, வருணனுடைய கைகளின் மேலே படுத்துக் கொண்டிருப்பதுபோல் உள்ளது. பல்வேறு ஆபரணங்களை அணிந்து, உதடுகளும், திருக்கண்களும் சிவந்திருக்கும்படியாக, திருமேனியில் பச்சை நிறம் ஒளிவிடும்படியாக, எதிரிகளை அழிப்பதில் நச்சுத் தன்மை வாய்ந்த செயல்களையுடையவனாக, கவிழ்ந்திருக்கும் தலைகளை உடையவனுமான ஆதிசேஷன் என்கின்ற பாம்பின் படுக்கையில் ஏறிப் படுத்திருப்பவனாக, அலை வீசும் திருப்பாற்கடலின் நடுவே உலகத்தைக் காப்பதற்கான உணர்வுடன் யோகநித்திரையில் படுத்துள்ளான் எம் பெருமானாகிய திருமால். அந்த எம்பெருமான் சிவன், பிரம்மா, இந்திரன் முதலான தேவர்களுடைய கூட்டம் கைகூப்பி வணங்கும்படி படுத்திருக்கின்றான். அவன் ஒப்பற்றவன், எல்லோரையும் விடப் பெரியவன்! மூன்று உலகங்களையும் அளந்த திருவடிகளை உடையவன்!

பாடல் 2

உலகுபடைத்துண்ட எந்தை அறை கழல்
சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவார்
உயிருருகி உக்க, நேரிய காதல்
அன்பிலின்பீன் தேறல் அமுத
வெள்ளத் தானாம் சிறப்புவிட்டு ஒருபொருட்கு
அசைவோர் அசைக, திருவொடு மருவிய
இயற்கை, மாயாப் பெரு விறல் உலகம்
மூன்றினோடு நல் வீடு பெறினும்
கொள்வதெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே?

விளக்கம்

அனைத்து உலகங்களையும் படைத்து, பின்பு ஊழிக்காலத்தின்போது அவற்றை விழுங்கியவன் எம்பெருமான். அவனுடைய திருவடிகளாகிய தாமரைப் பூவை அணிவதற்காக என் ஆன்மா உருகி விழுகின்றது. அவன் மீதான பக்தியின் உருவில் இருக்கும் அன்பென்ன, பக்தியினால் ஏற்படும் இனிமை என்ன, இவைகளிலுள்ள இனிமையின் உயர்ந்த நிலையான அமுதக் கடலில் மூழ்கியிருக்கும்படியான மேன்மையை விட்டு அல்லல்படுபவர்கள் அலையட்டும். செல்வத்துடன் கூடிய தன்மையொடும், அழியாத மிகுந்த வலிமையொடும், மூன்று உலகங்களுடனும் கூட மேலான வீடுபேற்றைப் பெற்றாலும், தெளிந்த ஞானத்தையுடைய பெரியோர்களுடைய எண்ணம் இவைகளைப் பெற நினைப்பதில்லை. மாறாக, எம்பெருமானின் அன்பினை எதிர்பார்த்து நிற்பர்.

பாடல் 3

குறிப்பில் கொண்டு நெறிப்பட, உலகம்
மூன்றுடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய்பெற நடாய தெய்வம் மூவரில்
முதல்வனாகிச் சுடர் விளங்ககலத்து
வரைபுரை திரைபொரு பெருவரை வெருவர,
உருமுரல் ஒலிமலி நளிர்கடல் படவர
வரசு உடல் தடவரை சுழற்றிய, தனிமாத்    
தெய்வத்தடியவர்க்கினிநாம் ஆளாகவே
இசையும் கொல், ஊழிதோறூழி ஓவாதே

விளக்கம்

மூன்று உலகங்களையும் நல்வழியில் செலுத்துபவன். அவ்வுலகங்களில் உள்ளவர்கள் அனைவரும் ஒரு நிலையில் இருந்து வணங்கக்கூடிய தகுதி கொண்டவன். வேதத்தில் பரமனாகக் காட்டப்பட்டதின் மூலம் புகழையுடையவன். தன் ஆணையை மிக நன்றாக செயல்படுத்துபவன். பிரம்மா, உருத்திரன், இந்திரன் ஆகிய தேவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன். ஆபரணங்களின் ஒளியையுடைய திருமார்பையுடையவனாய் இருப்பவன் எம்பெருமான். மலை போன்ற உயரமான அலைகள் மோதுகின்ற குளிர்ந்த கடலை, மிகப்பெரிய மந்திர மலையில் சுற்றிக் கடைந்த எம்பெருமானை அடைய வேண்டுமெனில் அவன் மீது அன்பும் பக்தியும் கொண்ட அடியவர்களுக்கே அப்பேறு கிடைக்கும்.

பாடல் 4

ஊழிதோறூழி ஓவாது வாழிய!
என்று யாம் தொழ இசையும் கொல்,
யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல்வரும் பெரும் பாழ் காலத்து, இரும் பொருட்கு
எல்லாம் அரும்பெறல் தனி வித்து, ஒருதான்
ஆகித் தெய்வ நான்முகக் கொழுமுளை
ஈன்று, முக்கண் ஈசனோடு தேவுபல
நுதலி மூவுலகம் விளைத்த உந்தி,
மாயக் கடவுள் மாமுதல் அடியே

விளக்கம்

அனைத்து உலகங்களும், அனைத்து விலங்குகளும் வணங்கத்தக்கவன். உலகம் அழிந்திருந்த காலத்தில், கணக்கிலடங்காத உயிரினங்களுக்கெல்லாம் பெறுவதற்கு அரியவனாய் இருந்தவன். அந்நிலையில் இவ்வுலகில் சிறந்த தேவதையான பிரம்மாவையும், மூன்று கண்களையுடைய உருத்திரனையும், பல தேவதைகளையும் படைத்து, அவர்களுக்குண்டான பணிகளுக்கு ஆற்றலைக் கொடுத்து, மூன்று உலகங்களையும் படைத்தஎம்பெருமானின் திருவடிகளை, ஊழிதோறும் இடைவிடாமல் “வாழி” என்று நாம் தொழும் பாக்யம் கிடைக்க வேண்டும்.

பாடல் 5

மாமுதல் அடிப் போது ஒன்று கவிழ்த்தலர்த்தி,
மண் முழுதும் அகப்படுத்து, ஒண் சுடர் அடிப்போது
ஒன்று விண் செலீஇ, நான்முகப் புத்தேள்
நாடு வியந்துவப்ப, வானவர் முறை முறை
வழிபட நெறீஇ, தாமரைக் காடு
மலர்க் கண்ணோடு கனிவாய் உடையது
மாய், இருநாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன,
கற்பகக் காவு பற்பல வன்ன,
முடி தோள் ஆயிரம் தழைத்த,
நெடியோய்க்கு அல்லதும் அடியதோ உலகே

விளக்கம்

உன்னுடைய திருவடியாகிற ஒரு பூவைக் கவிழ்த்துப் பரப்பி பூமி முழுவதையும் கைக்கொண்டாய். அழகிய ஒளிமிகுந்த பூவைப் போன்ற மற்றொரு திருவடியை பிரம்மாவின் உலகமானது அதிசயப்பட்டு மகிழும்படி செய்தாய். தாமரைப்பூக்கள் நிறைந்த காடு மலர்ந்தது போல் இருக்கும் திருக்கண்களோடு கூட, சிவந்த திருப்பவளத்தை (உதடுகளை) உடையதாய், பரந்த ஆயிரம் சூரியர்கள் உதித்தாற்போல் இருக்கிற பல கிரீடங்களையும், கற்பகச் சோலை போலிருக்கிற ஆயிரம் திருத்தோள்களையும் உடையவனாய், எல்லாரையும்விட உயர்ந்தவனாய் விளங்குகிற எம்பெருமானுக்கு இவ்வுலகம் அடிமையாகும்.

பாடல் 6

ஓ ஒ உலகினதியல்வே, ஈன்றோளிருக்க
மணை நீராட்டிப், படைத்து  இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து, தேர்ந்து உலகளிக்கும் முதற்பெரும்   
கடவுள் நிற்பப் புடைப்பல தானறி
தெய்வம் பேணுதல், தனாது   
புல்லறிவாண்மை பொருந்தக்காட்டிக்,  
கொல்வன முதலா அல்லன முயலும்,
இனைய செய்கை இன்பு துன்பு அளித்
தொன்மா மாயப் பிறவியுள் நீங்காப்
பன்மா மாயத்து அழுந்துமா நளிர்ந்தே

விளக்கம்

எம் பெருமானாகிய நாராயணன், இந்தப் பூமியை உண்டாக்கி, வராக அவதார காலத்தில் பூமியைப் பிரளயத்திலிருந்து காப்பாற்ற,ப அதை அமுது செய்து, மீண்டும் வெளியே உமிழ்ந்தான்.  பின்பு வாமன அவதாரத்தில் பூமியை அளந்து, அதற்கு மேல் இவ்வுலகை எப்படிக் காப்பாற்றுவது என்று சிந்தை செய்கின்றவன். அவனை விட்டு வேறு தெய்வங்களை ஆதரிப்பது என்பது, பெற்ற தாயிருக்க அவளைவிட்டு ஒரு பலகையை நீராட்டுவது போலிருக்கிறது.

பாடல் 7

நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்,
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா,
யாவகை உலகமும் யாவரும் அகப்பட,
நிலம் நீர் தீ கால் சுடர் இருவிசும்பும்,
மலர் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க,
ஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓராலிலை சேர்ந்த எம்
பெருமா மாயனை அல்லது,
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே

விளக்கம்

குளிர்ந்த சந்திரனைத் தலையில் வைத்திருக்கும் உருத்திரனையும், படைப்புக் கடவுளான பிரம்மாவையும், தேவர்களின் தலைவனான இந்திரனையும், அனைத்து உலகங்களையும், பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களையும், உலகில் உள்ள அனைத்துப் பொருள்களையும், தன் திருவயிற்றிலே மறைத்து வைத்துக் கொண்டு, ஓர் ஆல் இலையின் மேல் படுத்திருக்கின்ற, அளவிட முடியாதவனாக இருக்கின்ற திருமாலைத் தவிர, வேறு பெரிய ஒரு  இறைவன் இல்லை.

 

 

முக்கூடற்பள்ளு - காயிதே மில்லத் கல்லூரி பாடம்

 

முக்கூடற்பள்ளு

இப்பகுதி மூத்த பள்ளியும் இளைய பள்ளியும் தாங்கள் வழிபடு தெய்வத்தை  முன்னிறுத்தி ஒருவரை ஒருவர் பழித்து ஏசுவதை விவரிக்கின்றது. மூத்த பள்ளி திருமாலை வழிபடுபவள். இளைய பள்ளி சிவனை வழிபடுபவள்.

பாடல்

சாதிப்பது உனக்குவரும்  மருதூப்பள்ளி- நரிதான்

பரியாய்ச்சா தித்தான்உங்கள் சம்புவல் லோடி

பேதிக்கச்சா திக்கவாராய் முக்கூடற்பள்ளி- கல்லைப்

பெண்ணாகச்சா தித்தானுங்கள் கண்ண னல்லோடி. 161

விளக்கம்
“சாதிக்கின்ற தந்திரம் எல்லாம் உனக்குத் தான் வரும் மருதூர்ப்பள்ளி! நரிகளைப் பரிகளாக மாற்றிச் சாதித்தவன் உங்கள் சிவபெருமான் அல்லவா?” (மாணிக்க வாசகருக்காக நரியைப் பரி ஆக்கியது) என்று மூத்தவள் கூறுகின்றாள். அதற்கு இளையவள், “கல்லையும்  பெண்ணாகச் சாதித்தவன் உங்கள் கண்ணன் அல்லவா?”  (கல்லாய்க் கிடந்த அகலிகையை இராமன் பெண்ணாக மாற்றியது) என்று கேட்கின்றாள்.

பாடல்

மங்கையொரு பங்கிருக்க யோகியென்றுதான்-கையில்

மழுவேந்தி நின்றானுங்கள் மத்த னல்லோடி

கொங்கைதனில் நாச்சியாரைச் சங்கையில்லாமற்-பண்டு

கூடிநெய்யிற் கையிட்டானுங் கொண்ட லல்லோடி. 162

விளக்கம்

“மங்கை ஒருத்தித் தன் ஒரு பாகத்திலே இருக்க, தான் யோகி என்று சொல்லிக் கையில் மழுவை ஏந்தி நிற்பவன் உங்கள் ஊமத்தை மாலை அணிந்த சிவபெருமான் அல்லவா” என்று மூத்தவள் கேட்கின்றாள். அதற்கு இளையவள் “நாச்சியாருடன் உடலும் உயிருமாகக் கலந்து விட்டு, கொஞ்சமும் வெட்கமில்லாமல் முன்னொரு காலத்தில் மனம் துணிந்து நெய்யிலே கையிட்டவன் உங்கள் மேக வண்ணனாகிய திருமால் அல்லவா” என்று கேட்கின்றாள்.
பாடல்

காமனை மருகனென்று எண்ணிப்பாராமற்-காய்ந்து

கண்ணிலேறு பட்டானுங்கள் கர்த்தனல் லோடி

மாமனென்று பாராமல்முன் கஞ்சனைக்கொன்றே-கண்கள்

மாறாதேபூப் பட்டானுங்கள் மாயனல் லோடி.163

விளக்கம்

“மன்மதனைத் தன் மருமகன் என்று கூட எண்ணிப் பார்க்காமல் முதலில் கோபித்துக் கொண்டு, கண்ணிலே நெருப்பைக் காட்டியவன் உங்கள் சிவன் தானே?” என்று மூத்தவள் கூற, “மாமனெ்றும் பாராமல் முன்னாளில் கம்சனைக் கொன்றே கண்களின் என்றும் மாறாத பூ விழப் பெற்றவன் மாயவனாகிய உங்கள் கண்ணன் தானே” என்று இளையவள் சாடுகின்றாள்.
பாடல்

மாதொருத்திக் காசைப்பட்டுப் பொன்னின் மயமாம்-பனி

மலையேறிப் போனானுங்கள் மத்த னல்லோடி

காதலித்துத் தம்பியுடன் சீதை பொருட்டால்-அன்று

கடலேறிப் போனானுங்கள் கண்ண னல்லோடி. 164

விளக்கம்

“பெண் ஒருத்திக்கு ஆசைப்பட்டு பொன்னின் மயமான பனிமலை ஏறிப் போனவன் உங்கள் சிவபெருமான்” என்று மூத்தவள் கூற, “காதல் கொண்டு தம்பியோடு சீதை கொருட்டாக அந்நாளில் கடல் கடந்து போனவன் உங்கள் இராமன்” என்று இளையவள் ஏசுகின்றாள்.

பாடல்

தான்பசுப்போல் நின்றுகன்றைத் தேர்க்காலில் விட்டே-சோழன்

தன்மகனைக் கொன்றானுங்கள் தாணு வல்லோடி

வான்பழிக்கு ளாய்த்தவசி போல மறைந்தே-நின்று

வாலியைக் கொன்றானுங்கள் மாய னல்லோடி. 165

விளக்கம்

“தான் பசு போல நின்று கொண்டு தன் கன்றைத் தேர்க்காலில் விழ விட்டு, அதனால் சோழ மன்னனின் மகனைக் கொன்றவன் உங்கள் சிவனே” என்று மூத்தவள் கூறுகின்றாள். அதற்கு இளையவள், “பரிய பழிக்கு உள்ளாகித் தவவலிமையுடைவன் போல மறைந்து நின்று வாலியைக் கொன்றவன் உங்கள் திருமால்” என்று கூறுகின்றாள்.

பாடல்

வலிய வழக்குப்பேசிச் சுந்தரன் வாயால்-அன்று

வையக்கேட்டு நின்றானுங்கள் ஐய னல்லோடி

புலிபோல் எழுந்துசிசு பாலன்வையவே-ஏழை

போலநின்றான் உங்கள்நெடு நீல னல்லோடி. 166

விளக்கம்

“சுந்தரர் திருமணத்தில் வலிய வந்து வழக்குப் பேசிச் சென்று அன்று அவன் வாயால் திட்டுவதைக் கேட்டு நின்றவன் சிவபெருமான்” என்று மூத்தவள் கூற, ”சிசுபாலன் புலி போல எழுந்து திட்டவே, (உருக்குமணியை மணந்தபோது கண்ணனை சிசுபாலன் திட்டடினான்) சபை நடுவில் ஏழைபோல ஒடுங்கி நின்றவன் திருமால்” என்று இளையவள் கூறுகின்றாள்.

பாடல்

அடியனும் நாயனுமாய்க் கோவிற் புறகே-தொண்டன்

அன்றுதள்ளப் போனானுங்கள் ஆதியல் லோடி

முடியுஞ் சூடாமலேகை கேசிதள்ளவே-காட்டில்

முன்புதள்ளிப் போனானுங்கள் மூர்த்தியல் லோடி. 167

விளக்கம்

“அடியவனாகிய சுந்தரரும், நாயகனாகிய சிவபிரானும் தன் மனக்கோவிலுக்கு அப்பால் இருவரையும் தொண்டனாகிய விறன்மிண்டன் தள்ளிவிட, அதன்படி போக நுர்ந்தவன் சிவபெருமான்“ என்று மூத்தவள் கூற, “முடியும் சூடாமல் கைகேயி தள்ளிவிட, காட்டில் நெடுந்தொலைவு போய் வாடிக் கிடந்தவன் திருமால்” என்று இளையவள் கூறுகின்றாள்.

பாடல்
சுற்றிக்கட்ட நாலுமுழந் துண்டு மில்லாமல்-புலித்

தோலைஉடுத்தா னுங்கள் சோதி யல்லோடி

கற்றைச்சடை கட்டிமர வுரியுஞ் சேலைதான்-பண்டு

கட்டிக்கொண்டான் உங்கள்சங்குக் கைய னல்லோடி.168

விளக்கம்

“இடுப்பிலே சுற்றிக் கட்டுவதற்கு ஒரு நான்கு முழத்துண்டு கூடக் கிடைக்காமல் புலித்தோலை எடுத்து உடுத்தியிருப்பவன் உங்கள் சிவன்” என்று மூத்தவள் கூற, “கற்றையாகச் சடையைக் கட்டி, மரவுரியை இடுப்பிலே கட்டிக் கொண்டவன் சங்கைக் கையில் கொண்ட உங்கள் திருமால்” என்று இளையவள் கூறுகின்றாள். (சிவன் தாருகாவனத்து முனிவர் ஏவிய புலியைக் கொன்று அதன் தோலை உடுத்தமையையும், இராமன் மரவுரி தரித்துக் கானகம் சென்றதையும் குறிப்பிடுகின்றனர்)

பாடல்

நாட்டுக்குள் இரந்தும்பசிக் காற்றமாட்டாமல்-வாரி

நஞ்சையெல்லாம் உண்டானுங்கள் நாதனல் லோடி

மாட்டுப்பிற கேதிரிந்துஞ் சோற்றுக்கில்லாமல்-வெறும்

மண்ணையுண்டான் உங்கள்முகில் வண்ணனல் லோடி.169

விளக்கம்

“ஊருக்குள்ளே பிச்சை எடுத்துத் திரிந்தும், பசி ஆற்றமாட்டாதவனாகக் கடல் நஞ்சைஎடுத்து உண்டவன் சிவபெருமான்” என்று மூத்தவள் கூற, “மாட்டு மந்தைக்குப் பின் திரிந்துங்கூட சோற்றுக்கு வழியில்லாமல் வெறும் மண்ணைத் தின்றவன் உங்கள் மேகவண்ணன்” என்று ஏசுகின்றாள் இளையவள்.

பாடல்

ஏறவொரு வாகனமும் இல்லாமையினால்-மாட்டில்

ஏறியே திரிந்தானுங்கள் ஈசனல் லோடி

வீறுசொன்ன தென்னமாடு தானுமில்லாமல்-பட்சி

மீதிலேறிக் கொண்டானுங்கள் கீதனல் லோடி.170

விளக்கம்

“ஏறிச் செல்வதற்குத் தகுந்த வாகனம் இல்லாமல் மாட்டின் மேல் ஏறிக்கொண்டு திரிபவன் உங்கள் ஈசனே” என்று மூத்தவள் கூற, “அந்த மாடு கூட இல்லாமல் போனதால்தான் பறவை (கருடன்) மீது ஏறிக் கொண்டானோ உங்கள் மாயவன்” என்று கேலி பேசுகின்றாள் இளையவள்.

பாடல்

பெருமாள் அடியானுக்குப் பெண்டிருந்துமே-எங்கள்

பெருமாளை நீ பழித்துப் பேசலா மோடி

திருமால் அடிமையென்றாய் சாலப்பசித்தால்-ஆருந்

தின்னாததுண் டோசினத்தால் சொல்லாத துண்டோ?171

விளக்கம்

இருவருடைய ஆத்திரமும் இவ்வாறு பேசி பேசி சிறிது அடங்கிக் கொண்டே வந்தது. அவர்கள் பேச்சில் இருவரும் ஒத்துப்போகும் எண்ணமும் பிறந்தது. அதனால், “மிக நன்றாகச் சொன்னாய் மருதூர்ப்பள்ளி! போ! போ! என்னதான் கோபப்ட்டாலும் சீர் அழியச் சொல்லலாமா?” என்று மூத்தவள் கேட்க, “எனக்குக் கோபம் வராதோ முக்கூடற்பள்ளி! முதலில் திட்டியவரை வாழ்த்தியவர் இதுவரை எவராவது இந்த உலகில் உண்டோ?” என்று கூறுகின்றாள் இளையவள்.

 

 

 

 

 

 

 

பாடல்

தீராண்மைநன் றாகச்சொன்னாய்

      மருதூர்ப்பள்ளி-போபோ

சினத்தாலுஞ் சீரழியச்

      சொல்லலா மோடி

வாராதோ எனக்குக்கோபம்

      முக்கூடற்பள்ளி-முந்த

வைதவரை வாழ்த்தினவர்

      வையகத் துண்டோ.172

விளக்கம்

நந்திக் கலம்பகம் - காயிதே மில்லத் கல்லூரி பாடம்

 

நந்திக் கலம்பகம்

1. கண்டோர் கூற்று

உரைவரம் பிகந்த உயர்புகழ்ப் பல்லவன்
அரசர் கோமான் அடுபோர் நந்தி
மாவெள் ளாற்று மேவலர்க் கடந்த
செருவே லுயர்வு பாடினன் கொல்லோ
நெருநல் துணியரைச் சுற்றிப்
பரடு திறப்பத் தன்னால் பல்கடைத்
திரிந்த பாணன் நறுந்தார் பெற்றுக்
காஅர் தளிர்த்த கானக் கொன்றையின்
புதுப்பூப் பொலன்கலன் அணிந்து
விளங்கொளி ஆனனன் இப்போது
இளங்களி யானை எருத்தமிசை யன்னே.

விளக்கம்

பாணன் ஒருவன் வீதி வழியே வந்து கொண்டிருக்கின்றான். முன்பு தன் ஆடையின் துண்டு ஒன்றை இடையிலே சுற்றிக் கொண்டவனாய், உடுத்தியிருக்கும் ஆடை அகலம் இல்லாமல் கால்கள் மறையாது வெளிப்படும்படியாக நடந்து சென்று வீடு வீடாகத் திரிந்திருந்தான். அவனைக் கண்டோர் யாவரும் வியப்படைகின்றனர். அஏனெனில், இப்போது அவன் மாலையும், பொற்கலனும் அணிந்து கொண்டு, யானையின் மேல் ஏறி, அழகான தோற்றத்துடன் வருகின்றான். இச்சிறப்பு அவனுக்கு எவ்வாறு கிடைத்திருக்கும் என்று எண்ணி முடிவில், வெள்ளாற்றங்கரையில் பகைவரை வென்ற பெருமைக்குரிய நந்தி மன்னனைப் பாடிப் இப்பரிசுகளைப் பெற்றிருப்பான் என்று வியந்து கூறுகின்றனர். இதனால் நந்திவர்மனின் கொடைச் சிறப்பு விளக்கம் பெறுகின்றது.

2. தலைவன் தன் நெஞ்சொடு கிளத்தல்

மயில்கண்டால் மயிலுக்கே வருந்தி யாங்கே
மான் கண்டால் மனைக்கே வாடி மாதர்
குயிற்கண்டாற் குயிலுக்கே குழைதி ஆகின்
கொடுஞ்சுரம்போக் கொழிநெஞ்சே! கூடாமன்னர்
எயில் கொண்டான் மல்லையங்கோன் நந்தி வேந்தன்
இகல்கொண்டார் இருங்கடம்பூர் விசும்புக்கேற்றி
அயில் கொண்டான் காவிரிநாட் டன்னப்பேடை
அதிசயிக்கும் நடையாரை அகலன் நூற்றேன்.

விளக்கம்

பொருள் தேடுவதற்காகத் தலைவியை விட்டுப் பிரிந்து செல்ல எண்ணிய தலைவன் தன் நெஞ்சுக்குக் கூறுகின்றான். “நெஞ்சே! பகை மன்னனின் மதிலைக் கைக்கொண்டவனும், அழகிய மல்லைக்குத் தலைவனும், கடம்பூர் மக்களைத் தேவருலகத்திற்குக் குடியேறச் செய்து வெற்றி கொண்டவனும் ஆகிய நந்திவர்மனின் காவிரி நீர் பாயும் நாட்டில் உள்ள பெண் அன்னமும் கண்டு வியக்கும்படியான மென்மையான நடை கொண்டவள் எம் தலைவி. அவளை விட்டுப் பொருள் தேடப் பிரிந்து செல்ல எண்ணுகின்றேன். ஆனால், பொருள்தேடச் செல்லும் வழியில், சுற்றித் திரியும் மயிலைக் கண்டால், அதன் சாயல் எம் தலைவியின் முகச் சாயலையும், ஓடித்திரியும் மானைக் கண்டால் அதன் கண்கள் எம் தலைவியின் கண்களையும், கூவுகின்ற குயிலைக் கண்டால், அதன் குரல் தலைவியின் குரலையும் போன்றதாக எண்ணி என் மனம் வருத்தமடையும். தலைவியை எண்ணி மனம் கலங்கினால் பொருள் தேட முடியாது. எனவே கொடும் பாலையின் வழியாகச் செல்லும் பயணத்தைத் தவிர்த்து விடு” என்று கூறுகின்றான்.

3. ஊசல்

ஓடரிக்கண் மடநல்லீர் ஆடாமோ ஊசல்
 உத்தரியப் பட்டாட ஆடாமோ ஊசல்
ஆடகப்பூண் மின்னாட ஆடாமோ ஊசல் 

அம்மென்மலர்க் குழல்சரிய ஆடாமோ ஊசல்
கூடலர்க்குத் தெள்ளாற்றில் விண்ணருளிச் செய்த
கோமுற்றப் படைநந்தி குவலயமார்த் தாண்டன்
காடவற்கு முன்தோன்றல் கைவேலைப் பாடிக்

காஞ்சிபுர மும்பாடி ஆடாமோ ஊசல்.

விளக்கம்

இப்பாடல் மகளிர் ஊசல் ஆடுவதைக் குறிக்கின்றது. “செவ்வரி பரந்த கண்களை உடைய இளமையான பெண்களே! நாம் ஊசல் ஆடுவோம்! மேலாடையான பட்டு அசையும்படி ஊசல் ஆடுவோம்! ஆடகம் என்னும் பொன்னால் ஆன அணிகலன்கள் ஒளிவீச ஊசல் ஆடுவோம்! அழகிய மென்மையான மலரை அணிந்த கூந்தல் அவிழ்ந்து விட ஊசல் ஆடுவோம்! தெள்ளாறு என்னும் இடத்தில் பகைவனை வென்றவனும்வ, பெரும் படையைக் கொண்டனும்வ, உலகத்தில் தோன்றி சூரியன் போன்னும், காடவர் கோனுக்குத் தமையனுமாகிய நந்தியின் கையில் உள்ள வேலாயுதத்தைப் பாடி ஊசல் ஆடுவோம்! அவன் தலைநகரமான காஞ்சிபுரத்தையும் பாடி ஊசல் ஆடுவோம் என்று மகளிர் பாடுகின்றனர்.

4. பாட்டுடைத் தலைவன் வீரச் சிறப்பு

திருவின் செம்மையும் நிலமகள் உரிமையும்
பொதுவின்றி ஆண்ட பொலம்பூண் பல்லவ!
தோள் துணை ஆக மாவெள் ளாற்று
மேவலர்க் கடந்த அண்ணால் நந்திநின்
திருவரு நெடுங்கண் சிவக்கும் ஆகின் 5
செருநர் சேரும் பதிசிவக் கும்மே
நிறங்கிளர் புருவம் துடிக்கின் நின்கழல்
இறைஞ்சா மன்னர்க் கிடந்துடிக் கும்மே
மையில் வாளுறை கழிக்கு மாகின்
அடங்கார் பெண்டிர்
பூண்முலை முத்தப் பூண்கழிக்கும்மே
கடுவாய் போல்வளை அதிர நின்னொடு
மருவா மன்னர் மனம் துடிக் கும்மே
மாமத யானை பண்ணின்
உதிர மன்னுநின் எதிர்மலைந் தோர்க்கே.

விளக்கம்

திருமகளின் செல்வமும், நிலமகளின் உரிமையும் பொதுவின்றி ஆண்ட பல்லவ மன்னனே! உன் தோளின் வலிமையால் வெள்ளாற்றங்கரையை வென்றாய்! உன் நெடுங்கண் சினத்தால் சிவக்குமெனில் பகைவரின் ஊர் நெருப்பால் அழியும்! உன் புருவம் சினத்தால் துடிக்குமெனில் உன் வீரக்கழலுக்குப் பணியாத மன்னர்களின் இதயம் துடிக்கும்! உன் உறையிலிருந்து வாள் வெளிப்படுமெனில் பகை மன்னர் மனைவிகளின் மங்கலத்தாலிகள் அழியும்.  உன்னோடு போர்புரியும் மன்னர்களின் மனம் துடிக்கும்! உன் மாமத யானைகள் போருக்கென அழகுபடுத்தப்படுமெனில் குருதி ஆறு பெருக்கெடுத்து ஓடும்.

5. மதங்கியார்

பகையின்றி பார்காக்கும் பல்லவர்கோன் செங்கோலின்
நகையும்வாண் மையும்பாடி நன்றாடும் மதங்கிக்குத்
தகையும்நுண் ணிடையதிரத் தனபாரம் அவற்றோடு
மிகையொடுங்கா முன்இக்கூத் தினைவிலக்க வேண்டாவோ.

விளக்கம்

பகைவர் இல்லாமல் பூமியைக் காப்பாற்றுகின்ற பல்லவர் கோமானது செங்கோலின் ஒளியையும், அவனது வாட்போரின் திறத்தையும் பாடி மதங்கியர் எனப்படும் நடன மாதர்கள் நடனம் ஆடுகின்றனர். அதனைக் கண்டவர்கள், “அவர்களது நடனத்தால் அவர்களின் உடல் அதிர்கின்றது. இடை அவர்களின் நடன அசைவுகளைத் தாங்காது முறிந்து விடும். அக்குற்றம் உண்டாகும் முன்பு நாம் இந்தக் கூத்தை விலக்க வேண்டும்” என்று கூறுகின்றனர்.