திங்கள், 22 மே, 2023

ஆடிக்காற்றே - சிற்பி

ஆடிக்காற்றே - சிற்பி

ஆடிக்காற்றே வா! வா!

மண் தூவி விதை தூவி

முளை காண விழை காற்றே

என் சொல் கேளேன்.

நெல்லை நாறப் புழுக்குறானே

அவனைப் படியில் உருட்டிவிடு

இளைத்தவன் வயிற்றில் சொடுக்குறானே

அவனைக் குழியில் இறக்கிவிடு

மஞ்சள் இதழில் பச்சை கிறுக்குறானே

அவனை பனை மரத்தில் தொங்கவிடு

உதைத்துக் கொள்ளட்டும்

துள்ளல் அடங்கட்டும்.

புரட்சிக் காற்றே!

இன்னும் ஒன்றே ஒன்று

இவற்றைக் காண விழைந்த என் துணை

இதோ, இங்கே நிலப்படுக்கையில்,

எனக்காக -

மல்லிகை மலர்களைத் தூவ மாட்டாயா?

மெல்ல -

மெல்லத் தூவு, நோகாமல் தூவு.

 

ஆடிக்காற்றே - சிற்பி

கவிதையின் விளக்கம்:

  • ஆடி மாதத்தில் வீசும் காற்றை கவிஞர் இன்முகத்தோடு வரவேற்கும் வகையில் ‘ஆடிக்காற்றே வா வாஎன்று பாடுகின்றார்.
  • ஆடிக்காற்றைப் புரட்சிக் காற்று என்றும் வர்ணிக்கின்றார்.
  • மண்ணையும் விதைகளையும் தூவி அவை பயிராவதைக் காண விரும்பும் உழவர்களுக்கு உதவும் வகையில், தன் சொல் கேட்குமாறு ஆடிக்காற்றிடம் கூறுகின்றார் கவிஞர். 
  • கல்நெஞ்சம் கொண்டு மக்களைப் பல வகைகளில் துன்புறுத்தும் சில சமுதாய துரோகிகளை எவ்வாறெல்லாம் தண்டிக்க வேண்டும் என்று தன் ஆதங்கத்தை ஆடிக்காற்றிடம் தெரிவிக்கின்றார்.

1.அரிசியைத் துர்நாற்றத்தோடு எடுத்து வழங்குபவனை படியில் உருட்ட வேண்டும்.

2.அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களுக்குப் பணமும் கொடுக்காமல் விளைச்சலில் பங்கும் தராமல் அவர்கள் வயிற்றில் அடித்து பட்டினி போடுகின்றவனைக் குழியில் இறக்க வேண்டும்.

3.பிறரை இழிவுபடுத்தும் வகையில் மஞ்சள் இதழில் ஆபாசமாக எழுதுகின்றவனைப் பனை மரத்தில் தொங்க விட்டு, துள்ளல் அடங்கித் தானே இறந்து போக வேண்டும்.

என்று ஆடிக்காற்றிடம் விண்ணப்பம் செய்கின்றார். இறுதியாக, ‘அவற்றைக் காண விரும்பிய என் மீது மல்லிகை மலர்களைத் தூவ மாட்டாயா? தூவினால் மெல்லத் தூவு, நோகாமல் தூவுஎன்றும் கூறுகின்றார்.


வியாழன், 18 மே, 2023

நாட்டுப்புறப் பாடல் - மானம் விடிவெதெப்போ?

 

நாட்டுப்புறப் பாடல் 

மானம் விடிவெதெப்போ?

மழையில்லாத காலத்தில் கன்னிப் பெண்கள் வருணனை வேண்டிப் பாடும் பாக்கள் இவை.

பூமியை நம்பி புத்திரைத் தேடி வந்தோம்.

பூமி பலி எடுக்க புத்திரர் பரதேசம்,

மானத்தை நம்பி மக்களைத் தேடி வந்தோம்.

மானம் பலியெடுக்க மக்களெல்லாம் பரதேசம்.

ஏர் பிடிக்கும் தம்பியெல்லாம் பின்னப் பட்டு நிக்கிறாங்க.

அந்தக் குறை கேட்டு வந்திறங்கு வர்ண தேவா...

மேழி பிடிக்கும் தம்பியெல்லாம் முகஞ் சோர்ந்து நிக்கிறாங்க...

அந்தக் குறை கேட்டு வந்திறங்கு வர்ணதேவா....

காட்டுத் தழை பறித்து கையெல்லாம் கொப்புளங்கள்

கடி மழை பெய்யவில்லை கொப்புளங்கள் ஆறவில்லை.

வேலித் தழை பறித்து விரலெல்லாம் கொப்புளங்கள்

விரைந்து மழை பெய்யவில்லை வருத்தங்கள் தீரவில்லை.

மானம் விடிவதெப்போ எங்க மாட்டுப் பஞ்சம் தீர்வதெப்போ?

பூமி செழிப்பதெப்போ எங்க புள்ளைப் பஞ்சம் தீர்வதெப்போ?

ஓடி வெதச்ச கம்பு ஐயோ! வருணதேவா

ஊடு வந்து சேரலையே பாடி வெதச்ச கம்பு

ஐயோ வருணதேவா பானை வந்து சேரலையே.

பாடல் விளக்கம்:

          மக்கள் தங்கள் குறைகளைத் தீர்க்க மழை பெய்யச் செய்யுமாறு வருணனிடம் வேண்டுகின்றனர்.

  • மக்கள் உயிர் பிழைக்க ஊர்விட்டு ஊர் வந்தனர். ஆனால், அவர்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் உணவு நீர் இல்லாமல் தவித்தனர்.
  • மழை வரும் என்று வானத்தை நம்பியதும் வீண்போனது. மழை பெய்யவில்லை. மக்களெல்லாம் உடல் மெலிந்து இறக்கும் சூழ்நிலைக்கு ஆளானார்கள்.
  • ஏர் பிடித்து உழவு செய்பவர்களெல்லாம் தாங்கள் விதைத்த விதை பயிராகவில்லையே என்று வருந்தி முகம் சோர்ந்து நிற்கின்றனர். அவர்கள் குறையைத் தீர்க்க மழையாக வந்திறங்கு வருணதேவா என்று வேண்டுகின்றனர்.
  • தங்களுக்கு உணவு இல்லாமல் போனாலும் தங்களை நம்பியிருக்கும் மாடு, கன்றுக்கு உணவு தரவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டு காட்டிலும் வேலியிலும் தழை பறித்ததால், அவர்களின் கைகளிலும், விரல்களிலும் கொப்புளங்கள் ஏற்பட்டன. 
  • அப்பொழுதும் மழை பெய்யவில்லை. அவர்களின் குறை தீரவில்லை. கொப்புளங்கள் ஆறவில்லை.
  • மழை வரும் என்று நம்பி வானத்தை பார்த்து ஏமாற்றம் அடைந்த மக்கள் தங்கள் பஞ்சம் எப்பொழுது தீரும் என்றும், பூமி எப்பொழுது செழிக்கும் என்றும் அழுது புலம்பினர்.
  • ஓடியும் பாடியும் விதைத்த கம்பு பயிராகவில்லையே தாங்கள் விதைத்த பானையளவுகூட விளைச்சல் இல்லையே என்று கவலையோடு கூறி இக்குறையைத் தீர்க்க வந்திறங்கு வர்ணதேவா என்று அவ்வூரிலுள்ள கன்னிப் பெண்கள் வருணதேவனை வேண்டிப் பாடினர்.

 

 

நாட்டுப்புறப்பாடல் - பஞ்சம்

 நாட்டுப்புறப்பாடல்

பஞ்சம்

தாது வருடப் பஞ்சத்திலே  - ஓ சாமியே

தாய் வேறே பிள்ளைவேறே - ஓ சாமியே

அறுபது வருசம் போயி - ஓ சாமியே

அடுத்தாப்போலே தாதுதானே  - ஓ சாமியே

தைப்பொங்கல் காலத்திலே - ஓ சாமியே

தயிருக்கும் பஞ்சம் வந்ததே  - ஓ சாமியே

மாசி மாதத் துவக்கத்திலே   - ஓ சாமியே

மாடுகளும் பட்டினியே - ஓ சாமியே

பங்குனிக் கடைசியிலே  - ஓ சாமியே

பால் மாடெல்லாம் செத்துப் போச்சே - ஓ சாமியே

சித்திரை மாதத் துவக்கத்திலே  - ஓ சாமியே

சீரெல்லாம் குலைந்து போச்சே - ஓ சாமியே

வைகாசி மாதத்திலேதான் - ஓ சாமியே

வயிறு எல்லாம் ஒட்டிப்போச்சே - ஓ சாமியே

ஆனி மாதத் துவக்கத்திலே  - ஓ சாமியே

ஆணும் பெண்ணும் அலறலாச்சே - ஓ சாமியே

ஆடி மாதத் துவக்கத்திலே - ஓ சாமியே

ஆளுக்கெல்லாம் ஆட்டமாச்சே - ஓ சாமியே

ஆவணி மாசத் துவக்கத்திலே - ஓ சாமியே

ஆட்டம் நின்று ஓட்டமாச்சே - ஓ சாமியே

புரட்டாசிக் கடைசியிலே - ஓ சாமியே

புரண்டுதே உலகம் பூரா - ஓ சாமியே

ஐப்பசித் துவக்கத்திலே  - ஓ சாமியே

அழுகையுண் சீருந்தானே - ஓ சாமியே

கார்த்திகைக் கடையிலே  - ஓ சாமியே

கண்ட இடம் எல்லாம் பிணம் - ஓ சாமியே

மாகாராணி புண்ணியத்திலே - ஓ சாமியே

மார்கழிப் பஞ்சம் நின்றதே - ஓ சாமியே

காட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓ சாமியே

வீட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓ சாமியே

ரோட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓ சாமியே

மேட்டுப் பக்கம் நூறு பிணம்  - ஓசாமியே

ஆற்றிலேயும் தண்ணியில்லை - ஓ சாமியே

கிணற்றில் பார்த்தால் உப்புத் தண்ணி - ஓசாமியே

கிழடு கட்டை குடிக்குந் தண்ணி - ஓ சாமியே

தவறினது கோடி சனம்  - ஓ சாமியே

கஞ்சியில்லா மேதவித்து - ஓ சாமியே

கஞ்சித் தொட்டி போட்டார்களே - ஓ சாமியே

அன்புடனே சலுக்கார்தானே - ஓ சாமியே

காலம்பர கோடி சனம் - ஓ சாமியே

கஞ்சி குடித்துக் களையாத்துச்சே - ஓ சாமியே

பொழுது சாயக் கோடி சனம்  - ஓ சாமியே

பொழைச்சுதே உசிர் தப்பித்து - ஓ சாமியே

கஞ்சிக்குக் கடிச்சிக்கிற - ஓ சாமியே

காணத் துவையல் கொடுத்தாங்களே - ஓ சாமியே

பாடல் விளக்கம்:

நாட்டிற்கு இன்றியமையாத தேவை மழை. மழை பொழியாவிட்டால் ஆறு குளங்கள் வறண்டு விடும். அதனால் விளைச்சல் குறையும். நாட்டில் பஞ்சம் ஏற்படும். நம் நாட்டில் தாது வருடத்தில் ஏற்பட்ட பஞ்சம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்பஞ்ச காலத்தில் நாட்டில் நடைபெற்ற கொடிய நிகழ்வுகளை இந்நாட்டுப்புறப்பாடல் தெளிவாகக் காட்டுகின்றது.

இப்பாடலில் தமிழ் மாதங்களின் பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டு, அம்மாதங்களில் ஏற்பட்ட பஞ்சத்தின் கொடுமைகள் விளக்கப்பட்டிருப்பது இப்பாடலின் தனிச்சிறப்பாகும்.

  • தை மாதத்தில் தயிருக்குப் பஞ்சம் வந்தது.
  • மாசி மாதத் துவக்கத்தில் மாடுகள் பட்டினி கிடந்தன.
  • பங்குனி மாதத்தில் பட்டினியால் பசு மாடுகள் இறந்தன.
  • சித்திரை மாதத்தில் நகரத்தின் அழகும், புகழும் அழிந்து போனது.
  • வைகாசி மாதத்தில் உணவு இல்லாமல் மக்களின் வயிறுகள் காய்ந்து போனது.
  • ஆனி மாதத்தில் ஆண்களும் பெண்களும் பசியால் அலறினார்கள்.
  • ஆடி மாதத்தில் பசியின் கொடுமையால் மனிதர்களின் உடலெல்லாம் நடுங்கியது.
  • ஆவணி மாதத்தில் நடுக்கம் நின்று மக்கள் அங்குமிங்கும் பசியால் ஓடினார்கள்.
  • புரட்டாசி மாதத்தில் மக்களுக்கு உலகமே தலை கீழாகப் போயிற்று.
  • ஐப்பசி மாதத்தில் எல்லா இடங்களிலும் அழுகைக் குரல் ஒலித்தது.
  • கார்த்திகை மாதத்தில் பார்க்கின்ற இடங்களில் எல்லாம் பிணங்கள் கிடந்தன.
  • இறைவனின் அருளால் மார்கழி மாதம் பஞ்சம் தீர்ந்தது.

காட்டில், வீட்டில், ரோட்டில், மேட்டில் என காணும் இடங்களில் எல்லாம் நூறு நூறு பிணங்கள் தென்பட்டன. கிணற்றுத் தண்ணீரும் உப்புத் தண்ணீராய் மாறியது. அத்தண்ணீரை வயதானவர்கள் மட்டும் குடித்தனர். கோடி மக்கள் மடிந்தனர். கஞ்சிக்கு வழியில்லாமல் தவித்தனர். பஞ்சத்தின் கொடுமையை அறிந்த அரசாங்கம் கஞ்சித் தொட்டியை வைத்து மக்களின் பசியை ஆற்ற முயற்சி செய்தது. கஞ்சியோடு துவையலையும் கொடுத்தது. காலையும் மாலையும் கஞ்சி குடித்து மக்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொண்டனர்.