சிற்றிலக்கியங்களில் அறிவியல்
நாயக்கர் காலத்தில் தோன்றிய சிற்றிலக்கியங்கள்
பல. அவற்றுள் பிள்ளைத் தமிழ், அந்தாதி, தூது, கலம்பகம், பரணி, குறவஞ்சி, பள்ளு, கோவை உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் சிறப்புப் பெறுகின்றன. இவ்வகை இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள அறிவியல் செய்திகளைப் பின்வருமாறு காணலாம்.
இயற்பியல்
தமிழர்களின் இயற்பியல் அறிவினை அமுதாம்பிகைப்
பிள்ளைத்தமிழ் வெளிப்படுத்துகின்றது. அமுதாம்பிகை
ஆடும் ஊசலின் கயிறு நீளமாக இருந்ததால் மெதுவாக ஆடுகின்றது. ஆனால், அவள் காதில் அணிந்திருக்கும்
குண்டலம் குறைவான நீளத்தில் தொங்குவதால் விரைவாக ஆடுகிறது என்பதை,
மகரக்குழைகளும் ஊசலாட
பங்கய மடமாதர் நோக்கி இருவேம்ஆட்ட – அவ்வூசலில்
பாய்ந்திலது இவ்வூசல் என –
(அமுதாம்பிகைப் பிள்ளைத்தமிழ்)
என்ற பாடல் வாயிலாக சிவஞான முனிவர் பதிவு செய்துள்ளார்.
“ஊசலின் நீளம் குறைவாக இருந்தால் விரைவாக ஆடும். ஊசலின் நீளம் அதிகமாக இருந்தால் மெதுவாக ஆடும்” என்பது விஞ்ஞானி கலிலியோ அவர்கள் கண்டறிந்த உண்மை. இவ்வாறு ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்ட உண்மைகளைத் தமிழர்கள் தங்கள் அனுபவத்தால் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளமை வியப்பிற்குரியது.
இதே போன்று மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழில், “வளர்சிமய இமயப் பொருப்பில் விளையாடும் இனமென் பிடியே” என்ற பாடலில், இமயமலை வளர்கின்றது என்ற கருத்தை முன் வைக்கின்றார் குமரகுருபரர்.
இன்று http:wikipedia.org/w! என்ற இணைய தளத்தில் இமயமலை ஆண்டிற்கு 5 மீட்டர் உயர்கிறது என்றும்,
இந்தியத் தகடு ஆசியத் தகட்டுக்குள் நுழைவதால் இப்பகுதியில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகின்றது
என்றும் கூறுகின்றது. இக்கால அறிவியல் முன்னேற்றத்தின்படி இதுபோன்ற செய்திகளை அறிவது
எளிதென்றாலும், இவ்வகையான எவ்விதச் சிந்தனைகளும் தோன்றாத நிலையில் குமரகுருபரர் இமயமலை
வளர்வதைப் பாடியுள்ளது பெருமை தரக்கூடிய செய்தியாகும்.
மழைப்பொழிவு
கடல்நீரை முகந்து சென்று மேகமானது மழை பொழியும் என்னும் அறிவியல் சிந்தனையை,”ஏரி நீர் செழிக்க வாரி நீர் கொழிக்கும் மாரி நீர் வளர்தென்” என்று குற்றாலக் குறவஞ்சி பாடுகின்றது.
மருத்துவம்
போரில் புண்பட்ட வீரர்களுக்கு அப்புண்களை நெருப்பால் சுட்டுக் குணமாக்கும்
மருத்துவம் தரப்பட்டுள்ளது. இதற்கு வேது கொடுத்தல் என்று பெயர். இதனைக் குலசேகர ஆழ்வார்,
“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல்” எனச் சுட்டுகின்றார்.
உடலில் தீப்பட்டு எரிந்து போனால் எரிச்சல் நீங்க வாழை இலையில் கிடத்துதல்
மரபு. இதனை, திருக்குற்றாலக் குறவஞ்சி, “அணைத்து
வாழைக் குருத்தில் கிடத்துவார்” என்று பதிவு
செய்கின்றது.
சித்த மருத்துவத்தின் அடிப்படை மூலிகைகளாகும். சித்தர்கள் இவற்றை மலைகளில்
இயற்கையாகப் பெற்றதோடு அவற்றை தாங்களே விளைவித்தும் பெற்றுள்ளனர் என்பதை, “ககன சித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பர்” என்று குற்றாலக்குறவஞ்சி காட்டுகின்றது.
இதுபோன்ற சித்தர்கள் வாழ்ந்து, அண்டம், பிண்டம், உடல், உள்ளம், அவற்றைத்
தாக்கும் நோய்கள், அதற்கான மருத்துவம் என ஏராளமான செய்திகளைத் தந்திருப்பதும் சிற்றிலக்கியங்கள்
தோன்றிப் பெருகியிருந்த இக்காலக்கட்டத்தில்தான் என்பதும் சிந்திக்கத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக