உரை நூல்களில் அறிவியல்
தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்திற்கும், ஏனைய இலக்கண
நூல்களுக்கும் இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சிவஞான முனிவர், பிள்ளைப்பெருமாள்
ஐய்யங்கார் உள்ளிட்ட பல உரையாசிரியர்கள் உரை எழுதி உள்ளனர். நூலாசிரியர் அறிவியல் தன்மையுடன்
கூறியுள்ள செய்திகள் சிலவற்றுக்குப் பிற்காலத்தில் உரை எழுதிய உரையாசிரியர்கள் தங்கள்
கல்வி மற்றும் அனுபவத்தால் பெற்றப்பட்ட அறிவியல் செய்திகளை விரித்துத் தந்துள்ளனர்.
அவற்றுள் சிலவற்றைப் பின்வருமாறு காணலாம்.
பிறப்பியல்
தொல்காப்பியர் பிறப்பியலில் “உந்தி முதலா முந்து வளி” என்று கூறியுள்ள நூற்பாவுக்கு, உடற்கூற்றியலார் போல உரை எழுதியுள்ளார் நச்சினார்க்கினியர். தொப்புள் பகுதியில் காற்று உந்தப்படுவதால் எழுத்துப் பிறக்கின்றது என்று கூறப்படுகின்றது. அந்தக் காற்று நெஞ்சிலும், தலையிலும், கழுத்திலும் தங்கி, வாய் உறுப்புகள் வழியாக இயங்கி, வெவ்வேறு எழுத்தொலிகளாகப் பிறக்கின்றன என்பது மொழியியலாரின் கருத்து.
நிலமும் பொழுதும்
நன்னூல் என்ற இலக்கண நூலுக்கு உரை எழுதிய மாதவச் சிவஞான முனிவர், நிலமும்
பொழுதும் எல்லாச் செயல்களுக்கும் முதன்மையானவை என்று தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூற்று இயற்பியல் அறிவின் அடிப்படையைக் குறிப்பிடுவதாக உள்ளது.
மரபியல்
தொல்காப்பியர் மரபியலில் உயிர்களின் அறிவு நிலையை விளக்கியுள்ளார்.
அதற்கு உரையாசிரியர்கள் அறிவின் அடிப்படையில் ஓரறிவு உயிர், ஈரறிவு உயிர் எனத் தொடங்கி
ஆறறிவு மக்கள் வரை காரண காரியத்துடன் விரித்துக் கூறியுள்ளனர்.
அண்டம்
பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் அண்டங்களைப் பற்றி விரிவான செய்திகளைக்
கூறியுள்ளார். சூரியன்களும், அவற்றின் குடும்பங்களைச் சேர்ந்த கோள்களும் அண்டங்களின்
வெட்ட வெளியில் சுற்றிக் கொண்டுள்ளன. இவை ஏதோ ஒரு கணக்குப்படி ஒன்றோடு ஒன்று மோதிக்
கொள்ளாமல் சுற்றுகின்றன. இப்பேரண்டச் சரங்களை “ஞாலத் திகிரி” என்று வழங்குகின்றார்
பிள்ளைப் பெருமாள் அய்யங்கார். (திகிரி - சக்கரம், உருளை)
கடல்நீர் கதிரவன் வெப்பத்தால் ஆவியாக மாறுகிறது. நீராவி முகிலாக உருவமடைகின்றது.
இந்த மேகம் சூல் கொண்டு கறுத்து மழையாகப் பொழிகின்றது. இந்த நீர் ஆறாகப் பாய்ந்து கடலோடு
சங்கமம் ஆகின்றது. மீண்டும் சக்கரம் சுழல்கின்றது. இவ்வாறு வட்டவளையமாகச் சுற்றும்
இயக்கத்தை “முதுநீர்த்திரள்” என்று வழங்குகின்றார் அய்யங்கார். இவ்வாறான முதுநீர்ச்
சக்கரத்தைப் போலவே பருவச் சக்கரமும் தொடர்ந்து சுழல்கின்றது.
ஞாலத்திகிரி, முதுநீர்த் திகிரி முதலியவற்றைச் சுற்றச் செய்யும் மூலத்
திகிரி எது என்றால் காலம் என்ற கண்ணுக்குத் தெரியாத கூறுபாடு அடையாத திகிரி என பிள்ளைப்
பெருமாள் அய்யங்கார் கூறுகின்றார்.
நீளம், அகலம், உயரம் என்ற மூன்று அளவைகளை நாம் அறிவோம். இவற்றாடு உலந்து
பிரிக்க முடியாத நான்காவது அளவை ஒன்று உண்டு. அதுவே காலம் என்ற அளவை என்பதை, அறிவியல்
முறையில் நிலைநாட்டின பெருமை ஐன்ஸ்டைன் என்ற அறிஞருக்கு உண்டு. அறிவியலறிஞர்கள் இன்னும்
புதுப்புது அளவைகளைக் கண்டு பிடிக்கலாம். அவற்றிற்கும் இடங்கொடுக்க வேண்டும் என்று
கருதியதாலோ என்னவோ, 600 ஆண்டுகட்கு முன் வாழ்ந்த கவிஞர் அய்யங்கார், “நடாத்தும் அந்தக்
காலத் திகிரி முதலான யாவும்” எனக் குறித்துச் சென்றுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக