பன்னிரு
ஆழ்வார்கள்
வைணவ சமயத்தின் தெய்வமாகக் கருதப்படுபவர்
திருமால். அவர் மீது பக்தி கொண்டு தமிழ்ப் பாடல்களை இயற்றியவர்களை ஆழ்வார்கள் என்று கூறுவர்.
திருமாலின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்களை ஆழ்வார்கள் என்ற சொல்லால்
குறித்தனர். நாதமுனிகள் என்பவர் இவர்கள் இயற்றிய 4000
பாடல்களை நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்ற பெயரில் பெரும் நூலாகத் தொகுத்துள்ளார்.
திவ்விய என்ற சொல் திருமாலையும், பிரபந்தம் என்ற
சொல் பாடலையும் குறிக்கின்றது. இந்நூல் ஆன்ற தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம், திராவிடப் பிரபந்தம்
என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. இந்நூல்,
முதலாயிரம் - 947 பாடல்கள்
பெரிய திருமொழி – 1134 பாடல்கள்
திருவாய்மொழி – 1102 பாடல்கள்
இயற்பா – 817 பாடல்கள்
என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பாடல்கள் அனைத்தும்
திருமாலையும், அவரது பல்வேறு அவதாரங்களையும் குறித்துப் பாடுகின்றன.
பெரும்பாலான பாடல்கள் திருமாலின் 108 திவ்ய தேசங்களில்
பாடப்பட்டுள்ளன. இனி இவற்றைப் பாடிய பன்னிரு ஆழ்வார்கள் குறித்துக்
காண்போம்.
முதலாழ்வார் மூவர்
பன்னிரு ஆழ்வார்களுள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார்,
பேயாழ்வார் மூவரும் முதலாழ்வார்கள் எனப்படுகின்றனர். மூவரும் ஐப்பசி மாத்தில் அடுத்தடுத்த நாளில் தோன்றியவர்கள். மூவரும் தாமரை, குருக்கத்தி, செவ்வல்லி
என்னும் மலர்களில் அவதரித்துள்ளனர். திருமாலின்
பாஞ்சசன்னியம், கதாயுதம், நந்தகம் என்ற
ஆயுதங்களின் அவதாரமாகக் கருதப்படுகின்றனர். பிற ஆழ்வார்களோடு
காலத்தால் முற்பட்டவர்களாக இருக்கின்றனர். மூவரும் ஒரே இடத்தில்
ஒரே நேரத்தில் திருமாலால் ஆட்கொள்ளப்பட்டனர். இத்தகைய காரணங்களால் இவர்கள் முதலாழ்வார்கள் என்று போற்றப்படுகின்றனர்.
முதலாழ்வார்
மூவரும் ஆட்கொள்ளப்பட்ட நிலை
திருக்கோவிலூர் என்னும் ஊரில் ஒரு வீட்டின் திண்ணையில் பொய்கையாழ்வார் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது பூத்தாழ்வார் அங்கு வந்து சேர்ந்தார். “இங்கே ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம்” என்று கூறி பூதத்தாழ்வார் அமரப் பொய்கையாழ்வார் இடம் தந்தார். அப்போது பேயாழ்வாரும் அங்கு வந்து சேர்ந்தார். அப்போது முதல் இருவரும் “இங்கு ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம். மூவர் நிற்கலாம்” என்று கூறிப் பேயாழ்வாருக்கு இடம் தந்தனர். இருள்மயமாக இருந்த அப்பொழுதில் இம்மூவருக்கும் இடையில் இன்னொருவர் சேர்ந்து நெருக்குவதுபோல மூவரும் உணர்ந்தனர். அது திருமால் தான் என உணர்ந்து மூவரும் இறைவனைப் பாடினர். இறையனுபவத்தில் இம்மூவரும் பாடிய நூறு நூறு பாடல்களே முதல் மூன்று திருவந்தாதிகளாக அமைந்துள்ளன.
1.பொய்கையாழ்வார்
இவர் முதலாழ்வார் மூவருள் முதலாமவர். காஞ்சிபுரத்தில்
திருவெஃகா என்னும் இடத்தில் உள்ள பொய்கையில் தாமரை மலரில் தோன்றியதால்
பொய்கையாழ்வார் எனப்படுகிறார். திருமாலின் பாஞ்சசன்னியம் என்ற
சங்கின் அவதாரமாகக் கருதப்படுகிறார். இவர் பாடிய 100 பாடல்கள் முதல் திருவந்தாதியாக அமைந்துள்ளன. காலம் கி.பி.
6 அல்லது 8 ஆம் நூற்றாண்டு ஆகும்.
2.
பூதத்தாழ்வார்
இவர் முதலாழ்வார் மூவருள் இரண்டாமவர். இவர் மாமல்லபுரத்தில்
குருக்கத்தி மலரில் தோன்றினார் என்பர். திருமாலின் கௌமோதகி என்ற
கதாயுதத்தின் அவதாரமாகக் கருதப்படுகிறார். தம் பாடல்களில் பூதம்
என்ற சொல்லைப் பல இடங்களில் அமையப் பாடியுள்ளமையால் பூதத்தாழ்வார் எனப்படுகிறார்.
காலம் கி.பி.6 அல்லது
8ஆம் நூற்றாண்டு. இவர் பாடிய 100 பாடல்கள் இரண்டாம் திருவந்தாதியாக அமைந்துள்ளன.
3.
பேயாழ்வார்
முதலாழ்வார் மூவருள் மூன்றாமவர். இவர் மயிலாப்பூரில்
செவ்வல்லி மலரில் பிறந்தார். திருமாலின் நந்தகம் என்ற வாளின்
அவதாரமாகக் கருதப்படுகின்றார். திருமாலின் மீது கொண்ட பக்தியால்
நெஞ்சம் சோர்ந்து அழுது சிரித்து ஆடிப் பாடிப் பேய் பிடித்தாற்போல இறைவனைத் தொழுது
மகிழ்ந்ததால் பேயாழ்வார் என்ற பெயர் பெற்றார். காலம் கி.பி. 6 அல்லது 8ஆம் நூற்றாண்டு.
இவர் பாடிய 100 பாடல்கள் மூன்றாம் திருவந்தாதியாக
அமைந்துள்ளன.
4.
திருமழிசையாழ்வார்
இவர் திருமழிசை என்னும் ஊரில் பிறந்தவர். பக்திசாரர் என்று
அழைக்கப்படுகின்றார். திருமாலின் திருச்சக்கரத்தின் அவதாரமாகக்
கருதப்படுகின்றார். திருமாலைத் தன் நண்பனாகப் பாவித்துப் பல பாசுரங்களை
இயற்றியுள்ளார். இவருடைய காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டு.
கோயில் பணி செய்து கொண்டிருந்த
மூதாட்டி ஒருவர் முதுமையால் பணி புரிய முடியாமல் தள்ளாடியதைக் கண்டார். திருமாலிடம் மனமுருகி
வேண்ட அம்மூதாட்டி இளமை பெற்றார். இந்தச் செய்தியை அறிந்த அந்நாட்டு
மன்னன் அவரின் சீடனான கணிகண்ணனிடம் “ஆழ்வாரை அரண்மனைக்கு அழைத்து
வந்து தன்னையும் இளமையாக்குமாறு” கூறினான். கணிகண்ணன் மறுத்தார். உடனே தன்னைப் புகழ்ந்து பாட வேண்டும்
என்று மன்னன் ஆணையிட்டான். “நாராயணனைப் பாடும் வாயால் நரனை
(மனதினை) பாடேன்” என்றார்
கணிகண்ணன். கோபமுற்ற
மன்னன் “உடனே நீ ஊரை விட்டு வெளியேற வேண்டும்” என உத்தரவிட்டான். இதனை அறிந்த திருமழிசையாழ்வார் கோயிலில்
திருமாலிடம் சென்று,
கணிகண்ணன் போகின்றான் காமரும்
பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – துணிவுடைய
செந்நாப் புலவன்யான் செல்கின்றேன்
நீயும் உன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக்
கொள்
எனக் கூறினார். இறைவனும் ஆழ்வார் சொன்னவண்ணம் திருமழிசையாழ்வாரோடும்
கணிகண்ணனோடும் புறப்படத் தயாராகி கோயிலில் இருந்து மறைந்து விட்டார். உண்மை உணர்ந்த மன்னன் அச்சம் கொண்டு, திருமழிசையாழ்வாரிடமும்,
கணிகண்ணனிடமும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். உடனே, திருமழிசையாழ்வார் திருமாலிடம் “செந்நாப் புலவன் போக்கொழிந்தேன் நீயும் உன்றன் பைந்நாகப் பாய் விரித்துக் கொள்
” என்று பாட, இறைவன் சிலை, முன்பு போல் தோன்றியது. ஆழ்வார் சொன்ன வண்ணம் செய்த காரணத்தால்
காஞ்சிப் பெருமாளுக்குச் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்ற பெயர் நிலைத்து விட்டது.
இவர் இயற்றிய நூல்கள் திருச்சந்த
விருத்தம், நான்முகன் திருவந்தாதி ஆகியனவாகும்.
5.
நம்மாழ்வார்
இவர் பாண்டிய நாட்டிலுள்ள ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை மாறன் காரி. தாய் உடைய நங்கை. நம்மாழ்வார் குழந்தையாக இருந்தபோது இவரது பெற்றோர் இவரைப் பெருமாள் கோயிலில் இறக்கி விட்டனர். நம்மாழ்வார் தவழ்ந்து சென்று புளியமரத்தடியில் பத்மாசனம் இட்டு யோகத்தில் அமர்ந்தார். அந்தப் புளிய மரத்தை ஆதிசேடனின் அவதாரம் என்றும் கூறுவர். பிறந்தது முதல் பேசாதிருந்து புளியமரத்தடியில் தவமியற்றி திருமாலின் திருவருளால் பேசியவர். குழந்தை முதலே யோகத்தில் இருந்த இவர் அசைவு தரும் காற்றாகிய சடம் என்னும் வாயுவைச் சினந்து அடக்கியதால் சடகோபர் எனப்பட்டார். திருமால் இவரை நம்சடகோபன் என அழைத்தமையால் நம்மாழ்வார் என அழைக்கப்படுகின்றார். காரிமாறன், பராங்குசன், தமிழ் மாறன், வகுளாபரணன் என்பன இவருடைய வேறு பெயர்களாகும். திருஆசிரியம், திருவாய்மொழி, திருவிருத்தம், பெரிய திருவந்தாதி ஆகிய நான்கு நூல்களைப் பாடியுள்ளார். இவரை வேதம் செய்த தமிழ்மாறன் என்றும், வைணவத்து மாணிக்கவாசகர் என்றும் புகழ்வர். இவர் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு.
6.
மதுரகவியாழ்வார்
இவர் பாண்டிய நாட்டுத் திருக்கோளூரில்
பிறந்தவர். செவிக்கினிய சிந்தனைக்கினிய பல பாடல்களைப் பாடிய காரணத்தால் இவர் மதுரகவியாழ்வார்
எனப் பெயர் பெற்றார். இவர் நம்மாழ்வாரின் சீடர். திருமால் அடியவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டாலும், நம்மாழ்வாரையே
தெய்வமாக நினைத்துப் பல பாசுரங்களைப் பாடியுள்ளார். இவரது பாடல்கள்
“கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்று அறியப்படுகின்றன.
11 பாசுரங்களைக் கொண்ட இந்நூல் கண்ணிநுண் சிறுத்தாம்பு என்று தொடங்குவதால்
அப்பெயராலேயே அழைக்கப்படுகிறது. இவருடைய காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு.
7.குலசேகராழ்வார்
இவர் சேர நாட்டில் உள்ள திருவஞ்சைக்களம்
என்ற பகுதியைச் சேர்ந்தவர்.
திருடவரதன் என்னும் மன்னனின் மகன். திருமால் மீது
கொண்ட பக்தியால் அரச பதவியைத் துறந்தவர். திருமாலின் கௌத்துப
மணியின் அவதாரமாகக் கருதப்படுகின்றார். கடல் நாயகன், கோழிக்கோன் என்பது இவருடைய வேறு பெயர்கள். திருவேங்கட மலையில் பறவையாக,
மீனாக, ஆறாக, படியாக,
கொடிமரமாகப் பிறக்கும் வரம் கிடைக்க வேண்டும் என வேண்டியவர்.
தமிழில் பெருமாள் திருமொழி, வடமொழியில் முகுந்த
மாலை என்று நூல்களை இயற்றியுள்ளார். இவருடைய காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டு என்பர்.
8.
பெரியாழ்வார்
இவர் திருவில்லிப்புத்தூரைச் சேர்ந்தவர். இவரை விஷ்ணுசித்தன்
என்றும், பட்டர்பிரான் என்றும் கூறுவர். திருவில்லிப்புத்தூரில் ஒரு நந்தவனம் அமைத்துப் பூமாலை கட்டி இறைவனுக்கு அணிவித்து
வழிபாடு செய்து வந்தார். கண்ணனுடைய குழந்தைப் பருவத்தைப் பிள்ளைத்தமிழ் நூலாகப் பாடியுள்ளார்.
ஆண்டாளைத் தம் மகளாகக் கருதி வளர்த்தார். திருமொழி,
திருப்பல்லாண்டு என்ற இரு நூல்களை இயற்றியுள்ளார். திருப்பல்லாண்டு பாடியதால் பெரியாழ்வார் எனப் போற்றப்படுகின்றார். இவருடைய காலம் கி.பி. ஒன்பதாம்
நூற்றாண்டு.
9.
ஆண்டாள்
பெரியாழ்வார் வளர்த்த பெண்பிள்ளை
இவர். இவர் அணிந்த மலர்மாலையை இறைவன் மனமுவந்து ஏற்றதால் இவரைச் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
என்று அழைப்பர். “மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழ்கில்லேன்”
என்று உறுதியான மனம் கொண்டு திருமாலையே காதலானாக எண்ணியவர். இறைவனையே ஆண்டதால் ஆண்டாள் எனப்படுகின்றார். நாச்சியார்
திருமொழி, திருப்பாவை என்ற இரு நூல்களைக் காதல் சுவை ததும்பப்
பாடியுள்ளார். இவருடைய
காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு.
10.திருப்பாணாழ்வார்
இவர் உறையூரில் பிறந்தவர். இசை வழிபாடு செய்யும்
பாணர் குலத்தில் பிறந்து வளர்ந்து, யாழ் ஏந்திப் பெருமாளைப் பாடி
வந்ததால் திருப்பாணாழ்வார் எனப் பெயர் பெற்றார். திருமாலின் மார்பில்
இருக்கும் மருவின் அவதாரமாகக் கருதப்படுகின்றார். தீண்டத்தகாத
குலத்தில் பிறந்தவர் என்று கருதப்பட்டதால் காவிரியைக் கடந்து திருமாலைக் கண்
குளிரக் காண முடியவில்லையே என்று வருந்தி, காவிரியின் கரையில்
நின்றபடியே திருவரங்கம் இருக்கும் திசை நோக்கித் தவமிருந்தார். திருப்பாணாழ்வார் காவிரிக்
கரையில் நிற்பதையே தீட்டுப்பட்டதாகக் கருதி அந்தணர் குழுவினர் கல்லால் எறிந்து அவரைக்
காயப்படுத்தினர். அந்தணர்களின் செயலைக் கண்டிக்க விரும்பிய திருமால்
திருப்பாணாழ்வார் பட்ட காயத்தின் குருதியைத் தன் நெற்றியில் காட்டினார். தினசரி திருமஞ்சனம் செய்யும் உலோகசாரங்க முனிவரின் கனவில் தோன்றி, கரையில் தவமிருக்கும் திருப்பாணாழ்வாரைத் தோளில் சுமந்து வரச்செய்து
அவருக்குக் காட்சியளித்தார். தான் கண்ட காட்சியில் உள்ளம் நெகிழ்ந்து அரங்கனின்
திருவடி தொடங்கி திருமுடி வரை வர்ணிக்கும் அமலனாதிப்பிரான் என்னும் பத்துப்
பாசுரங்களைப் பாடினார்.
11.
தொண்டரடிப்பொடியாழ்வார்
விப்பிர நாராணன் என்பது இவருடைய
இயற்பெயர். திருவரங்க நாதனுக்குத் தினந்தோறும் மாலை அணிவிக்க ஆலயத்தில் தோட்டம் அமைத்து
மலர்ச் செடிகளை வளர்த்து வந்தார். அங்கு தேவதேவி என்ற பரத்தைப்
பெண்ணுடன் காதல் வயப்பட்டுச் சிறை செல்லும்
நிலைக்கு ஆளானார். பின்னர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார்.
தன் தவறுக்கு வருந்தி திருமாலிடம் மன்னிப்பு கேட்டார். தொண்டர்களுக்கெல்லாம் நான் அடியவன் என்ற பொருளில் தொண்டரடிப்பொடியாழ்வார் என
அழைக்கப்படுகின்றார். திருமாலை, திருப்பள்ளியெழுச்சி
என்ற நூல்களைப் பாடியுள்ளார். திருமாலின் வனமாலையின் அவதாரமாகக்
கருதப்படுகின்றார்.
12.திருமங்கையாழ்வார்
சோழ நாட்டில் திருக்குறையலூரில்
கள்ளர் மரபில் நீலன் என்பவரின் மகனாகத் தோன்றியவர். மாவீரனாகத் திகழ்ந்த இவர் திருவாலி
நாட்டின் மன்னனாகவும், சோழனுக்குப் படைத்தலைவனாகவும் பணியாற்றினார்.
இவருடைய இயற்பெயர் கலியன். வைணவ குலத்தைச் சேர்ந்த
குமுதவல்லி என்னும் பெண்ணை மணந்தார். மனைவியின் விருப்பப்படி
நாள்தோறும் 1008 அடியவர்களுக்கு அமுது படைத்து வந்தார்.
இதனால் சோழப் பேரரசனுக்குத் திறை செலுத்த முடியாமல் வருந்தினார்.
அடியவர்க்கு அமுது படைக்க வழியின்றி வழிப்பறியில் ஈடுபட்டார்.
ஒருநாள் வழிப்பறியின்போது திருமால் தன் தேவியுடன் மணமக்கள் கோலத்தில்
வந்து இவரை ஆட்கொண்டார். இவர் இறைவனின் சாரங்கம் என்னும் வில்லின்
அவதாரமாகக் கருதப்படுகின்றார். நீலன், ஆலி
நாடன், பரகாலன், கலியன் என்பன இவருடைய வேறு
பெயர்கள். பெரிய திருமடல், திருக்குறுந்தாண்டகம்,
திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை,
பெரிய திருமொழி, சிறிய திருமொழி ஆகியன இவர் இயற்றிய
நூல்கள் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக