வியாழன், 16 ஜூலை, 2020

நாச்சியார் திருமொழி - ஆண்டாள்

ஆண்டாள்

பன்னிரு ஆழ்வார்களுள் ஒரே பெண் ஆழ்வாராகப் போற்றப்படுபவர் ஆண்டாள். இவர் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள். பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் கோவிலுக்கு மலர்கள் பறித்து மாலைகள் தொடுத்து கொடுப்பதையே தமது கடமையாகக் கொண்டவர். ஒரு நாள் தோட்டத்தில் மலர் பறிக்கச் சென்றபோது, ஒரு குழந்தையை (ஆண்டாள்) துளசிச் செடியின் கீழ்க் கண்டெடுத்தார். அக்குழந்தைக்குக் கோதை என்று பெயரிட்டார். இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராக இருந்தார் கோதை. கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக் கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காகப் பெரியாழ்வார் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக நாம் இருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்து வந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன.


ஒருநாள் இதனை அறிந்து கொண்ட பெரியாழ்வார் கோதையைக் கடிந்து கொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை ஒன்றைத் தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை சூடிய மாலைகளே தனக்கு உகந்தவை எனவும், அவற்றையே தனக்குச் சூடவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும், இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார். கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காகச் செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உள்ள இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடன் இருந்த பெரியாழ்வாரின் கனவில் இறைவன் தோன்றி, கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்துத் திருவரங்கம் கோயிலுக்கு அழைத்து வருமாறு கூறினார். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள். இவருடைய காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு.

 நூல்கள்

ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார். இவ்விரு நூல்களும் இலக்கியச் செழுமை மிக்கதாகவும்,  தத்துவக் கருத்துகள் உடையதாகவும் காணப்படுகின்றன.

திருப்பாவை

இவரது முதல் படைப்பான திருப்பாவை முப்பது பாடல்களைக் கொண்டுள்ளது.  மார்கழி மாதம் கன்னிப் பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்றும், மழை பெய்ய வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டு, காத்தியாயினி என்னும் பாவைக்கு வழிபாடு செய்வர்.  அதன்படி ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு, திருவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும், வடபெருங்கோயிலை நந்தகோபர் மாளிகையாகவும், அங்கு எழுந்தளியிருக்கும் இறைவனைக் கண்ணனாகவும் பாவித்து நோன்பு நோற்பதாக அமைந்த பாடல்களே திருப்பாவை ஆகும். இப்பாடல்களில் பல வியக்கத்தக்க அறிவியல் செய்திகள் இடம் பெற்றுள்ளன.

நாச்சியார் திருமொழி

இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார்  திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது. இந்நூல் இறைவனை நினைத்து உருகிப்பாடும் காதல் சுவை மிகுந்த பாடல்களின் தொகுப்பாக காணப்படுகின்றது. இப்பாடல்களில் அகப்பொருள் கூறுகள் நிறைந்துள்ளன.

பாடலின் உள்ளுறை

'மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்' என்று தன் உடல், பொருள், ஆவி யாவும் இறைவனுக்கே உரியது என்ற உறுதியுடன், தனது உள்ளம் என்றுமே திருவரங்கனின் திருமலர்க்கரங்களைக் கைப்பிடிக்க கனவு கண்டு காத்துக் கொண்டிருப்பதாக நினைத்து ஏங்குகிறாள். மார்கழி மாதம் முழுநிலவு தினத்தன்று பாவை நோன்பினைத் தொடங்கி,  இறைவனைப் பாடி இறையருளைப் பெறுகின்றாள். இதுவே நாச்சியார் திருமொழியில் உள்ள செய்தியாகும்.  இந்நூலில் பத்துப் பாடல்களைக் கொண்ட 14 தலைப்புகள் காணப்படுகின்றன.

1.   முதற் பத்துப் பாடல்கள் காமனைத் தொழுகின்றன.

2.   இரண்டாம் பத்துப் பாடல்கள், சிறுமியர் மயனைத் தம் சிற்றில் சிதையேல் எனக் கேட்கும் வகையில் அமைகின்றன.

3.   மூன்றாம் பத்துப் பாடல்கள் கன்னியரோடு கண்ணன் விளையாடுவதைக் கூறுகின்றன.

4.   நான்காம் பத்துப் பாடல்கள் கூடல் இழைத்தல் பற்றியன.

5.   ஐந்தாம் பத்துப் பாடல்கள் குயிலை விளித்துப் பாடுகின்றன.

6.   ஆறாம் பத்துப் பாடல்கள் திருமால் தன்னை மணஞ்செய்வதாகக் கண்ட கனவைத் தோழிக்கு உரைப்பதாக அமைகின்றன.

7.   ஏழாம் பத்துப் பாடல்கள் சுற்றமாக்கல் என்னும் தலைப்பில் அமைந்துள்ளன.

8.   எட்டாம் பத்துப் பாடல்கள் மேகவிடுதூதாக அமைந்துள்ளன.

9.   ஒன்பதாம் பத்துப் பாடல்கள் திருமாலை வழிபடும் பாங்கில் அமைந்துள்ளன.

10. பத்தாம் பத்துப் பாடல்கள் மாற்றம் இயம்பல் என்னும் தலைப்பில் அமைந்துள்ளன.

11.  பதினோராம் பத்துப் பாடல்கள் திருவரங்கத்துச் செல்வனைக் காமுறுவதாக அமைந்துள்ளன.

12. பன்னிரண்டாம் பத்துப் பாடல்கள் கோதை தமர்க்குக் கூறிய துணிபு எனும் தலைப்பில் அமைந்தவை.

13. பதிமூன்றாம் பத்துப் பத்துப் பாடல்கள் அவலம் தணி என இறைவனை வேண்டுகின்றன.

14. இறுதிப் பத்துப் பாடல்கள் பிருந்தாவனத்தில் பரந்தாமனைக் கண்டது பற்றிக் கூறுகின்றன. 

இங்கே நமக்குப் பாடமாக வைத்திருப்பது ஆறாம் பத்தில் உள்ள பகுதியாகும்.  கண்ணனை மணம் செய்து கொள்வதுபோல் ஆண்டாள் கனவு கண்டாள். தன் கனவினைத் தன் தோழிக்குக் கூறுகின்றாள். தோழி! நகரத்தில் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன; பூரண கும்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. திருமணப் பந்தலிட்டு முத்துச் சரங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. முகூர்த்த வேளை. கண்ணனோடு அமர்ந்திருக்கிறேன். கண்ணன் என்னைத் திருமணம் செய்து கொள்கிறான். என் கையைப் பிடித்துக் கொண்டு தீயை வலம் வருகிறான். என் காலைப் பிடித்து அம்மியின்மேல் எடுத்து வைக்கிறான். இவை எல்லாம் விரைவிலேயே நிறைவேறக் கண்ணன் அருள்வானோ!' என்று தோழியிடம் கூறி மகிழ்கிறாள். அச்சுவை மிகுந்த பாடல்களைக் காண்போம்.

 நாச்சியார் திருமொழி பாடலும் விளக்கமும்




பாடல் எண் - 1

வாரண மாயிரம் சூழ வலம்செய்து,

நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்,

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்.

விளக்கம்

ஆயிரம் யானைகள் சூழ்ந்து வருகின்றன. அவற்றின் நடுவே என் தலைவனாகிய கண்ணன் நடந்து வந்து கொண்டிருக்கிறான். அவனை எதிர் கொண்டு வரவேற்கும் வகையில், நகர் முழுவதும் பூரணக் கும்பம் வைத்த தோரணக் கம்பங்கள் நடப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்டக் காட்சியைக் கனவில் கண்டு மகிழ்ந்தேன் தோழி! எனத் தன் தோழியிடம் கூறுகின்றாள் கோதை.


பாடல் எண் - 2

நாளைவதுவை மணமென்று நாளிட்டு,

பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,

கோளரி மாதவன் கோவிந்தன் என்பான், ஓர்

காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.

விளக்கம்

நாளை திருமணம் என்று நிச்சயம் செய்வதற்கு, நரசிம்மன் என்றும், மாதவன் என்றும், கோவிந்தன் என்றும் அழைக்கப்படுகின்ற திருமால், பாளைகளோடு கூடிய பாக்கு மரங்கள் கட்டிய மணப்பந்தலின் கீழ்ப் புகுவது போல் கனவு கண்டேன். அவன் காளை போன்ற அழகுடையவனாக இருந்தான் என்று அதிசயிக்கின்றாள் கோதை.


பாடல் எண் 3

இந்திரன் உள்ளிட்ட, தேவர் குழாம் எல்லாம்,

வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து,

மந்திரக் கோடி உடுத்தி மணமாலை,

அந்தரி சூட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்.

விளக்கம்

திருமாலுக்கு என்னைத் திருமணம் பேச, இந்திரன் முதலான தேவர்கள் எல்லோரும் பூமிக்கு வந்திருந்தனர். திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பிறகு திருமாலின் தங்கையாகிய துர்க்கை திருமணப் புடவையை எனக்கு உடுத்தி மணமாலை அணிவித்ததுபோல் கனவு கண்டேன் தோழி என்கிறாள்.

பாடல் எண் – 4

நாற்றிசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி,

பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார்  எடுத்து ஏத்தி,

பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்று என்னை,

காப்புநாண் கட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்.

விளக்கம்

பல அந்தணர்கள் நான்கு திசைகளிலிருந்தும் புனித நீரைக் கொண்டு வந்து நன்றாகத் தெளித்து எங்களை வாழ்த்தி, கண்ணபிரானோடு என்னை இணைத்து காப்பு கட்ட கனவு கண்டேன் தோழி என்று நாணம் கொள்கின்றாள் கோதை.

பாடல் எண் – 5

கதிரொளி தீபம் கலசம் உடன் ஏந்தி,

சதிர் இள மங்கையர் தாம்வந்து  எதிர்கொள்ள,

மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு,எங்கும்

அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீ நான்.

விளக்கம்

மணமகனை வரவேற்க, அழகிய இளம் பெண்கள் மங்கல தீபத்தையும், பொற் கலசங்களையும் தம் கைகளில் ஏந்திக் கொண்டு வந்தனர். அப்போது வட மதுரைக்கு அரசனாகிய கண்ணபிரான் ஆண்மை நிறைந்த கம்பீர நடையுடன் திருமணம் நடைபெற இருக்கும் இடத்தில் நுழைந்ததாகக் கனவு கண்டேன் தோழி என்கிறாள்.

பாடல் எண் – 6

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத,

முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்

கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்.

விளக்கம்

மத்தளங்கள் கொட்டவும், சங்குகள் முழங்கவும், முத்து மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின்கீழ் கண்ணன் என்னைக் கைத்தலம் பற்ற கனவு கண்டேன் தோழி என்கிறாள்.

பாடல் எண் – 7

வாய்நல் லார்நல்ல மறைஓதி மந்திரத்தால்,

பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,

காய்சின மாகளிறு அன்னான் என் கைப்பற்றி,

தீவலம் செய்யக் கனாக்கண்டேன் தோழீ நான்.

விளக்கம்

மந்திரம் ஓதும் வைதிகர்கள் சிறந்த வேதங்களை ஓதினர். திருமணச் சடங்குகள் அந்தந்த மந்திரங்களால் நிறைவேற்றப்பட்டன. அப்போது திருமால் என் கரம் பிடித்து பசுமையான தர்ப்பைகளால் சூழப்பட்ட தீயை வலம் செய்வது போல் கனவு கண்டேன் தோழி என்கிறாள்.

பாடல் எண் – 8

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்,

நம்மை உடையவன் நாராய ணன்நம்பி,

செம்மை உடைய திருக்கையால் தாள்பற்றி,

அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீ நான்.

விளக்கம்

இப்பிறவிக்கும் ஏழேழ் பிறவிக்கும் பாதுகாவலனாக விளங்கும் கண்ணன், செம்மயுடைய தனது திருக்கையால் என் காலைப் பிடித்து ஏழு அடிகள் எடுத்து வைத்து அம்மியின் மேல்  வைப்பதுபோல் கனவு கண்டேன் தோழி என்கிறாள்.

பாடல் எண் – 9

வரிசிலை வாள்முகத்து என்னைமார் தாம்வந்திட்டு

எரிமுகம் பாரித்து என்னைமுன்னே நிறுத்தி,

அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கைவைத்து,

பொரிமுகம் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.

விளக்கம்

என் சகோதரர்கள் வந்து அக்னியின் முன்னால் என்னை நிறுத்தி நரசிம்மனாய் அவதரித்த கண்ணனின் திருக்கையின் மேல் என் கையை வைத்துப் பொரிகளை அள்ளிப் பரிமாறுவதுபோல் கனவு கண்டேன் தோழி என்கிறாள்.

பாடல் எண் – 10

குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,

மங்கல வீதிவலம்செய்து மணநீர்,

அங்கு அவனோடும் உடன்சென்று அங் கானைமேல்,

மஞ்சனம் ஆட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்.

விளக்கம்

குங்குமத்தையும், சந்தனத்தையும் நன்றாகத் தடவி யானையின் மேல் அமர வைத்தனர். கண்ணனோடு இணைந்திருந்து அலங்கரிக்கப்பட்ட வீதிகளில் ஊர்வலம் வந்தேன். அதன் பின்னர் நல்ல மணநீரால் எங்கள் இருவரையும் நீராட்டுவதாக நான் கனவு கண்டேன் தோழி என்கிறாள்.

பாடல் எண் – 11

ஆயனுக்காகத்தான் கண்ட கனாவினை,

வேயர்புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல்,

தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,

வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே.

விளக்கம்

பெரியாழ்வாருடைய திருமகளான ஆண்டாள் கோவிந்தனுக்கு வாழ்க்கைப்பட்டதாக எண்ணி கனவு கண்ட தன்மையை ஓதுபவர்கள் நற்குணங்கள் அமைந்த கணவனையும் நன்மக்களையும் பெற்று மகிழ்வர்.

 முற்றும்

 


43 கருத்துகள்:

  1. M.haripriya 2yr chemistry ,பாடலின் விளக்கம் அருமையாக இருந்தது mam

    பதிலளிநீக்கு
  2. இந்த பதிவு மிகவும் நன்றாக இருந்தது அம்மா
    _Vismaya.K.K,²nd B.sc.chemistry

    பதிலளிநீக்கு
  3. V. Madhumitha 2nd Bsc chemistry, thank you for the notes mam it is very useful

    பதிலளிநீக்கு
  4. S Sruthi
    2nd year back.chemistry
    Thanks for your understandable notes mam

    பதிலளிநீக்கு
  5. Rishi Vanthini.v
    N&d b sec 2nd year
    It was nice and very interesting mam

    பதிலளிநீக்கு
  6. G. Jayashree
    2nd B.sc chemistry
    Thanks for the notes mam. It was very nice and very useful.

    பதிலளிநீக்கு
  7. S. Yamuna Devi
    BSC. Chemistry - 2nd year
    ** Thank you so much for Ur notes mam**...🤗..It was very useful and interest to read mam....

    பதிலளிநீக்கு
  8. R.Dhanalakshmi
    Bsc.chemistry 2nd yr
    Thanks for the notes mam..it's very interesting

    பதிலளிநீக்கு
  9. S.D.Chandhini
    2nd bsc chemistry
    Thank you for the explanation mam. It is very useful mam

    பதிலளிநீக்கு
  10. S. Manisha, bsc.chemistry,2nd year. Thank you for the notes mam. It's very clear

    பதிலளிநீக்கு
  11. D.Nithya Sree
    B.Sc chemistry 2nd year
    Thank you for your work mam, it's very useful for us

    பதிலளிநீக்கு
  12. D.Nithya Sree
    B.Sc chemistry 2nd year
    Thank you for your work mam, it's very useful for us

    பதிலளிநீக்கு
  13. E. Sivaranjani
    B. SC Chemistry 2nd year
    Thank you for the information mam, it's very useful.

    பதிலளிநீக்கு
  14. தெளிவான விளக்கம் நன்றி
    P.Jayapradha
    B.sc(chemistry)2nd year

    பதிலளிநீக்கு
  15. அருமை. 10 ஆவது பாடலின் 2 ஆவது வரி சரியாக உள்ளதா எனப் பார்க்கவும். நன்றி. ப.ராமதாஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 10ஆம் பாடலின் 2ஆவது வரியில் வீதி என்ற சொல் விடுபட்டு விட்டது. பிழை நீக்கப்பட்டது. சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு