தொல்தமிழர்
உலகம் கடல் நீரால் சூழப்பட்டது. உலகின் உள்ளே தங்கிவிட்ட வாயுக்கள் அழுத்தம்
தாங்க முடியாமல் வெடித்து எரிமலையாக வெளிவந்தது. அவற்றினின்று வெளிவந்த பாறைக் குழம்புகள் தண்ணீரால்
இறுகி மலைகளும் நிலமும் உருவாயின. நிலப்பகுதியாக உருவானபோது அனைத்து நிலங்களும் ஒரே நிலப்பகுதியாக
இருந்தன. அதனைப் பங்கேயா என்று அழைத்தனர். பங்கேயாவில் உள்ள புதைவடிவ மண் நம் தமிழகத்திலும்
காணப்படுகின்றது. எனவே உலகில் நிலம் தோன்றிய காலத்திலிருந்தே தமிழக நிலப்பகுதி
இருந்துள்ளது என்பதை உணரலாம்.
குமரிக்கண்டம்
சில கோடி ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நிலப்பகுதியாக
விளங்கிய பங்கேயா இரண்டாக உடைந்தது. அது வடக்கு தெற்கு என இரண்டு கண்டங்களாகப்
பிரிந்தது. வடக்குப்
பகுதி “இலாராசியா” என்றும் தெற்குப் பகுதியை “கோண்டுவானா” என்றும் அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தக் கோண்டுவானா கண்டம் பிளவுபட்ட பின்னர் பழந்தமிழ்நாடு
தனியாகவும், ஏனைய
நாடுகள் தனியாகவும் பிரிந்தன. அவ்வாறு பிரிந்த நிலப்பகுதியே இலெமூரியா (குமரிக்கண்டம்) என்று அழைக்கப் படுகின்றது. ஆனால் தமிழர்கள் இதனைக் குமரி என்று அழைத்தனர். இந்த நிலத்தின் தென்பகுதிதான் உயிர்கள் தோன்றுவதற்குத்
தேவையான தட்ப வெப்ப நிலைகளைக் கொண்டிருந்தது.
குமரிக்கண்டத்தில்
ஊர்வன, பறப்பன, நடப்பன உள்ளிட்ட உயிர்கள் தோன்றிய பின்னர்
மாந்தக் குரங்கினம் தோன்றியது. அவற்றின் பரிணாம வளர்ச்சியே மனிதன் ஆவான் என உயிரியல் வல்லுநர்கள்
குறிப்பிடுகின்றனர். முதற்கால மாந்தர்கள் காட்டு விலங்கை ஒத்தவர்களாகவும், நாகரிகம் தெரியாதவர்களாகவும் இருந்தனர். தங்கள் வாழ்க்கைக்கு இயற்கையை நம்பி இருந்தமையால்
அவர்களுக்கு ஏற்ற இயற்கைப் பெருவள நாடாக இருந்தது குமரிக் கண்டமே என்று தேவநேயப் பாவாணர்
உறுதிபடக் கூறுகின்றார். எனவே, குமரிக்கண்டத்தில் வாழ்ந்த முன்னோர்களே முதல் மாந்தர்கள்
எனில் தமிழினமே உலகின் முதல் மனித இனம் என்றும், அவர்கள் பேசிய மொழியே முதன் மொழி எனில் தமிழே
முதல் மொழி என்றும் அறியமுடிகின்றது.
ஆகவே, முதல் மாந்தனாகிய தொல்
தமிழரின் வரலாற்றைக் கால அடிப்படையில் வரலாற்றுக்கு முந்தைய காலம், வரலாற்றுக் காலம் என்று
இரு பெரும் பிரிவுகளாகப் பிரிப்பர்.
I.
வரலாற்றுக்கு முந்தைய காலம்
எழுத்துச் சான்றுகள் தோன்றுவதற்கு முந்தைய
காலத்தை வரலாற்றுக்கு முந்தைய காலம் அல்லது தொல் பழங்காலம் என்பர். இக்காலம் புதைபொருள்
ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டன. அக்காலத்தில் மக்கள் விட்டுச்
சென்ற கற்கள், பானை ஓடுகள் மற்றும் உலோகத்தால் ஆன கருவிகள்,
ஓவியங்கள், எலும்புகள் முதலியவை கிடைத்துள்ளன.
அவற்றின் வழியாக வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றி
அறிய முடிகின்றது.
ஆதிமனிதன் ஆங்காங்குக் கிடைத்த உணவுப் பண்டங்களைத் தேடிப்
பிடித்து வயிறு பிழைத்தான். பின்பு வேட்டையாடக்
கற்றுக் கொண்டான். எனவே, மனிதன் வேட்டையாடிப்
பிழைக்கக் கற்றுக் கொண்ட காலத்திற்கு முற்பட்ட காலத்தில்தான் தொல்தமிழர்கள் வாழ்ந்திருக்க
வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். விந்தியமலைத்
தொடருக்கு வடக்கே பரந்து கிடக்கும் கங்கையாற்று வெளியும், இமயமலைத் தொடரும்
முன்னொரு காலத்தில் கடலுக்குள் மூழ்கிக் கிடந்தன. இமயமலைத் தொடரில்
ஆங்காங்குக் கடல்வாழ் உயிர்களின் எலும்புகள் காணப்படுவதே இதற்குப் போதிய சான்றாகும்.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து மக்களுடைய இன வேறுபாடுகள், நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப்
பற்றி ஆராயும்போது,
- தமிழரின் உடல்தோற்றம்
- புதைபொருள்
ஆய்வுகள் வெளிப்படுத்தும் கருவிகள், பொருட்கள் ஆகியவற்றின் அமைப்பு
- அவர்களுடைய
மொழியும், மொழிப் பிரிவுகளும்
என்ற மூன்று
துறைகளில் கருத்தூன்ற வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவாகும். அதன்படி, தமிழகத்து மக்களின்
நிற அமைதி, தலை வடிவம், முடி, உடல் அமைப்பு, பண்பாடு ஆகியவற்றின்
அடிப்படையில் பின்வரும் இனப்பாகுபாட்டை மக்கள் இன ஆய்வாளர்கள் காட்டியுள்ளனர்.
- நிரதர்கள் – கரிய நிறத்தையும், கட்டையான உடல்
உருவத்தையும், அகன்ற தலைவடிவத்தையம், தட்டை மூக்கையும், சுருட்டை முடியையும்
உடையவர்களே நிரதர்களாவர். இவர்கள் கற்காலம்
தொட்டே வாழ்கின்றனர். வேட்டையாடுதல்
இவர்களின் முக்கியத் தொழில்.
- முதல்நிலை ஆத்திரேலியர்கள் – கருமை நிறத்தையும், நீண்ட தலைவடிவத்தையும், அகன்ற மூக்கையும், சுருளும் தன்மையுடைய
முடியையும் கொண்டவர்கள். பொதுவாக இவர்கள்
நிலநடுக்கடல் இனத்தின் உடல் அமைப்பையும் பண்பாட்டையம் ஒத்தவர்களாவர். இந்தியாவிலிருந்து
கற்காலத்தில் ஆஸ்திரேலியா வரை பரவியவர்களே முதல்நிலை ஆஸ்திரேலியர்கள் என்பர். தமிழத்தில்
இவர்கள் உழவுத்தொழிலை துவக்கினர். நெற், தென்னை, வாழை, வெற்றிலை போன்ற
பயிர்களை வளர்த்தனர். நடுகல் வழிபாடு, இறந்தவர்களை
வழிபடும் வழக்கம் இவர்களுக்கு உண்டு. யானையைப் பழக்கியவர்களும்
இவர்களேயாவர்.
- திராவிடர்கள் – நீண்டு ஒடுங்கி
உயர்ந்த தலைவடிவமும், குறுகியதும்
அகலமானதுமான மூக்கும், மாநிறமும் உடையவர்களே
நிலநடுக்கடல் இனத்தவர் எனப்பட்டனர். இவர்களின் வழிவழியாக
வந்தவர்களே திராவிடர்கள் என்பர் இன ஆய்வாளர்கள். வேளாண்மையும், ஆடு மாடு மேய்த்தலும்
இவர்களின் முக்கியத் தொழில். நீர்ப்பாசன
முறை தெரிந்தவர்கள். அரண்மனை, நகரங்களை அமைத்தவர்கள். சக்தி, சிவன் வழிபாடு, கிராம தேவதைகளை
வழிபடும் வழக்கம் இவர்கள்வழி தோன்றின. மனிதனின் மூதாதையர்
வாழ்வுடன் பொருத்திப் பார்க்கின் குமரிக்கண்டம் தமிழர்களின் தாயகம் என்பதை உணர்த்துகின்றது.
- ஆரியர்கள் – உயரமான உடல்
அமைப்பும், நீண்ட தலையம், ஒடுங்கி நீண்ட
மூக்கும், நீலநிற விழிகளும், கருமையான முடியம், பொன்னிறமும்
உடையவர்கள் ஆரியர்கள் எனப்பட்டனர். தமிழகத்தில்
இவர்கள் பிந்தைய காலத்திலேயே குடியேறினர். தமிழகத்தில்
இவர்கள் புகும்போது தங்களைக் குருமார் நிலைக்கு உயர்த்தி இருந்தனர். நால்வகைச் சாதிக்
கோட்பாட்டை வலியுறுத்தினர்.
இதனடிப்படையில் மக்கள் இன வரலாற்றை மூன்று பிரிவுகளாக வகுத்துள்ளனர். அவை,
- பழைய கற்காலம்
- புதிய கற்காலம்
- பெருங்கற்காலம் எனப்படும் உலோகக்காலம்
என்பனவாகும்.
II.
வரலாற்றுக் காலம்
எழுத்துச் சான்றுகள் தோன்றிய பின்பான காலத்தை வரலாற்றுக் காலம் எனலாம். தமிழிலக்கியங்களின் குறிப்புகள், வெளிநாட்டாரின் பயணக் குறிப்புகள், புராணங்கள்,
சமய இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், பிரிட்டிஷ், பிரெஞ்சு
கிழக்கிந்தியக் கம்பெனிகளின் ஆவணங்கள், டச்சு, போர்த்துக்கீசிய பாதிரியார்களின் குறிப்புகள், கடிதங்கள்,
அறிக்கைகள், அரசின் ஆவணங்கள் ஆகியன வரலாற்றுக்
காலத்தை அறிய துணை புரிகின்றன. அதனடிப்படையில் இக்காலத்தை,
- சங்ககாலம்
- பல்லவர் காலம்
- சோழர் காலம்
- பாண்டியர் காலம்
- இடைக்காலம்
- பிற்காலம்
என வகைப்படுத்தலாம்.
வரலாற்றை அறிய உதவும்சான்றுகள்
இவ்விரு வரலாற்றை அறிய துணை புரிகின்ற சான்றுகளின்
மூலமாகக் கிடைத்த தகவல்களால் அக்காலத்தில் வாழ்ந்த மக்களினத்தின் வாழ்க்கைமுறை, சமூக முறை, பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கம், நம்பிக்கை,
மொழி ஆகியவற்றை அறிய முடிகின்றது.
1.புதைபொருள் சான்றுகள்
தொல்பழங்காலத்தில் வாழ்ந்த மக்களைக் குறித்து அறிய புதைபொருள் ஆய்வுகள்
மிகுந்த துணைபுரிகின்றன. அவர்கள்
வேட்டையாடப் பயன்படுத்திய கற்கருவிகள், சீப்புகள், சுடு மண்பாத்திரங்கள், வாழ்ந்த இடங்கள், முதுமக்கள் தாழிகள், பிணக்குழித் தோட்டங்கள்,
இசைக்கருவிகள், நாணங்கள் ஆகியவை புதைபொருள் ஆய்வின்
மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக அம்மக்களின் தொழில்கள்,
கலை உணர்வு, சமூக வாழ்க்கை முறை, வாணிகத்தொடர்பு ஆகியவை விளக்கம் பெறுகின்றன.
2.கலைச்சின்னங்கள்
கலைச்சின்னங்கள் அக்காலத்து மக்களின் கலை உணர்வை அறியத் துணை செய்கின்றன. தென்னகத்தில் கற்காலத்து ஓவியங்களைக் காண முடிகின்றது.
பல்லவர் காலம், சோழர் காலம், பாண்டியர் காலம், சாளுக்கியர் காலம், போசளர் காலம் ஆகிய காலங்களில் உள்ள சிற்பங்கள், சுவர்க்கோலங்கள்
முதலியவையும், ஆடை அணிகலன்களும் அக்கால மக்களின் வாழ்க்கைக் கோணங்களைக்
காட்டுகின்றன.
3.சாசனங்களும் பட்டயங்களும்
சாசனங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று கல்வெட்டு, மற்றொன்று செப்பேடு. தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் காலத்தால் பழமையானவை “தாமிழி“ என்ற எழுத்துகளாலான கல்வெட்டுகளாகும்.
4.மொழியில் ஆய்வு
தற்காலத்து மொழியியல் ஆய்வு பல வரலாற்று உண்மைகளை உணர்த்துகின்றது. மொழியின் தன்மையைக் கொண்டு
கால வரைமுறையை நிர்ணயிக்க முடிகின்றது. மொழி ஆய்வின் துணை கொண்டு
நிலநடுக்கடல் பகுதிகளில் வாழ்கின்ற மக்களினத்திற்கும் திராவிட இனத்திற்கும் உள்ள தொடர்பை
டாக்டர் இலகோவரி என்பவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
5.இலக்கியம்
இலக்கியம் சமூக வாழ்வின் பகுதிகளை முழுமையாக அடையாளம் காட்டுகின்றது. இலக்கியச் சான்றுகளை, தமிழ் இலக்கியச்சான்றுகள்,
பிற இந்திய இலக்கியச் சான்றுகள், அயல்நாட்டுச்
சான்றுகள் என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
- தமிழிலக்கியச் சான்றுகள் – எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, காப்பியங்கள்
ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் அறநெறிகளை அடையாளம் காட்டுகின்றன. இதேபோன்று
பல்லவர்காலம், சோழர்காலம், நாயக்கர்காலம்
ஆகிய காலகட்டங்களில் வெளிவந்த இலக்கியங்களும், 18,19,20ஆம் நூற்றாண்டுகளில்
தோன்றிய இலக்கியங்களும் தமிழகத்தின் சமூகம், அரசியல்,
சமயம் முதலியவற்றை அறிய உதவுகின்றன.
- பிறமொழி இலக்கியங்கள் – இராமாயணம், மகாபாரதம், மத்தவிலாசம்
ஆகிய நூல்கள் தமிழகத்து வரலாற்றை விளக்குகின்றன.
- பிற நாட்டு இலக்கியங்கள் – இலங்கையின் மகாவம்சம், பிளினியின் வரலாற்றுக் குறிப்புகள்,
தாலமியின் பூகோளம், சீனப்பயணி யுவான்சுவாங்கின்
பயணக் குறிப்புகள் ஆகியவை தமிழத்து மக்களின் வரலாற்றை உணர்த்துகின்றன.
6.ஐரோப்பியக் கம்பெனியாரின் ஆவணங்கள்
போர்ச்சுக்கல், டச்சு, ஹாலந்து, இங்கிலாந்து,
பிரஞ்சு வணிக்க் கம்பெனி சார்ந்த கடிதங்களும், கம்பெனி ஆவணங்களும் 16ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்தின்
அரசியல், பொருளாதார, சமூக, சமய நிலைமையைக் காட்டுகின்றன.
பாதிரிமார் கடிதங்கள்
கிறித்துவச் சமயத் தொண்டாற்றிய பாதிரிமார்கள் மதுரை நாயக்கர்களுடனும், தஞ்சை மராட்டியர்களுடனும், விஜயநகர மன்னர்களுடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தனர். இவர்களின் கடிதங்கள் சிறந்த வரலாற்றுச் சான்றுகளாகும்.
கிழக்கிந்தியக் கம்பெனி ஆவணங்கள்
19ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்தை ஆண்ட ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியாளர்களின் கடிதப் போக்குவரத்துகளும், ஒப்பந்தங்களும், அரசு ஆவணங்களும், அதிகாரிகளின் அறிக்கைகளும் அக்கால வரலாற்றை அறிய உதவுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக