செவ்வாய், 10 செப்டம்பர், 2024

சோழர் வரலாறு

 

சோழர் வரலாறு

தமிழக வரலாற்றைச் சிறப்பித்த பெருமை சோழர்களுக்கு உண்டு. சோழர்களின் காலத்தில் சைவ, வைணவ சமயங்கள் எழுச்சி பெற்றன. காவிரிப்பூம்பட்டினம், பூம்புகார், உறையூர் ஆகிய நாடுகள் இவர்களின் தலைநகரங்களாக இருந்தன. உறையூர் நகரம் உறந்தை, கோழியூர் என அழைக்கப்பட்டது. 

சோழ மன்னர்கள்

சோழ மன்னர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் விஜயாலயச்சோழன், ஆதித்த சோழன், பராந்தகசோழன், சுந்தரசோழன், ஆதித்த கரிகாலன், இராசராசச்சோழன், இராசேந்திர சோழன் ஆகியோராவர். தங்கள் அறிவாற்றலாலும், படை பெருக்கத்தாலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களை ஒரு குடையின்கீழ் ஆட்சி செய்தனர். அவர்களின் சிறப்புகளைப் பின்வருமாறு காணலாம்.

விஜயலாயச் சோழன்

சோழர் பரம்பரையை உருவாக்கிய பெருமை இவரையே சாரும். இவர் முத்தரையர்களை வெற்றி கொண்டு தஞ்சையைக் கைப்பற்றினார். முத்தரையர்களுக்கு உதவி செய்த வரகுண பாண்டியனையும் வென்றான். இவ்வெற்றி அவரின் புகழை உயர்த்தின. சோழர்களின் வலிமையை பெருக்கின

ஆதித்த சோழன்

விசயாலயனின் மகன் ஆதித்த சோழன். தந்தையின் மறைவுக்குப்பின் ஆட்சிப் பொறுப்பேற்றார். இவர் அரசியல் நுட்பம் தெரிந்தவர். போர் ஆற்றல் மிக்கவர். பாண்டியருக்கும் பல்லவருக்கும் திருப்புறம்பயம் என்னும் இடத்தில் போர் நடைபெற்றது. அப்போரில் ஆதித்த சோழன் பல்லவர்களுடன் இணைந்து போரிட்டு வெற்றி பெற்றார். தன் தந்தை மீட்டுக் கொடுத்த சோழ நாட்டின் ஆட்சியை வலுவாக நிலைநாட்ட முயன்றார்காவிரியின் இருமருங்கிலும் சிவபெருமானுக்காக 50 கற்றளிகள் கட்டினார். சோழ நாட்டின் பெரும்பகுதி பல்லவர்களிடம் இருந்ததைக் கண்டு மனம் பொறுக்காமல் பல்லவர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்டார். இவர் இராசகேசரி என்ற விருதை ஏற்றுக் கொண்டார்.

பராந்தகச் சோழன்

ஆதித்தனை அடுத்து அவன் மகன் முதலாம் பராந்தகன் ஆட்சிக்கு வந்தார். இவருடைய ஆட்சி 48 ஆண்டுகள் நீடித்தது. பராந்தகன் பாண்டியர்களை ஒடுக்கினார். மதுரை கொண்ட கோப்பரகேசரி எனப்பட்டார். வடக்கே காலஹஸ்தி வரையும், தெற்கே கன்னியாகுமரி வரையும் இவருடைய நாடு விரிவடைந்தது. சைவ மதம் சார்ந்தவராதலால் சிவ ஆலயங்களை எழுப்பினார். வேளாண்மை விரிவடைய நீர்நிலைகளையும், கால்வாய்களையும் உருவாக்கினார். உள்ளாட்சி முறையையும்  சீர்ப்படுத்தினார் என்று உத்திரமேரூர் சாசனம் கூறுகின்றது.

கண்டராதித்தன்

முதலாம் பராந்தகனின் வாழ்நாளிலேயே கண்டராதித்தன் சோழ வேந்தன் ஆனார். தமிழகத்து வரலாற்றில் புகழொளி வீசுகின்ற செம்பியன்மாதேவி இவருடைய பட்டத்து அரசியார் ஆவார். செம்பியன் மாதேவி கட்டிய சைவ சமய கோயில்கள் பல. தன் கணவனுடன் இணைந்து சிவத் தொண்டு புரிந்தார். கண்டராதித்தன் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளன. இவருடைய காலத்தில் சோழநாடு சுருங்கிவிட்டது. கண்டராதித்தனுக்குப்பின் அவருடைய தம்பி அரிஞ்சய சோழன் ஆட்சிக்கு வந்து இராட்டிரகூடர்களுடன் போரிட்டு மடிந்தார்.

சுந்தரசோழன்

அரிஞ்சய சோழனின் மகன் சுந்தரசோழன். தன் தந்தைக்கு அடுத்து ஆட்சிப் பொறுப்பேற்றார். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தன் மகன் ஆதித்த கரிகாலனுக்கு இளவரசு பட்டம் சூட்டினார். தன் மகனின் துணையுடன் பாண்டிய மன்னன் வீர பாண்டியனை வென்றார். தன் மகன் பாண்டியனை எதிர்த்து வெற்றி பெற்றதால்பாண்டியனின் முடி கொண்ட சோழன்என்ற விருது வழங்கி மகிழ்ந்தார். இழந்த வடக்குப் பகுதிகளை மீட்கும் பணியில் வெற்றி கண்டார். சுந்தர சோழனின் அறப்பணிகளையும், வேளாண்மை முன்னேற்றப் பணிகளையும் மக்கள் பாராட்டினர். தன் மகன் ஆதித்தன் எதிர்பாராத சூழ்ச்சியால் கொல்லப்பட்டதை அறிந்து மனம் வருந்தி சிறிது காலம் காஞ்சியில் உள்ள பொன்மாளிகையில் வசித்து அங்கேயே இற்நதார். அதனால் அவர் பொன்மாளிகை துஞ்சிய தேவன்என்று அழைக்கப்பட்டார்

உத்தம சோழன்

சுந்தர சோழருக்குப்பின் கண்டராதித்தருடைய புதல்வன் உத்தமசோழன் ஆட்சிப் பொறுப்பேற்றார். ஆட்சித் திறனும் சிறந்த பண்புகளும் உடையவர். திருநாவுக்கரசரின் பாடலைப் பெற்ற விசயமங்கலத்துக் கோயிலை கற்றளியாக மாற்றினார்.

முதலாம் இராசராசசோழன்

உத்தம சோழனுக்குப் பின்பு அவருடைய புதல்வன் அரசுரிமை பெறவில்லை. சுந்தரசோழனின் இரண்டாவது மகன் அருண்மொழி விழாக் கோலத்துடன் அரசுரிமை ஏற்றார். இவர் பல ஆண்டுகள் இளவரசுப் பொறுப்பில் பயிற்சி பெற்றவர். அவருடைய அரசியல் அனுபவமும், பேராற்றலும், நுண்ணறிவும் அவருடைய வெற்றிக்குத் துணை பரிந்தன. சோழர்களின் ஆதிக்கத்தை வடக்கில் நர்மதை வரையிலும், தெற்கில் ஈழம் வரையிலும் பரப்பினார். இராசராசன் என்ற பட்டப்பெயர் ஏற்றுக்கொண்டார். “இராசகேசரி அருண்மொழிஎன்றும், “மும்முடிச் சோழன்என்றும் சில விருதுகைளத் தம் பெயருடன் இணைத்துக் கொண்டார். இவரடைய வருகைக்குப் பின்பு சோழர் வரலாறு ஒரு புதுத்திருப்பத்தைக் கண்டது.

இராசராசரின் ஆட்சி முறை

மன்னர்களின் பெருமையை விளக்குகின்ற மெய்க்கீர்த்தி இவருடைய காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. இவ்வழக்கத்தை, பின்வந்த மன்னர்களும் பின்பற்றினர். இராசராசச் சோழனின் அரசியல் சிறப்பை அறிய இம்மெய்க்கீர்த்திகள் பெரும்துணை பரிகின்றன

இவர் தரைப்டையையம், கடற்படையையும் பெருக்கினார். சேரர்களின் வலிமையை உடைத்து எறியவும், ஈழத்தின் மீது ஆதிக்கம் செலுத்தவும், மேற்குச் சாளுக்கியர்களை விரட்டியடிக்கவும் அப்படைகள் பெரிதும் உதவின. பாண்டியநாடு, சேரநாடு, ஈழநாடு, சாளுக்கிய நாடு, அரபிக்கடல் தீவு ஆகிய நாடுகளின் மீது போர் தொடுத்து மாபெரும் வெற்றி கண்டார். பரந்த பேரரசை அமைத்த இராசராசன் பேரரசை மண்டலங்களாகவும், மண்டலங்களை வளநாடுகளாகவும், வளநாடுகளை நாடுகளாகவும் பிரித்து ஆட்சி செய்தார்.

சமயப்பணிகள்

இவர் சமயத் திருப்பணிகளில் பெரிதும் ஆர்வம் கொண்டவர் என்பதற்குத் தஞ்சைப் பெருவுடையார் கோயில் சான்றுரைக்கின்றது. இதன் விமானமும், ஒற்றைக் கல்லால் அமைக்கப்பட்ட மிகப்பெரிய நந்தியும், புடைப்போவியங்களும் காண்போர் கண்ணை கவர்க்கின்றன.  மாபெரும் வெற்றி வீரனாகவும், சிறந்த நிர்வாகியாகவும், அறப்பணியாளனாகவும் சிறந்து விளங்கிய இராசராசன் சிறந்த மன்னர்கள் வரிசையில் வைக்கப்பட்டார். புகழோடு விளங்கிய இராசராசனின் ஆட்சி கி.பி.1014இல் முடிவுக்கு வந்தது.

இராசேந்திரச் சோழன்

தந்தைக்கு ஏற்ற மகனாக விளங்கிய இராசேந்திரச் சோழன் தனது 25ஆவது வயதில் அரியணை ஏறினார். சேர நாட்டுப் படைபெடுப்பின்போது தந்தையுடன் போரில் ஈடுபட்டார். தளபதியாகப் பணியாற்றி வெற்றி வாகை சூடினார். பஞ்சவன் மாராயன் என்ற விருது இவருக்குக் கொடுக்கப்பட்டது. இராசேந்திரன் இலங்கை முழுவதையும் வென்று தன் குடைக்கீழ்க் கொண்டு வந்தார். சேரநாடு, சாளுக்கிய நாடு, வடநாடு, கடார நாடு ஆகிய நாடுகளின் மீது போர் தொடுத்து மாபெரும் வெற்றி கண்டார். கடார நாட்டை வெற்றி கொண்டதால் கடாரம் கொண்டான் என்ற விருதுப் பெயர் ஏற்றார்.  வட நாட்டு வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழன் என்ற சிறப்புப் பெயர் ஏற்றார். அதனால் கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரம் தோன்றியது. அந்த நகரத்தைத் தனது தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தார். வட இந்திய வெற்றிக்குப்பின் சிவனுக்குக் கோயில் எழுப்ப எண்ணி கங்கை கொண்ட சோழபுரம் என்ற கோயிலைக் கட்டினார். இது தஞ்சைப் பெருவுடையார் கோயிலை ஒத்தது. தான் அடைந்த பல சிறப்புகளால் முடிகொண்டான், “கங்கை கொண்டான், “கடாரம் கொண்டான், “பண்டித சோழன் போன்ற பல சிறப்புப் பெயர்களால் பராட்டப்பட்டார்.

இராசேந்திரச் சோழனுக்குப்பின்

இராசேந்திரனுக்குப்பின் இராசாதிராசன் அரியணை ஏறினார். இவர் பாண்டியர்களையம், சேரர்களையும் அடக்கினார். மும்முறை சாளுக்கியர் நாட்டின் மீது படையெடுத்துச் சென்றார். இறுதியில் கொப்பம் என்ற இடத்தில் நிகழ்ந்த போரில் கொல்லப்பட்டார்.

இராசாதிராசனுடன் சென்ற அவருடைய தம்பி இரண்டாம் இராசேந்திரன் சாளுக்கியர்களின்மீது பாய்ந்து அவர்களை வென்றார். அதே போர்க்களத்தில் சோழ வேந்தனாக முடிசூட்டிக் காண்டார். இவர் ஆயலங்களில் வேதம் ஓதுவோருக்கு உதவினார் என்று திருவாலங்காட்டுச் சாசனம் கூறுகின்றது.

இரண்டாம் இராசேந்திரனைத் தொடர்ந்து அவன் தம்பி வீர இராசேந்திரன் பதவி ஏற்றார். தன் புதல்வர்களை ஆளுநர்களாக அமர்த்தியிருந்தார். பேரரரசுக் கொள்கையை நிலைநாட்டினார். புத்தமித்திரன் இயற்றிய இலக்கண நூலை இவன் பெயரால் படைத்தான். அதுவே வீர சோழியம்.

வீர இராசேந்திரனுக்குப்பின் அவருடைய மகன் அதிராசேந்திரன் பட்டத்திற்கு வந்தார். பட்டத்திற்கு வந்த சில நாட்களிலேயே கைவர்களால் கொல்லப்பட்டார்.

அதிராசேந்திரனின் இறப்புக்குப் பின் விசயாலயச்சோழனின் நேர் பரம்பரை ஆட்சி முடிவுக்கு வந்தது.

குலோத்துங்கச்சோழன்

அதிராசேந்திரனுக்குப் பிள்ளைகள் இல்லாததால் சோழ நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. அக்குழப்பத்தைத் தீர்க்க, வேங்கியில் ஆட்சி செய்து கொண்டிருந்த கீழைச் சாளுக்கிய மன்னன் இரண்டாம் இராசேந்திரன் குலோத்துங்கன் என்ற பெயரில் சோழ வேந்தனாக முடிசூட்டிக் கொண்டார். இவர் இராசராசனின் கொள்ளுப்பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இளமையில் சோழ நாட்டில் வளர்ந்தவர்.

வட கலிங்கத்தை ஆண்ட அனந்தவர்மன் குலோத்துங்கனுக்குத் திறை செலுத்த மறுத்தான். வேறு வழியின்றி கலிங்க நாட்டின் மீது போர் தொடுத்தார். கருணாகரத் தொண்டைமான் தலைமையில் பெரியதொரு சோழர்படை கலிங்கம் நோக்கி விரைந்தது. சோழர்களின் கமையான தாக்குதலைத் தாங்க முடியாத கலிங்கப்படை புறமுதுகு காட்டியது. கலிங்க மன்னன் ஓடி ஒளிந்து கொண்டான். இந்நிகழ்வை செயங்கொண்டார் என்னும் புலவர் கலிங்கத்துப் பரணி என்ற நூலில் விரிவாகப் பாடியுள்ளார்.

சோழர் நாட்டில் மக்கள் வரியை விரும்பவில்லை என்பதால் வரியைத் தவிர்த்தார். இதனால்சுங்கம் தவிர்த்த சோழன்என்ற புகழைப் பெற்றார். இராசகேசரி, பரகேசரி, புவனச் சக்கரவர்த்தி, விஷ்ணுவர்த்தனன், பராந்தகன், பெருமானடிகள், விக்கிரமச் சோழன், குலசேகர பாண்டிய குலாந்தகன் என்ற பல விருதுகள் பெற்றார். 

பிற்காலச் சோழர்களின் வீழ்ச்சி

முதலாம் குலோத்துங்கனுக்குப்பின் அவருடைய புதல்வன் விக்கிரமச் சோழன் முடிசூடினார். இவரை அடுத்து இரண்டாம் குலோத்துங்கன் பதவி ஏற்றார். அதன் பின் இரண்டாம் இராசராசன் பதவிக்கு வந்தார். முத்தமிழ்த் தலைவன் என்று போற்றப்பட்ட இம்மன்னனின் காலத்தில் குறுநில மன்னர்கள் சோழர் அதிகாரத்தைப் புறக்கணித்தனர். அதனால் கலகங்கள் ஏற்பட்டன. இவருக்குப்பின் இரண்டாம் இராசாதிராசன் பதவி ஏற்றார். இவர் காலத்தில் பாண்டிய நாட்டில் அரசுரிமைப் போட்டிகளும் போராட்டங்களும் எழுந்தன. இவருக்குப்பின் மூன்றாம் குலோத்துங்கன் அரியணை ஏறினார். கும்பகோணத்துக்கு அண்மையில் உள்ள திரிபுவனம் என்னும் ஊரில் சிவன் கோயில் எழுப்பினார். இவருக்குப் பின், மூன்றாம் இராசராசன், மூன்றாம் இராசேந்திரன் ஆகியோர் பட்டத்திற்கு வந்தபோதிலும் பாண்டியர்களின் வலிமை பெருகியது. சடையவரம் சுந்தர பாண்டியன் சோழர்கள் மீது வெற்றி கண்டு பாண்டியர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டினார். சோழர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக