செவ்வாய், 19 அக்டோபர், 2021

தமிழ்விடுதூது

 

தமிழ்விடுதூது

சிற்றிலக்கிய வகைகளுள் தூது இலக்கியமும் ஒன்று. இது தலைவன் மேல் காதல் கொண்ட தலைவி தன் காதல் நோயின் துன்பத்தைக் காதலனுக்கு எடுத்துக்கூறி மாலை வாங்கி வாஎன்றும், “தூது சொல்லி வாஎன்றும் உயர்திணைப் பொருள்களையோ, அஃறிணைப் பொருள்களையோ தூது விடுவதாகப் புலவர்கள் பாடுகின்றனர். தலைவன் தூது விடுத்ததாக விறலி விடு தூது என்ற ஒரு நூல் மட்டுமே காணப்படுகிறது. தலைவி விடுத்த தூது நூல்களே பெரும்பாலும் காணக் கிடைக்கின்றன.

தமிழ்விடுதூது

மதுரையில் கோயில் கொண்டு விளங்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் தன் காதல் நோயைக் கூறி வருமாறு தமிழ்மொழியைத் தூது விடுவதாக அமைந்த நூல் தமிழ்விடுதூது என்பதாகும். இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால், நூலை ஆராய்ந்து பார்க்கின், அவர் பரந்த தமிழ்நூற் பயிற்சியும், செந்தமிழ்ப் பற்றும் கொண்டவர் என்பது தெரிகிறது.

இந்நூலில் தமிழின் சிறப்போதும் 16 கண்ணிகள் நமக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

பாடல்

1.    சீர்கொண்ட கூடற் சிவராச தானிபுரந்

தேர்கொண்ட சங்கத் திருந்தோரும் - போர்கொண்

2.    டிசையுந் தமிழரசென் றேத்தெடுப்பத் திக்கு

விசையஞ் செலுத்திய மின்னும் - நசையுறவே

3.    செய்யசிவ ஞானத் திரளேட்டி லோரேடு

கையி லெடுத்த கணபதியும் - மெய்யருளாற்

4.    கூடல் புரந்தொருகாற் கூடற் புலவரெதிர்

பாடலறி வித்த படைவேளும் - வீடகலா

5.    மன்னுமூ வாண்டில் வடகலையுந் தென்கலையும்

அன்னைமுலைப் பாலி னறிந்தோறும் - முன்னரே

6.    மூன்றுவிழி யார்முன் முதலையுண்ட பிள்ளையைப்பின்

ஈன்றுதரச் சொல்லி னிசைத்தோருந் - தோன்றயன்மால்

7.    தேடிமுடி யாவடியைத் தேடாதே நல்லூரிற்

பாடி முடியாப் படைத்தோரும் - நாடிமுடி

8.    மட்டோலைப் பூவனையார் வார்ந்தோலை சேர்த்தெழுதிப்

பட்டோலை கொள்ளப் பகர்ந்தோரும் முட்டாதே

9.    ஒல்காப் பெருந்தமிழ்மூன் றோதியருண் மாமுனியும்

தொல்காப் பியமொழிந்த தொன்மொழியும் மல்காச்சொற்

10. பாத்திரங்கொண் டேபதிபாற் பாய்பசு வைப்பன்னிரண்டு

சூத்திரங்கொண் டேபிணித்த தூயோரும் – நேத்திரமாம்

11. தீதில் கவிதைத் திருமா ளிகைத்தேவர்

ஆதி முனிவ ரனைவோருஞ் - சாதியுறும்

12. தந்திரத்தி னாலொழியாச் சார்வினையைச் சாற்றுதிரு

மந்திரத்தி னாலொழித்த வல்லோரும் செந்தமிழிற்

13. பொய்யடிமை யில்லாப் புலவரென்று நாவலர்சொல்

மெய்யடிமைச் சங்கத்து மேலோரும் - ஐயடிகள்

14. காடவருஞ் செஞ்சொற் கழறிற் றறிவாரும்

பாடவருந் தெய்வமொழிப் பாவலரும் - நாவருங்

15. கல்லாதார் சிங்கமெனக் கல்விகேள் விக்குரியர்

எல்லாரு நீயா யிருந்தமையாற் - சொல்லாரும்

16. என்னடிக ளேயுனைக்கண் டேத்தினிடர் தீருமென்றுன்

பொன்னடிக ளேபுகலாப் போற்றினேன்

விளக்கம்

மதுரைச் சொக்கநாதர் மீது காதல் கொண்ட ஒரு பெண், அவரிடம் தன் காதல் நோயைக் கூறி வருமாறு தமிழ்மொழியைத் தூது விடுக்கின்றாள். அதனால் தமிழைப் போற்றுகின்றாள்.

1.மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக வீற்றிருந்த சிவபெருமான்,

2.எல்லாத் திசைகளிலும் வெற்றியைத் தரும் தடாதகைப் பிராட்டியாகிய பார்வதி தேவி,

3.விருப்பத்துடன் சிவஞானத் திரட்டைக் கையிலெடுத்த கணபதி,

4.தமிழ்ச்சங்கத்தில் புலவர்களுக்கெதிராக அமர்ந்து பாடல் அறிவித்த முருகப்பெருமான்,

5.மூன்று வயதிலேயே பார்வதிதேவியின் அருளால் பாலருந்தி தமிழ்மொழியும் வடமொழியும் கற்றுத் தேர்ந்த திருஞானசம்பந்தர்,

6.மூன்று வருடங்களுக்கு முன்பு முதலை விழுங்கிய பிள்ளையைச் சிவபெருமானிடம் ஈன்று தரச் சொல்லிப் பாடல் இசைத்த சுந்தரர்,

7.பிரமனும் திருமாலும் தேடியும் அடைய முடியாத சிவனின் திருமுடியையும், திருவடியையும் தேடாமலேயே திருநல்லூரில் தேவாரம் பாடித் தன் தலை மீது முடியாகப் பெற்றுக் கொண்ட திருநாவுக்கரசர்,

8.சிவபெருமானே விரும்பி வந்து தம் ஓலையில் எழுதிக்கொள்ள திருவாசகத்தையும், திருக்கோவையாரையும் அருளிய மாணிக்கவாசகர்,

9.முத்தமிழ் ஓதிய அகத்தியர்,

10.பழந்தமிழ் இலக்கணம் உரைத்தத் தொல்காப்பியர்,

11.சிவனைத் தேடிச்செல்லும் உயிர்கள் குறித்துத் தம் சிவஞானபோதத்தில் பன்னிரண்டு நூற்பாக்களில் விளக்கமுரைத்த மெய்கண்ட தேவர்,

12.திருவிசைப்பா எனும் தீதில்லா கவிதைகளைத் தந்த திருமாளிகைத்தேவர் உள்ளிட்ட ஒன்பது முனிவர்கள்,

13.வினைகளால் வந்தடைகின்ற தந்திரங்களைத்  திருமந்திரத்தால்  நீக்கிய திருமூலர்,

14.பொய்யடிமையில்லாப் புலவர்கள் என்று போற்றப்படும் சங்கத்துப் புலவர்கள்,

15.அரசபதவி துறந்து சிவனை நாடிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார்,

16.பிற உயிர்கள் பேசுவதைக் கேட்கும் திறன் பெற்றதால் கழற்றறிவார் எனப் பெயர் பெற்ற சேரமான் பெருமாள் நாயனார்,

17.தெய்வமொழிப் பாவலர் திருவள்ளுவர் எனக் கல்வி, கேள்விக்குரிய எல்லோரும், தமிழே! நீயாகவே இருக்கின்றாய்.

18.கல்லாதார்க்குச் சிங்கமெனத் திகழ்கின்றாய்!  

சொற்கள் நிறைந்த என் செய்யுளே! உன் பொன் போன்ற திருவடிகளைத் துதித்து வணங்கினால் என் இடர் தீரும் என்பதால் உன் பொன்னடிகளை நான் போற்றுகின்றேன்.

 

 

 

 

 

திங்கள், 18 அக்டோபர், 2021

நந்திக்கலம்பகம்

 

நந்திக்கலம்பகம்

தமிழில் உருவான கலம்பக இலக்கியங்களில் ஒன்று நந்திக்கலம்பகம். இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் மீது பாடப்பட்டது. இதுவே கலம்பக நூல்களில் காலத்தால் முற்பட்டு விளங்குகிறது. நந்திக் கலம்பகத்தின் காலம் கி.பி.9 ஆம் நூற்றாண்டு. காஞ்சி, மல்லை (மாமல்ல புரம்), மயிலை (மயிலாப்பூர்) ஆகிய நகரங்கள் இந்நூலில் சிறப்பாகப் போற்றப்பட்டுள்ளன. சிறந்த சொற்சுவை பொருட்சுவையோடு கற்பனை வளமும் நிறைந்த இந்நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை.

நூல் வரலாறு

நந்திவர்மனிடம் இருந்து அரசைக் கவரும் நோக்கில் அவனது தம்பியால் ஒழுங்கு செய்யப்பட்டு அறம் பாடுதல் என்னும் முறையில் இப்பாடல்கள் பாடப்பட்டுள்ளன. அறம் வைத்துப்பாடிய நூலின் பாடலைத் தற்செயலாகக் கேட்ட நந்திவர்மன் அப்பாடலின் சிறப்பில் மனம் பறிகொடுத்துப் பாடல் முழுவதையும் கேட்க விரும்பினான். நூல் முழுவதையும் கேட்டால் மன்னன் உடல் எரிந்து இறப்பான் என்பதை அறிந்தும் தமிழின் மீதுள்ள தனியாத காதலால் உயிரையும் பொருட்படுத்தாது, எரியும் பந்தலின் கீழிருந்து கேட்டு உயிர் இறந்தான் என்று கூறப்படுகிறது. 'நந்தி, கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்' - என்னும் சோமேசர் முதுமொழிவெண்பா என்னும் நூலின் வெண்பா வரிகள் இக்கருத்தை வலியுறுத்துகின்றது. இதற்கேற்ப இந்நூலிலும் பல வசைக்குறிப்புகள் இடம் பெறுகின்றன. இந்நூல், மற்ற கலம்பக நூற்களைப் போலல்லாமல் வரலாற்று நூலாகவே திகழ்கின்றது.   மூன்றாம் நந்திவர்மனது அரசியல் தொடர்பான செய்திகள் நந்திக் கலம்பகத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன.  மேலும் மூன்றாம் நந்திவர்மனின் கொடைச்சிறப்பு, தமிழ்ப்பற்று, சிவபெருமான் மீது கொண்ட பக்தி, வீரம், அறிவு போன்ற பண்புகளுடன் அறம், கொடை போன்ற பண்புகளும் நந்திக் கலம்பகத்தில் மிகவும் போற்றப்படுகின்றன.

நூல் அமைப்பு

நந்திக் கலம்பகத்தில் அகம், புறம், ஆகிய துறைகள் கலந்து வர அமையப்பெற்றபோதும் அவற்றுள் அகத்திணைச் செய்திகள் பெரும்பான்மையினதாகவும், புறத்திணைச் செய்திகள் சிறுபான்மையினதாகவும் இடம் பெறுகின்றன. நந்திக் கலம்பகத்தில் 144 பாடல்கள் காணப்படுகின்றன. ஆனால் அரசர் மீது பாடப்பெறும் கலம்பகம் 90 பாடல்களுடையதாய் இருக்க வேண்டும் என்பது நியதியாகும். எனவே, இதில் உள்ள அதிகப்படியான 54 பாடல்கள் பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.  இந்நூலில் நந்தி வர்மனின் தெள்ளாறு வெற்றியைப் பற்றி மட்டும் 16 பாடல்களில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. கொற்ற வாயில் முற்றம், வெறியலூர், வெள்ளாறு, தெள்ளாறு போன்ற பல்வேறு போர்க்களங்களைப் பற்றிக் கூறும் சிறந்த வரலாற்று நூலாகவும் இது திகழ்கிறது.

நந்திக் கலம்பகத்தின் 61, 96, 100, 105, 110 ஆகிய பாடல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

1.   பாட்டுடைத் தலைவன் வீரச் சிறப்பு

திருவின் செம்மையும் நிலமகள் உரிமையும்

பொதுவின்றி ஆண்ட பொலம்பூண் பல்லவ!

தோள் துணை ஆக மாவெள் ளாற்று

மேவலர்க் கடந்த அண்ணால் நந்திநின்

திருவரு நெடுங்கண் சிவக்கும் ஆகின்

செருநர் சேரும் பதிசிவக் கும்மே

நிறங்கிளர் புருவம் துடிக்கின் நின்கழல்

இறைஞ்சா மன்னர்க் கிடந்துடிக் கும்மே

மையில் வாளுறை கழிக்கு மாகின்

அடங்கார் பெண்டிர்

பூண்முலை முத்தப் பூண்கழிக்கும்மே

கடுவாய் போல்வளை அதிர நின்னொடு

மருவா மன்னர் மனம் துடிக் கும்மே

மாமத யானை பண்ணின்

உதிர மன்னுநின் எதிர்மலைந் தோர்க்கே.

விளக்கம்

திருமகளின் செல்வமும், நிலமகளின் உரிமையும் பொதுவின்றி ஆண்ட பல்லவ மன்னனே! உன் தோளின் வலிமையால் வெள்ளாற்றங்கரையை வென்றாய்! உன் நெடுங்கண் சினத்தால் சிவக்குமெனில் பகைவரின் ஊர் நெருப்பால் அழியும்! உன் புருவம் சினத்தால் துடிக்குமெனில் உன் வீரக்கழலுக்குப் பணியாத மன்னர்களின் இதயம் துடிக்கும்! உன் உறையிலிருந்து வாள் வெளிப்படுமெனில் பகை மன்னர் மனைவிகளின் மங்கலத்தாலிகள் அழியும்.  உன்னோடு போர்புரியும் மன்னர்களின் மனம் துடிக்கும்! உன் மாமத யானைகள் போருக்கென அழகுபடுத்தப்படுமெனில் குருதி ஆறு பெருக்கெடுத்து ஓடும்.

2.  தலைவி கார்ப்பருவங்கண்டு வருந்துதல்

சிவனை முழுதும் மறவாத சிந்தையான்

    செயமுன் உறவு தவிராத நந்தி யூர்க்

குவளை மலரின் மதுவாரும் வண்டுகாள்

    குமிழி சுழியில் விளையாடு தும்பியே!

அவனி மழைபெய் குளிர்காலம் வந்ததே

    அவரும் அவதி சொனநாளும் வந்ததே

கவலை பெரிது பழிகாரர் வந்திலார்

    கணவர் உறவு கதையாய் முடிந்ததே.

விளக்கம்

“சிவனை வணங்க மறவாத நந்திவர்மனின் ஊரில், குவளை மலரில் மது அருந்தும் வண்டுகளே!  நீர்க்குமிழில் விளையாடும் தும்பியே! மழை பெய்கின்ற குளிர்காலம் வந்து விட்டது! என்னைப் பிரிந்து சென்ற தலைவன் வருவதாகக் கூறிய நாளும் வந்து      விட்டது! ஆனால் என் தலைவன் வரவில்லை. என் கவலை பெரிதாகி விட்டது! கணவன் என்ற உறவு எனக்குக் கதையாக முடிந்துவிடுமோ” என்று அஞ்சுகின்றாள் தலைவி.

 

3. காலம்

அன்னையரும் தோழியரும் அடர்ந்துபொருங் காலம்

    ஆனிபோய் ஆடிவரை ஆவணியின் காலம்

புன்னைகளும் பிச்சிகளும் தங்களின்ம கிழ்ந்து

    பொற்பவள வாய்திறந்து பூச்சொறியும் காலம்

செந்நெல்வயற் குருகினஞ்சூழ் கச்சிவள நாடன்

    தியாகியெனும் நந்திதடந் தோள்சேராக் காலம்

என்னையவ அறமறந்து போனாரே தோழி!

    இளந்தலைகண் டேநிலவு பிளந்தெரியும் காலம்.

விளக்கம்

“அன்னையும் தோழிகளும் என்னோடு போர் செய்யும் காலமிது! ஆனி, ஆடி மாதங்கள் சென்றுவிட ஆவணியின் காலமிது! புன்னை, பிச்சிப் பூக்கள் பூத்துக்       குலுங்குகின்ற காலமிது! செந்நெல் வயல் சூழ்ந்த நாட்டின் தலைவன் நந்தியின் தோளைச் சேர முடியாத காலமிது! என்னைப் பிரிந்து சென்ற தலைவன் என்னை அறவே மறந்துபோய் விட்டாரோ தோழி! பிரிவினால் வருந்தும் என்னை மேலும் வருத்துகிறது மாலை நேர நிலவு” என்று வருந்துகின்றாள் தலைவி.

4. மேகவிடுதூது

ஓடுகின்ற மேகங்காள்! ஓடாத தேரில் வெறும்

கூடு வருகுதென்று! கூறுங்கள் - நாடியே

நந்திச்சீ ராமனுடை நல்நகரில் நல்நுதலைச்

சந்திச்சீர் ஆமாகில் தான்.

விளக்கம்

வினை முடிந்து மீண்டு வந்த தலைவன் தலைவியை எண்ணுகின்றான். வரும் வழியில் மேகங்களைக் கண்டவன் “நில்லாமல் ஓடும் மேகங்களே! இராமன் போன்ற என் மன்னன் நந்திவர்மனின் நகரம் காஞ்சிபுரம். அந்நாட்டில் வாழ்கின்ற என் தலைவி அழகிய நெற்றியை உடையவள். அவளைக் கண்டால் விரைந்து ஓடாத தேரில் உன்னைக் காணும் விருப்பத்துடன் வெறும் உடம்பு ஒன்று வந்து கொண்டிருக்கின்றது என்று கூறுங்கள்” என்று வேண்டுகின்றான்.

5.  கையறுநிலை

வானுறு மதியை அடைந்ததுன் வதனம்

    மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி

கானுறு புலியை அடைந்ததுன் வீரம்

    கற்பகம் அடைந்ததுன் கரங்கள்

தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்

    செந்தழல் அடைந்ததுன் தேகம்

நானும் என்கலியும் எவ்விடம் புகுவேம்

    நந்தியே நந்தயா பரனே.

விளக்கம்

“அருளுடைய நந்திவர்மனே! நீ இப்போது இறந்து விட்டாய். உன் முகத்தின் ஒளி வானத்துச் சந்திரனை அடைந்துவிட்டது. உன் புகழ் கடலைச் சென்று சேர்ந்துவிட்டது. உன் வீரம் காட்டில் உள்ள புலியிடம் அடைக்கலமானது.  உன் கொடைத்திறம் கற்பக மரத்திடம் தஞ்சமானது. திருமகள் திருமாலிடம் சேர்ந்து விட்டாள். உன் உடல் நெருப்பிடம் சேர்ந்து விட்டது. நானும் என்னைத் தொடர்ந்து வரும் வறுமையும் எங்கே போய் இனி வாழ்வோம்” என புலவர்கள் கையற்றுப் பாடுகின்றனர்.

அருஞ்சொற்பொருள்

திரு திருமகள், மேலவர் பகைவர், செருநர் - பகைவர், பதி நாடு, கடுவாய் வெற்றிமுரசு, தும்பி கருவண்டு, அவதி சொன்ன நாள் குறித்துக் கூறிய காலம், அடர்ந்து பொருங்காலம் நெருங்கி வந்து எம்மை வைகின்ற காலம், பிச்சி சாதி மல்லிகை, குருகு இனம் பறவை இனம், இளந்தலை என் எளிய நிலை, நந்தி சீராமன் இராமபிரான் போன்ற நந்தி மன்னன், மறிகடல் அலைகள் மோதுகின்ற கடல், கலி வறுமைத் துன்பம், தயாபரன் அருளாளன்.

 

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

திருவாய்மொழி - நம்மாழ்வார்

 

திருவாய்மொழி

நம்மாழ்வார்

நம்மாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம்  ஆழ்வார் திருநகரியில் காரியார் மற்றும் உடைய நங்கைக்குத் திரு மகனாகப் பிறந்தவர். இவர் பிறந்த உடன் அழுதல், பால் உண்ணுதல் முதலியனவற்றைச் செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் அவரை "மாறன்" என்றே அழைத்தனர். மாயையை உருவாக்கும் "சட" எனும் நாடியினாலே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகிறது. ஆனால் இவர் சட நாடியை வென்றதால் "சடகோபன்" என்றும் அழைக்கப்பட்டார். யானையை அடக்கும் அங்குசம் போல, பரன் ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டியமையால் "பராங்குசன்" என்றும், தலைவியாகத் தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது "பராங்குச நாயகி" என்றும் அழைக்கப்படுகிறார்.  நான்கு வேதங்களைத் தீந்தமிழில் பாடியதால் "வேதம் தமிழ் செய்த மாறன்" என்றே புகழப்படுகிறார்.

பதினாறு ஆண்டுகள் திருக்குருகூர் நம்பி கோவிலின் புளிய மரத்தின் அடியில் எவ்வித சலனமும் இல்லாமல் தவம் செய்து வந்தார். வடதிசை யாத்திரை மேற்கொண்டிருந்த மதுரகவி என்பவர் அயோத்தியில் இருந்தபோது தெற்குத் திசையில் ஒரு ஒளி தெரிவதைக் கண்டு அதனை அடைய தென்திசை நோக்கிப் பயணித்தார். மாறனிடமிருந்தே அவ்வொளி வருவதை அறிந்து அவரை சிறு கல் கொண்டு எறிந்து விழிக்க வைத்தார். சடகோபனின் ஞானத்தாலும், பக்தியாலும் கவரப்பெற்று அவருக்கே அடிமை செய்தார் என்பது வரலாறு.

நம்மாழ்வார் இயற்றிய பாசுர நூல்கள் நான்கு. அவை,

1.    திருவிருத்தம் – 100 பாசுரங்கள்

2.    திருவாசிரியம் – 8 பாசுரங்கள்

3.    பெரிய திருவந்தாதி – 87 பாசுரங்கள் 

4.    திருவாய்மொழி – 1102 பாசுரங்கள்

 நம்மாழ்வாரின் வேறு பெயர்கள்

சடகோபன், மாறன், காரிமாறன், பராங்குசன், வேதம் தமிழ் செய்த மாறன், வகுளாபரணன், குருகைப்பிரான், குருகூர் நம்பி, திருவாய்மொழி பெருமாள், பெருநல்துறைவன், குமரி துறைவன், பவரோக பண்டிதன், ஞதனதேசிகன், ஞான பிரான், ஞானத் தமிழ்க் கடல்.

இவர் இயற்றிய திருவாய்மொழியில் நான்காம் திருமொழியிலிருந்து 5 பாடல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதி, பராங்குசன் என்றழைக்கப்படும் நம்மாழ்வார் தம்மைத் தலைவியாகப் பாவித்து இறைவன் மீது காதல் கொண்டு, நாரை, குயில், அன்னம் முதலிவற்றைத் தூது அனுப்புவதாகப் பாடப்பட்டுள்ளது.


நான்காந் திருமொழி

நாரை விடு தூது

அஞ்சிறைய மடநாராய். அளியத்தாய் நீயும்நின்

அஞ்சிறைய சேவலுமாய் ஆவாவென் றெனக்கருளி

வெஞ்சிறைப்புள் ளுயர்த்தாற்கென் விடுதூதாய்ச் சென்றக்கால்

வன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டா லென்செய்யுமோ?

விளக்கம்

நாரையே! என் மீது கொண்ட கருணையால், நீ உன் ஆண் நாரையுடன் நாரணனிடம் எனக்காகத் தூது சென்றால், அவன் உங்களை அவனது சிறையில் வைத்துவிட்டால், என்ன செய்வாய்?


குயில் விடு தூது

என்செய்ய தாமரைக்கண் பெருமானார்க் கென்தூதாய்

என்செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள். நீரலிரே?

முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல்

முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே?

விளக்கம்

இனக் குயில்களே! தாமரைக் கண்ணனிடம் எனக்காகத் தூது செல்லுங்கள். நான் முன் செய்த வினைப்பயனால், அவனுக்குக் குற்றேவல் செய்யும் விதி எனக்கு இல்லாமல் போயிற்று. இனியாவது அப்பேறு எனக்குக் கிட்டுமோ என்பதை அறிந்து வா.


அன்னம் விடு தூது

விதியினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்காள்.

மதியினால் குறள்மாணாய் உலகிரந்த கள்வற்கு

மதியிலேன் வல்வி னையே மாளாதோ வென்று , ஒருத்தி

மதியெல்லாம் முள்கலங்கி மயங்குமால் என்னீரே.

விளக்கம்

அன்னங்களே! குறள் மணியாய் (வாமன அவதாரம்) உலகை இரந்தவனிடம்  சென்று, புத்தி முழுவதும் கலங்கப் பெற்று, அறிவிழந்து கிடக்கிறாள் ஒரு பெண் என்று கூறுங்கள். 


மகன்றில் விடு தூது (கிரவுஞ்சம்)

என்நீர்மை கண்டிரங்கி யிதுதகா தென்னாத

என்நீல முகில்வண்ணற் கென்சொலியான் சொல்லுகேனோ

நன்னீர்மை யினியவர் கண் தங்காதென் றொருவாய்ச்சொல்

நன்னீல மகன்றில்காள். நல்குதிரோ நல்கீரோ?

விளக்கம்

மகன்றில்களே! என் நிலைமையைக் கண்டு இரக்கப்படாத முகில் வண்ணனுக்கு என் நிலைமையை எடுத்துச் சொல்லுங்கள்.

 

குருகு விடு தூது

நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே,

நல்கத்தா னாகாதொ? நாரணனைக் கண்டக்கால்

மல்குநீர்ப் புனற்படப்பை இரைதேர்வண் சிறுகுருகே.

மல்குநீர்க் கண்ணேற்கோர் வாசகங்கொண் டருளாயே.

விளக்கம்

நீர் வாய்ந்த தோட்டங்களில் உலாவும் குருகே!  ஏழு உலகங்களையும் காத்தளிக்கும் நாராயணன் நீர் நிறைந்த கண்களுடன் நிற்கும் எனக்கு அருள் தரக்கூடாதா என்று  அவனிடம் சென்று கேள்.