புதன், 11 நவம்பர், 2020

அடிப்படைத் தமிழ் - தமிழ் எழுத்துகள்

தமிழ் எழுத்துகள்

1. தமிழ் மொழியில் உள்ள மொத்த எழுத்துகள் 247. அவை,

                                          உயிர் எழுத்துகள்                 -   12

                                         மெய் எழுத்துகள்                  -   18

                                         உயிர் மெய் எழுத்துகள்     -    216

                                         ஆய்த எழுத்து                         -    1


2. முதல் எழுத்துகள் (primary letters)

                                          உயிர் எழுத்து 12, 

                                          மெய் எழுத்து 18. 


3. உயிர் எழுத்துகள்  - 12

அ,  ஆ,  இ,  ஈ,  உ,  ஊ,  எ,  ஏ,  ஐ,  ஒ,  ஓ,  ஔ


4. உயிர் எழுத்துகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை,

                                     1. குறில்         - அ,   இ,   உ,   எ,   ஒ  ( 5 )

                                     2. நெடில்         -  ஆ, ஈ,  ஊ,  ஏ,  ஐ,  ஓ,  ஔ ( 7)


5. சுட்டு எழுத்துகள்  - 3

                                     அ,     இ,        உ


6. வினா எழுத்துகள்  - 4

                                    ஆ,   எ,     ஏ,   ஓ


7. மெய் எழுத்துகள்  -  18

க்,   ங்,   ச்,   ஞ்,  ட்,  ண்,  த்,  ந்,  ப்,  ம்,  ய்,  ர்,  ல்,  வ்,  ழ்,  ள்,  ற்,  ன்


8. மெய் எழுத்துகளை 3 வகையாகப் பிரிக்கலாம். அவை,

                                    1. வல்லினம்     -     க்,  ச்,  ட்,  த்,  ப்,  ற்

                                    2. மெல்லினம்  -     ங், ஞ்,  ண்,  ந்,  ம்,  ன்

                                    3. இடையினம்  -  ய்,  ர், ல்,  வ்,  ழ்,  ள்


9. ஆய்த எழுத்து  - 1  

                                                              


 10. தமிழ் எழுத்துகளை எழுதத் துணை புரியும் குறியீடுகள்

                                     ா      -   துணைக்கால்

                                       ி     -   மேல் கீழ் நோக்கும் சுழி

                                       ீ      -    மேல் நோக்கும் சுழி

                                   பெ   -    ஒற்றைக் கொம்பு 

                                   பே    -    இரட்டைக் கொம்பு

 

                                  பை   -     ஐகாரக் கொம்பு 





ஞாயிறு, 8 நவம்பர், 2020

புதுக்கவிதை - இன்று நான் பெரிய பெண்

 

இன்று நான் பெரிய பெண்

அ.சங்கரி

நான்

கல்லாய் மாறிய பூ

பாறையாய் இறுகிய காற்று

பனியாய் உறைந்த நீர்

பூவைப் போலவும்

காற்றைப் போலவும்

நீரைப் போலவும்

குதித்துத் திரிந்து

சுற்றிய பருவத்தில்

காலை உதைத்து

வீரிட்டு அழவும்

கல கல என்று

கைதட்டிச் சிரிக்கவும்

கோபம் வந்தால்

கொப்பியைக் கிழிக்கவும்

முடிந்த காலம்.

மரத்தில் ஏறவும்

மாங்காய் பிடுங்கவும்

பக்கத்து வீட்டுப்

பிள்ளைகளுடனே

கிட்டி அடிக்கவும்

ஒளித்துப் பிடிக்கவும்

ஒன்றும் பேசிலர் எவரும்.

ஒன்று

நான் பெரிய பெண்

உரத்துச் சிரித்தல் கூடாது

விரித்த புகையிலை

அடக்கம்; பொறுமை

நாணம்

பெண்மையின் அணிகலம்

கதைத்தல்; சிரித்தல்

பார்த்தல்; நடத்தல்;

உடுத்தல்

எல்லாம் இன்னபடி என்றெழுதி.

நான்

கல்லாய்

பாறையாய்

பனியாய்

பெண்ணாய்..

பாடல் விளக்கம்

இக்கவிதை பருவம் எய்திய பெண்ணின் மனக்குமுறலை வெளிப்படுத்துகின்றது.

சிறு குழந்தையாக இருந்தபோது……

நான் சிறு குழந்தையாக இருந்தபோது எந்தக் கட்டுப்பாடுகளும் எனக்கு இல்லை. பூவைப் போல மலர்ந்து சிரித்தேன். காற்றைப்போல எங்கும் சுற்றித் திரிந்தேன். நீரைப்போல ஓடியாடி விளையாடினேன். கிடைக்காத பொருளை எண்ணி ஏங்கும்போது கை கால்களை உதைத்து வீறிட்டு அழுதிருக்கிறேன். என் வயது குழந்தைகளுடன் கல கல என்று சத்தம் போட்டுக் தைட்டிச் சிரித்திருக்கிறேன். நோட்டுப் புத்தகங்கைளக் கிழித்து என் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். (கொப்பி - நோட்டுப் புத்தகங்கள், குறிப்பேடு).  

மரங்களில் எறி மாங்காய்ப் பறித்திருக்கிறேன். பக்கத்து வீட்டு ஆண் பிள்ளைகளுடன் சேர்ந்து கிட்டிப்புல் விளையாடியிருக்கிறேன். மற்றக் குழந்தைகளுடன் ஒளிந்து ஓடிப் பிடித்து விளையாடியிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை எனக்கு.

பருவம் எய்திய பின்னர்….

பருவம் எய்திய நாள் முதல் கட்டுப்பாடுகள் என்னைச் சூழ்ந்து கொண்டன. நான் பெரிய பெண் ஆகிவிட்டதாகக் கூறி என்னை முடக்கினர்.

  • பெண் சிரித்தால் போச்சு புகையிலை விரிச்சா போச்சு என்ற பழமொழி என் மீது திணிக்கப்பட்டது. அதனால் சத்தமிட்டு சிரிக்கக்கூடாது என்று கூறப்பட்டது.
  • அடக்கமாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும். கோபம் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.
  •  வெட்கம் பெண்மையின் அணிகலன் என்று கற்றுத் தரப்பட்டது.
  • நான் பேசுவதற்கு, சிரிப்பதற்கு, பார்ப்பதற்கு, நடப்பதற்கு, உடுத்துவதற்கு என எல்லாவற்றுக்கும் வரைமுறைகள் எழுதப்பட்டன.

ஆதலால், பூவாக மலர்ந்து சிரித்த நான் இன்று கல்லாகி விட்டேன். காற்றாக சுற்றித்திரிந்த நான் பாறையாக ஓரிடத்தில் நிலை பெற்று விட்டேன். நீராய் ஓடிக் களித்த நான் பனியாய் உறைந்து விட்டேன் என்று வருத்தம் கொள்ளும் பெண்மையை இக்கவிதையில் படைத்திருக்கின்றார் ஆசிரியர்.

கருத்து

பருவம் எய்தியவுடன் சுதந்திரம் பறிக்கப்பட்டு, விரும்பியதைச் செய்யும் ஆற்றல்கள் யாவும் அடக்கப்பட்டு, யார் யாரோ சொல்லும் கட்டுப்பாடுகளுக்குத் தள்ளப்பட்டு வாழ்கின்ற பெண்களின் அவல நிலையை இக்கவிதையில் கல், பாறை, பனி என்ற குறியீடுகளின் மூலம் நம் கவனத்திற்குக் கொண்டு வருகின்றார் ஆசிரியர்.

புதுக்கவிதை - புத்தகம்

 

புத்தகம்

கவிஞர் அப்துல் ரகுமான்

பித்தன் மழைக்காகப் பள்ளிக்கூடத்தில்

ஒதுங்கினான்.

குழந்தைகளின் கையிலிருந்த

புத்தகங்களைப் பார்த்து

புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்.

குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றான்

அவன் மேலும் சொன்னான்

குழந்தைகளே பாடப் புத்தகங்களாக

இருக்கிறார்கள்

அவர்கள் கையில் ஏன் காகிதக்

குப்பைகளைத் தருகிறீர்கள்?

உங்கள் புத்தகங்கள் கண்களைத் திறப்பதில்லை

ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன

காகித ஓடங்களை நம்பி இருப்பவர்களே!

நீங்கள் எப்படி அக்கரை போய்ச் சேர்வீர்கள்?

இதோ இரவு பகல் என்ற ஏடுகள்

உங்களுக்காகவே புரளுகின்றன

நீங்களோ அவற்றைப் படிப்பதில்லை

இதோ உண்மையான உயிர்மெய்

எழுத்துகள்

உங்கள் முன் நடமாடுகின்றன

நீங்களோ அவற்றைக் கற்றுக்

கொள்வதில்லை

ஒவ்வொரு பூவும் பாடப்புத்தகமாக இருப்பதை

நீங்கள் அறிவதில்லை

நீங்கள் நட்சத்திரங்களைப் படிக்க

கற்றிருந்தால்

உச்சரிக்க முடியாத எழத்துகளில்

அதிகமான அர்த்தம் இருப்பதை

அறிந்திருப்பீர்கள்

நீங்கள் மின்னலின் வாக்கியங்களை

வாசிக்க முடிந்திருந்தால் ஒளியின் ரகசியத்தை

அறிந்திருப்பீர்கள் !

உங்களுக்குக் கண்ணீர்த் துளிகளைப்

படிக்கத் தெரிந்திருந்தால்

நீங்கள் மனிதனின் சாரத்தை

அறிந்திருப்பீர்கள் !

எழுத்துகளால் அல்ல

காயங்களால் கற்பதே கல்வி

என்பதை அறிந்து கொள்ளுங்கள்

உங்கள் புத்தகங்கள்

விளக்குகளாக இருக்கின்றன

சூரியனைக் காண விளக்குகள்

தேவைப்படுவதில்லை.

பாடலின் விளக்கம்

புத்தகம் என்ற தலைப்பில் கவிஞர் அப்துல்ரகுமான் அவர்கள் ஏட்டுக் கல்வியைவிட அனுபவக் கல்வியே சாலச் சிறந்தது என்ற கருத்தை வலியுறுத்துகின்றார்.

பித்தன் என்பது குறியீடு

இக்கவிதை பித்தன் ஒருவன் கூறுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. ஏட்டுக் கல்வி வாழ்க்கைக்கு உதவாது என்று கூறுபவனை இந்தச் சமூகம் பித்தன் என்றே அழைக்கிறது. ஆகவே, பித்தன் என்ற சொல் இக்கவிதையில் கருத்துகளை எடுத்துரைக்கும் குறியீடாக அமைந்துள்ளது.

குழந்தைகளே பாடப்புத்தகங்கள்

மழை பெய்தமையால் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கினான் ஒரு பித்தன். அங்கு வகுப்பறையில் குழந்தைகளின் கையில் இருந்த புத்தகங்களைக் காணுகின்றான். அப்புத்தகங்களிடம் “புத்தகங்களே சமர்த்தாய் இருங்கள். குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்” என்று கூறுகின்றான்.

பாடப் புத்தகங்களின் மூலமாக மதிப்பெண் பெறுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டியங்கும் கற்றல் சூழலை சாடுகின்றார் கவிஞர்.  குழந்தைகளிடம் மிக இயல்பாக இருக்கின்ற ஒரு குணம் தேடல். எதையும் தேடித் தேடி ஆர்வமாகக் கற்கும் இயல்பு இயற்கையாகவே குழந்தைகளிடம் இருக்கிறது. குழந்தைகளிடம் கற்றுக் கொள்ள எண்ணற்ற செய்திகள் இருக்கின்றன. ஆனால் பாடப்புத்தகங்களை அவர்கள் கையில் கொடுத்து அவர்களின் தேடல்களை நாம் தடுத்து விடுகின்றோம் என்ற ஆதங்கத்தால் “அவர்கள் கையில் ஏன் காகிதக் குப்பைகளைத் தருகிறீர்கள்” என்று கேட்கிறார் கவிஞர்.

அனுபவங்களும் சிறந்த பாடம்

வாழ்க்கையில் ஏற்படும் பற்பல அனுபவங்கள் நமக்கு சிறந்த பாடங்களைக் கற்பிக்கின்றன. அதைக் கவனிக்காது பாடப்புத்தகங்களை மட்டும் நம்புபவர்கள், காகித ஓடங்களை நம்பிப் பயணம் செய்ய நினைப்பவர்கள் என்கின்றார். அந்த ஓடத்தை நம்பி எப்படி அக்கரைக்குச் செல்ல முடியாதோ, அதுபோல, வெறும் பள்ளிப் பாடங்களும், மதிப்பெண்களும் நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாது என்பதே அவர் கருத்து.

இரவு பகல்

இரவு பகல் இரண்டுமே வாழ்க்கையின் இருவேறு பக்கங்களைக் கற்றுத்தருகின்றன. இரவு இல்லையெனில் பகல் இல்லை. பகல் இல்லையெனில் இரவு இல்லை. அதுபோலதான் இன்பமும், துன்பமும், வெற்றியும் தோல்வியும் என்ற உயரிய தத்துவத்தைப் புரிந்து கொள்ள இரவும் பகலும் துணைபுரிகின்றன.

உயிர் மெய்

உயிரும் மெய்யும் இல்லையெனில் உயிர் மெய் எழுத்துகள் இல்லை. தாயும் தந்தையும் இல்லையெனில் நாம் இல்லை. நம் கண்முன் நடமாடுகின்ற அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்குச் சிறந்த பாடங்கள் என்பதை நாம் உணர்வதேயில்லை என்று ஆதங்கம் கொள்கின்றார் ஆசிரியர்.

மலர்கள்

மலர்களின் வாழ்நாள் ஒரு நாள் மட்டுமே. ஆயினும் மலர்ந்து மணம் வீசி மக்களுக்கு மனநிறைவைத் தருகின்றன. மண்ணில் உதிர்ந்தாலும் எருவாகி மண்ணுக்கு உரமாகின்றன. நம் வாழ்நாளின் ஒவ்வொரு நாளும் அடுத்தவர்களுக்குப் பயனுள்ளதாக வாழ்வதில்தான் வாழ்க்கை முழுமை பெறும் என்ற பாடத்தை மலர்கள் கற்றுத்தருகின்றன. ஆனால் நாம் அதைக் கவனிப்பதேயில்லை என்கின்றார்.

நட்சத்திரங்கள்

இரவில் மட்டுமே தோன்றுகின்ற நட்த்திரங்கள் அளவில் சிறியவை. ஆனால் வானத்திற்கே அழகு தருபவை. நட்சத்திரம் இல்லா வானம் வெறுமையாகவே தோன்றும். அதுபோல உச்சரிக்கக் கடினமாகவோ, முடியாததாகவோ இருக்கும் ழ, ள, ல, ர, ற, ந, ன, ண போன்ற எழுத்துக்களின் ஆழங்களை அறிந்து கொண்டால், இவை இல்லையெனில் தமிழில் அழகு இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்கின்றார் ஆசிரியர்.

மின்னல்கள்

மழை வரும்போது மட்டுமே மின்னுகின்ற மின்னல்களின் மொழியினை அறிந்து கொண்டால், இருளை நீக்கும் ஒளியின் மரமங்களை நாம் அறிந்து கொள்ள முடியும் என்கின்றார்.

கண்ணீர்

பிற உயிர்களின் கண்ணீர் துளிகளைக் கண்டு அவற்றின் துயரம் அறிகின்ற வல்லமை இருந்தால் மட்டுமே மனித வாழ்க்கைக்கு அர்த்தம் உண்டு என்பதை நிறுவுகின்றார் ஆசிரியர்.

முடிபு

பாடப்புத்தகங்கள்   வெளிச்சத்தைத் தரும் விளக்குகள் மட்டுமே. அனுபவப் பாடங்கள் உலகிற்கு வெளிச்சம் தருகின்ற சூரியனைப் போன்றது. அனுபவம் என்று சூரியனைக் காண விளக்காகிய பாடப்புத்தகங்கள் தேவைப்படுவதில்லை என்கின்றார். ஆகவே, எழுத்துக்களால் மட்டும் ஒருவன் கல்வி கற்க முடியாது. வாழ்க்கையில் ஏற்படுகின்ற பல இன்னல்கள், காயங்கள், தோல்விகள் ஆகியவைதான் வாழ்க்கை எனும் கல்வியை முழுமை பெறச் செய்கின்ற பாடங்கள் என்பதை உணர வேண்டும். அனுபவப்பாடங்களே வாழ்க்கைக் கல்விக்கு மிக முக்கியம் என்ற கருத்தை இக்கவிதையின் மூலம் தெரிவிக்கின்றார் கவிஞர் அப்துல் ரகுமான்.