திங்கள், 22 மே, 2023

இழந்தவர்கள் - அப்துல் ரகுமான்

 

இழந்தவர்கள் - அப்துல் ரகுமான்

ஓடிக் கொண்டிருப்பவனே! நில்

எங்கே ஓடுகிறாய்?

எதற்காக ஓடுகிறாய்?

வாழ்க்கையைப் பிடிக்க ஓடினாய்

ஆனால் உன் கண் மூடிய ஓட்டத்தில்

அதைப் பார்க்காமலே ஓடுகிறாய்

நில் கவனி

உன்னிலிருந்தே ஓடுகிறாய்

உன்னை விட்டு ஓடுகிறாய்

குளிர்காயச்

சுள்ளி பொறுக்கத் தொடங்கினாய்

சுள்ளி பொறுக்குவதிலேயே

உன் ஆயுள்

செலவாகிக் கொண்டிருக்கிறது

நீ குளிர் காய்வதே இல்லை

வாழ்க்கை ஒரு திருவிழா

நீயோ அதைக் கொண்டாடுவதே இல்லை

கூட்டத்தில்

தொலைந்து போகிறாய்

ஒவ்வொரு வைகறையும்

உனக்காகவே

தங்கத் தட்டில்

பரிசுகளைக் கொண்டு வருகிறது

நீயோ பெற்றுக் கொள்வதே இல்லை.

ஒவ்வோர் இரவும்

உனக்காகவே

நட்சத்திரப் பூச்சூடி

ரகசிய அழகுகளோடு வருகிறது

நீயோ தழுவிக் கொண்டதே இல்லை

பூர்ணிமை

இரவுக் கிண்ணத்தில்

உனக்காகவே வழிய வழிய

மது நிரப்புகிறது

நீயோ அருந்துவதே இல்லை

ஒவ்வொரு பூவும்

உன் முத்தத்திற்கான இதழாகவே

மலர்கிறது

நீயோ முத்தமிட்டதே இல்லை.

மேகங்களில் கிரணங்கள்

உனக்காக ஏழு வர்ணங்களில்

காதல் கடிதம் எழுதுகின்றன

நீயோ படிப்பதே இல்லை.

உன்னைச் சுற்றிலும் சௌந்தர்ய தேவதை

காதலோடு புன்னகைத்துக் கொண்டிருக்கிறாள்

நீயோ பார்ப்பதே இல்லை

உன் மனைவியின் கொலுசில்

உன் குழந்தையின் சிரிப்பில்

உன் அண்டை வீட்டுக்காரனின்

கை அசைப்பில்

தெருவில் போகின்ற அந்நியனின்

திரும்பிப் பார்த்தலில்

வாழ்க்கையின் சங்கீதம் ஒலிக்கிறது

நீயோ கேட்பதே இல்லை.

தறி நாடாவைப் போல

இங்கும் அங்கும் அலைகிறாய்

ஆனால்

நீ எதையும் நெய்வதில்லை.

ரசவாதக் கல்லைத்

தேடி அலைகிறாய்

நீதான் அந்தக் கல் என்பதை

நீ அறியவில்லை.

கடிகார முள்ளாய்

சுற்றிக் கொண்டே இருப்பவனே

வாழ்க்கை என்பது

வட்டிமடிப்பதல்ல என்பதை

எப்போது உணரப் போகிறாய்?

நீ அர்த்த ஜீவனுள்ள

எழுத்துக்களால் ஆனவன்

ஆனால் நீயோ

வெறும் எண்ணாகிவிடுகிறாய்.

நீ முத்துக்கள் நிறைந்த சமுத்திரம்

ஆனால் நீயோ

கிளிஞ்சல் பொறுக்க

அலைந்து கொண்டிருக்கிறாய்.

நீ வயிற்றிலிருந்துதான் வந்தாய்

ஆனால் நீ

வயிற்றில் இல்லை.

வயிற்றில் விழுந்து கிடப்பவனே

மேல் இதயத்திற்கு ஏறு

அங்கே

உனக்கான ராஜாங்கம்

காத்திருக்கிறது.

இழந்தவர்கள் - அப்துல் ரகுமான்

கவிதையின் விளக்கம்:

இன்றைய அறிவியல் உலகில் நாம் நம் வாழ்க்கையை இயந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதனால் நடைமுறை வாழ்க்கையில் எத்தகைய இன்பங்களை இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை கவிஞர் அப்துல் ரகுமான் அவர்கள் தம் ‘இழந்தவர்கள்என்ற கவிதை மூலம் விளக்குகின்றார்.

  • குளிர் காய சுள்ளி பொறுக்கத் தொடங்கிய நாம், வெறும் சுள்ளி பொறுக்குவதில் மட்டுமே கவனத்தைச் செலுத்துவதால் குளிர் காய்வதே இல்லை.
  • வாழ்க்கை என்ற திருவிழாவைக் கொண்டாட நாம் விரும்புவதே இல்லை. மாறாக, திருவிழாவின் கூட்டத்தில் தொலைந்து போகவே விரும்புகின்றோம்.
  • ஒவ்வொரு நாளும் விடியல் நமக்குத் தங்கத் தட்டில் பரிசுகளைக் கொண்டு தருகின்றது. ஆனால் நாம் அதைப் பெற்று கொள்வதே இல்லை.
  • விண்மீண்கள் நமக்காகவே இரவில் பூச்சூடி வருகின்றன. ஆனால் நம் அதன் அழகினைக் கவனிப்பதே இல்லை.
  • பௌர்ணமி நாளில் முழுநிலவின் இனிமையினை நாம் ரசிப்பதே இல்லை.
  • ஒவ்வொரு பூவும் நம் முத்தத்திற்காகவே விரிகின்றன. நாமோ முத்தமிட்டதே இல்லை.
  • மேகங்கள் ஏழு வண்ணங்களில் வானவில்லாய் வளைந்து காதல் கடிதம் தீட்டுகின்றன. நாம் அதைப் படிப்பதே இல்லை.
  • மனைவியின் கொலுசில் ஏற்படும் ஒலியில், குழந்தையின் சிரிப்பில், பக்கத்து வீட்டுக்காரரின் கை அசைப்பில், தெருவில் போகின்ற அந்நியர் திரும்பிப் பார்க்கையில் என நம் வாழ்க்கையைச் சுற்றிலும் சங்கீதம் ஒலிக்கின்றது. நாம்தான் அதைக் கேட்பதேயில்லை.
  • தறியில் ஓடும் நாடாவைப் போல் நாமும் ஓடுகின்றோம். ஆனால் எதையும் நெய்வதில்லை.
  • மண்ணைப் பொன்னாக்கும் ரசவாதக் கல்லைத் தேடி அலைகின்றோம். ஆனால் நாம்தான் அந்தக் கல் என்பதை நாம் அறிவதே இல்லை.
  • கடிகார முள்ளைப் போன்று சுற்றிக் கொண்டே இருக்கின்றோம். வாழ்க்கை வெறும் வட்டமடிப்பது இல்லை என்பதை நாம் உணர்வதே இல்லை.
  • நாம் உயிர் எழுத்துக்களால் உருவானவர்கள். ஆனால் வெறும் எண்ணிக்கையாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
  • நாம் முத்துக்கள் நிறைந்த கடலைப் போன்றவர்கள். ஆனால் சிப்பிகளைத் தேடுவதிலேயே அலைந்து கொண்டிருக்கின்றோம்.
  • நாம் அனைவரும் வயிற்றிலிருந்து தான் வந்தோம். ஆனால், வயிற்றினால் உண்டாகும் பசியினையும், அதை நிறைவேற்றுவதற்காக பணம் சம்பாதிப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்துகின்றோம்.
  • இதயம் என்ற ஒன்று நமக்கு உண்டு. அதில் அன்பும் கருணையும் கலந்திருக்கின்றது. அதுதான் நம் வாழ்க்கையை ராஜ வாழ்க்கையாக மாற்றும் திறவுகோல் என்பதை உணர வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையின் இனிமையை நாம் அனுபவிக்க முடியும் என்று கவிஞர் மிக அழகாக வாழ்க்கையின் அர்த்தத்தை விளக்குகின்றார்.

 

 

 

 

கடமையைச் செய் - மீரா

 

கடமையைச் செய் - மீரா

பத்து மணிக்குச்

சரியாய் நுழைந்தேன்.

கூட இருப்போரிடத்தில்

கொஞ்சம் குசல விசாரணை.

தலை வலித்தது

தேநீர் குடிக்க

நாயர் கடைக்கு நடந்தேன்.

ஊரில் இருந்து

யாரோ வந்தார்

ஒரு மணி நேரம்

உரையாடல்.

இடையில்

உணவை மறக்கலாமா?

உண்டு தீர்த்த

களைப்புத் தீர

ஒரு கன்னித் தூக்கம்.

முகத்தை அலம்பிச்

சிற்றுண்டி நிலையம்

சென்று திரும்பினேன்.

வேகமாய்

விகடனும் குமுதமும்

படித்து முடித்தேன்.

மெல்லக்

காகிதக் கட்டை எடுத்துத்

தூசியைத் தட்டித் துடைத்துக்

கடமையைச் செய்யத்

தொடங்கும்போது.

கதவை அடைத்தான்

காவற்காரன்

மணி ஐந்தாயிற்றாம்.

 

கடமையைச் செய் - மீரா

கவிதையின் விளக்கம்:

    கவிஞர் மீரா அவர்கள் ‘கடமையைச் செய்என்ற தம் கவிதையின் மூலமாக, அரசாங்க ஊழியர்கள் அலுவலக நேரத்தில் வேலை செய்யாமல் நேரத்தை எவ்வாறு வீணடிக்கின்றனர் என்பதைத் தெரிவிக்கின்றார். இக்கவிதை அங்கத (கிண்டல், கேலி) முறையில் அமைந்துள்ளது.

  • பத்து மணிக்குச் சரியாக அலுவலகத்தில் நுழைந்த ஊழியர் ஒருவர் தன்னுடன் பணிபுரியும் மற்ற ஊழியர்களிடம் உரையாடி நலம் விசாரிக்கின்றார். 
  • லேசாக தலை வலிப்பது போல் தோன்றியதால், தேநீர் பருக நாயர் கடைக்குச் செல்கின்றார்.
  • தேநீர் அருந்திய பின் ஊரிலிருந்து வந்த யாரோ ஒருவரிடம் ஒரு மணி நேரம் உரையாடுகின்றார்.
  • உணவு இடைவேளை வந்து விட்டது. உணவு அருந்துகின்றார்.
  • உண்ட களைப்பு தீர சிறிது நேரம் உறங்குகின்றார்.
  • பின்பு, முகத்தைக் கழுவிக்கொண்டுச் சிற்றுண்டி நிலையத்திற்குப் புறப்படுகின்றார்.
  • மீண்டும் அலுவலகம் வந்த பின்பு தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த விகடன் குமுதம் போன்ற இதழ்களைப் படிக்கின்றார்.
  • அலுவலகம் வந்ததில் இருந்து வேலையைப் பற்றிச் சிறிதும் யோசித்துப் பார்க்காத அவர் மெதுவாக காகிதக் கட்டைகளை எடுத்துத் தூசியைத் தட்டித் துடைத்து கடமையைச் செய்யத் தொடங்கினார்.
  • அப்போது காவல்காரன் வந்து, மணி ஐந்து ஆகிவிட்டது எனக் கூறி கதவை அடைக்கின்றார்.

இவ்வாறு ஊழியர்கள் சிலர் ஒரு வேலையும் செய்யாமல் இருப்பதால்தான் அரசாங்கப் பணிகளைச் சரியாகச் செய்ய முடிவதில்லை என்ற கருத்து இக்கவிதையின்வழி புலப்படுகின்றது.

 

 

 

ஆடிக்காற்றே - சிற்பி

ஆடிக்காற்றே - சிற்பி

ஆடிக்காற்றே வா! வா!

மண் தூவி விதை தூவி

முளை காண விழை காற்றே

என் சொல் கேளேன்.

நெல்லை நாறப் புழுக்குறானே

அவனைப் படியில் உருட்டிவிடு

இளைத்தவன் வயிற்றில் சொடுக்குறானே

அவனைக் குழியில் இறக்கிவிடு

மஞ்சள் இதழில் பச்சை கிறுக்குறானே

அவனை பனை மரத்தில் தொங்கவிடு

உதைத்துக் கொள்ளட்டும்

துள்ளல் அடங்கட்டும்.

புரட்சிக் காற்றே!

இன்னும் ஒன்றே ஒன்று

இவற்றைக் காண விழைந்த என் துணை

இதோ, இங்கே நிலப்படுக்கையில்,

எனக்காக -

மல்லிகை மலர்களைத் தூவ மாட்டாயா?

மெல்ல -

மெல்லத் தூவு, நோகாமல் தூவு.

 

ஆடிக்காற்றே - சிற்பி

கவிதையின் விளக்கம்:

  • ஆடி மாதத்தில் வீசும் காற்றை கவிஞர் இன்முகத்தோடு வரவேற்கும் வகையில் ‘ஆடிக்காற்றே வா வாஎன்று பாடுகின்றார்.
  • ஆடிக்காற்றைப் புரட்சிக் காற்று என்றும் வர்ணிக்கின்றார்.
  • மண்ணையும் விதைகளையும் தூவி அவை பயிராவதைக் காண விரும்பும் உழவர்களுக்கு உதவும் வகையில், தன் சொல் கேட்குமாறு ஆடிக்காற்றிடம் கூறுகின்றார் கவிஞர். 
  • கல்நெஞ்சம் கொண்டு மக்களைப் பல வகைகளில் துன்புறுத்தும் சில சமுதாய துரோகிகளை எவ்வாறெல்லாம் தண்டிக்க வேண்டும் என்று தன் ஆதங்கத்தை ஆடிக்காற்றிடம் தெரிவிக்கின்றார்.

1.அரிசியைத் துர்நாற்றத்தோடு எடுத்து வழங்குபவனை படியில் உருட்ட வேண்டும்.

2.அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களுக்குப் பணமும் கொடுக்காமல் விளைச்சலில் பங்கும் தராமல் அவர்கள் வயிற்றில் அடித்து பட்டினி போடுகின்றவனைக் குழியில் இறக்க வேண்டும்.

3.பிறரை இழிவுபடுத்தும் வகையில் மஞ்சள் இதழில் ஆபாசமாக எழுதுகின்றவனைப் பனை மரத்தில் தொங்க விட்டு, துள்ளல் அடங்கித் தானே இறந்து போக வேண்டும்.

என்று ஆடிக்காற்றிடம் விண்ணப்பம் செய்கின்றார். இறுதியாக, ‘அவற்றைக் காண விரும்பிய என் மீது மல்லிகை மலர்களைத் தூவ மாட்டாயா? தூவினால் மெல்லத் தூவு, நோகாமல் தூவுஎன்றும் கூறுகின்றார்.