ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

குறுந்தொகை - கழனிமாஅத்து, யாரும் இல்லை தானே, காலையும் பகலும்

 

குறுந்தொகை

1

பாடியவர் - ஆலங்குடி வங்கனார்

திணை - மருதம்

துறை        

கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் எனக் கேட்ட காதற் பரத்தை  அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.

துறை விளக்கம்

ஒரு தலைவன் தன் மனைவியைவிட்டுச் சிலகாலம் ஒரு பரத்தையோடு தொடர்புகொண்டு, அவள் வீட்டில் தங்கியிருந்தான். அங்கிருந்தபொழுது அவள் விருப்பப்படி நடந்துகொண்டான். பிறகு, தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்று தன் மனைவியோடு வாழ ஆரம்பித்தான். தலைவி (தலைவனின் மனைவி) தன்னை இழித்துப் பேசியதை அறிந்த பரத்தை, “இங்கிருந்த பொழுது என் மனம்போல் நடந்து கொண்டான். இப்பொழுது தன் மனைவிக்கு அடங்கி வாழ்கிறான்என்று தன் கருத்தைத் தலைவியின் அருகில் உள்ளவர்கள் கேட்குமாறு பரத்தை கூறுகிறாள்.

பாடல்

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்

பழன வாளை கதூஉ மூரன்

எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்

கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப் பாவை போல       

மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே.

விளக்கம்    

வயல் அருகில் உள்ள மா மரத்திலிருந்துபழுத்துத் தானாக விழுகின்ற இனிய பழங்களைக் கவ்வி உண்ணும் வாளை மீன்கள் வாழும் ஊரை உடைய தலைவன்என் வீட்டிலிருந்த பொழுது என்னை வயப்படுத்துவதற்காக என்னைப் பெருமைப்படுத்தும் மொழிகளைப் பேசினான்இப்பொழுதுதன்னுடைய வீட்டில்முன்னால் நிற்பவர்கள் கையையும் காலையும் தூக்குவதால் தானும் தன் காலையும் கையையும் தூக்கும் கண்ணாடியில் தோன்றும் உருவத்தைப்போல்தன் புதல்வனின் தாய் (மனைவிவிரும்பியவற்றைத் தலைவன் செய்கிறான்” என்று பழித்துரைக்கின்றாள் பரத்தை. தலைவி என்று குறிப்பிடாமல் புதல்வன் தாய் என்று குறிப்புப பரத்தையின் கோபத்தைக் காட்டுகின்றது.

 

2

பாடியவர் - கபிலர்

திணை – குறிஞ்சி

துறை - வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

துறை விளக்கம்

தலைவன் தன்னை மணந்து கொள்வதற்குக் காலம் தாழ்த்துகின்றான் என்பதை உணர்ந்த தலைவி, தன் வருத்தத்தைத் தோழியிடம் கூறியதாக அமைந்துள்ளது இப்பாடல். (வரைவு – திருமணம்)

பாடல்

யாரும் இல்லைத் தானே கள்வன்

தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ

தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால

ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்

குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே. 

விளக்கம்    

“தலைவன் பிறர் அறியாதவாறு என்னைக் காண வந்தபோது, களவில் என்னை மணந்தான். என்னோடு கூடியிருந்தான். அப்போது அங்கே யாரும் இல்லை. என் நலன் நுகர்ந்த கள்வனாகிய தலைவன் மட்டுமே இருந்தான். அவன் என்னிடம் செய்து கொடுத்த உறுதிமொழியிலிருந்து தவறினான் என்றால் நான் என்ன செய்வேன்? நான் அவனோடு கூடியிருந்த நாளில், அங்கே ஓடிக்கொண்டிருந்த நீரில் ஆரல் மீனின் வருகையைப் பார்த்துக் கொண்டு, சிறிய பசுங்கால்களையுடைய குருகும் இருந்தது” என்று உரைக்கின்றாள் தலைவி.



3

பாடியவர் – அள்ளூர் நன்முல்லையார்

திணை – குறிஞ்சி

துறை- பின்னின்றான் கூறியது

துறை விளக்கம்

தலைவியின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த தலைவனிடம், அவள் இனிமேல் உன்னைக் காண வரமாட்டாள் என்று தோழி கூற, தலைவன் தன் காதல் உண்மையானது என்று இரக்கத்துடன் கூறி நின்றான். (பின்னின்றான் – இரக்கத்துடன் நின்றான்)

பாடல்

காலையும் பகலும் கையறு மாலையும்

ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்

பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்

மாவென மடலோடு மறுகில் தோன்றித்

தெற்றெனத் தூற்றலும் பழியே   

வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே. 

விளக்கம்

காலைப்பொழுதுபகல்மாலைப் பொழுது ஊரில் உள்ளவர்கள் உறங்குகின்ற நள்ளிரவு, விடியற்காலம் ஆகிய நேரங்களில் அவ்வப்பொழுது மட்டும்  காதல் தோன்றுமாயின்அத்தகைய காதல் உண்மையானது அன்று. ஆனால், என்னுடைய காதல் உண்மையானதுதலைவி  என்னை  ஏற்றுக்கொள்ளாவிட்டால் நான் மடலேறுவேன் பனை மடலால் செய்த குதிரையின் உருவத்தின்மேல் ஊர்ந்து நான் தெருவில் வந்தால் (மடலேறினால்), அது தலைவி எனக்கு அளித்த துயரத்தைப் பலர் அறியச் செய்ததாகும்அதனால் பழி வரும்அவளைப் பிரிந்து உயிர் வாழ்ந்தால் ஊர் மக்கள் எங்கள் பிரிவைப் பற்றிக் குறை கூறுவார்கள்அதனாலும் எங்களுக்குப் பழி வரும்என்று தலைவன் தன் காதல் நிலையைத் தோழிக்கு விளக்குகின்றான்.







 

 



 

 

புறம் - இழையணி பொலிந்த, அளிதோ தானே, ஈ என இரத்தல்

 

புறநானூறு

1

பாடியவர்: அவ்வையார்.             

பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.

திணை : தும்பை.                         

துறை: தானை மறம்.

பாடல்

இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்,

மடவரல், உண்கண், வாள்நதல், விறலி!

பொருநரும் உளரோ, நும் அகன்றலை நாட்டு? என,

வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!

எறிகோல் அஞ்சா அரவின் அன்ன

சிறுவன் மள்ளரும் உளரே; அதாஅன்று

பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை

வளி பொரு தெண்கண் கேட்பின்,

அது போர்! என்னும் என்னையும் உளனே!     

விளக்கம்

“மணிகள் கோத்த அணிகள் விளங்கும் இடையும், மை தீட்டிய கண்களும் ஒளிபொருந்திய நெற்றியும் கொண்ட நாட்டியம் ஆடும் பெண்ணே! உங்கள் நாட்டில் போரிடும் வீரர்களும் உளரோ? என்று என்னைக் கேட்ட  அரசனே!  அடிக்கும் குச்சிக்கு அஞ்சாத பாம்பு போல வெகுண்டு எழுகின்ற இளமையும் வலிமையும் கொண்ட சிறிய, பெரிய மறவர்கள் எங்கள் நாட்டில் உள்ளனர். அது மட்டுமல்லாமல் மன்றத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் போர் முரசில் காற்று மோதுவதால் உண்டாகும் சிறிய ஒலியைக் கேட்டால் அதனைப் போர் எனக் கருதி வீறு கொண்டெழும் என் தலைவனாகிய அதியமானும் இருக்கிறான். ஆதலால் அவனுடன் போர் செய்யும் எண்ணத்தைக் கைவிடுவாயாக” என்று பதிலுரைக்கின்றார் ஔவையார்.



2

பாடியவர்: கபிலர்.               

பாடப்பட்டோன்: வேள் பாரி.

திணை: நொச்சி.         

துறை: மகண் மறுத்தல்.

பாடல்

அளிதோ தானே, பாரியது பறம்பே!

நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்,

உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே

ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;

இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே; 

மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு லீழ்க்கும்மே;

நான்கே, அணிநிற ஒரி பாய்தலின், மீது அழிந்து,

திணி நெடுங் குன்றம் தேன்சொரி யும்மே.

வான் கண் அற்று, அதன் மலையே; வானத்து

மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு,      

மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்,

புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்,

தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்;

யான்அறி குவென், அது கொள்ளும் ஆறே;

சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி,       

விரையொலி கூந்தல் நும் விறலியர் பின் வர,

ஆடினிர் பாடினிர் செலினே,

நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே.  

விளக்கம்

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பாரியின் மகளிரை மணக்க விரும்பினர். தன் மகளிரை மூவேந்தரில் எவருக்கும் மணம் செய்விக்கப் பாரி மறுத்தான். ஆகவே, மூவேந்தரும் ஒருவர் ஒருவராகப் பாரியோடு போரிட்டுத் தோல்வியுற்றனர். அது கண்ட கபிலர், ‘மூவேந்தர்களே! நீங்கள் மூவரும் ஒன்று கூடி பறம்பு நாட்டை முற்றுகையிட்டாலும், பாரியை வெல்வது கடினம். பறம்பு நாடு வளமானது. அந்நாட்டில் உழவர் உழாமலேயே பல உணவுப் பொருட்கள் விளைகின்றன.  ஒன்று, மூங்கில் நெல். இரண்டு, பலாப்பழம். மூன்று, வள்ளிக்கிழங்கு. நான்கு, குரங்கு பாயும்போது உடைந்து ஒழுகும் தேன்கூடுகள்.

வானளவு பரந்த இடத்தைக் கொண்டது அவன் பறம்பு மலை. வானத்து மீன்களை ஒத்த சுனைகள் அம்மலையில் உண்டு. இப்படிப்பட்ட அவன் மலையில் ஒவ்வொரு மரத்திலும் உங்கள் போர் யானைகளைக் கட்டிவைத்தாலும், எண்ணற்ற தேரை நிறுத்தி வைத்தாலும், உங்கள் போர் முயற்சியால் அதனைப் பெற முடியாது. வாள் வீசிப் போரிட்டாலும் அவனை வெற்றி கொள்ள முடியாது. அவனது பறம்பு நாட்டை நீங்கள் பெறுவதற்கு வேறு வழி ஒன்று உண்டு. அதனை நான் அறிவேன். யாழ் மீட்டிக்கொண்டு பாணனாகச் செல்லுங்கள். உம்மோடு விறலியரையும் கூட்டிக்கொண்டு ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் செல்லுங்கள். அதற்குப் பரிசாக நாட்டையும் குன்றையும் அவன் பரிசாக வழங்குவான். பெற்றுக்கொள்ளலாம்” என்று கூறுகின்றார்.

பறம்பு மலை

பறம்பு மலையின் சுனை


3

பாடியவர்: கழைதின் யானையார். 

பாடப்பட்டோன்: வல் வில் ஓரி.

திணை:பாடாண்.

 துறை: பரிசில்.

பாடல்

ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;

கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,

கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;

தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்     

உண்ணார் ஆகுப, நீர்வேட் டோரே;

ஆவும் மாவும் சென்றுஉணக், கலங்கிச்,

சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்,

உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;

புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை  

உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்

புலவேன் வாழியர், ஓரி; விசும்பின்

கருவி வானம் போல

வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே.     

விளக்கம்

ஒருவரிடம் சென்று ‘எனக்குக் கொடுஎன்று கேட்பது இழிவானது, அதற்குப் பதிலாகக் கொடுக்கமாட்டேன்என்று சொல்வது அதனைக் காட்டிலும் இழிவானது; இதனைப் பெற்றுக்கொள்என்று ஒருவருக்குக் கொடுப்பது உயர்வானது, அதற்குப் பதிலாக வேண்டாம்என்று மறுப்பது அதனைக் காட்டிலும் உயர்வானது;

தாகம் எடுத்தாலும் கடலின் நீரை யாரும் உண்ணமாட்டார். பசுக்களும், மற்ற விலங்குகளும் சென்று குடித்ததினால் கலங்கிப்போய் சகதியுடன் கிடக்கும் சிறிதளவு நீரேயானாலும் அந்த இடத்தைத் தேடிச் சென்று பருகுவர்.

அதுபோல புலவர்கள் தமக்குப் பரிசில் கிடைக்காவிட்டால், தீய சகுனங்களையும், தாம் புறப்பட்ட நேரத்தையும் பழிப்பாரேயன்றி, பரிசில் கொடுக்காதவரைப் பழிக்கமாட்டார், அதனால் ஓரியே! மழை போல அளவின்றி கொடுக்கும் கொடையாளனாகிய உன் மீது நான் வெறுப்பு  கொள்ள மாட்டேன். நீ நீடுழி வாழ்வாயாக” என்று புலவர் பாடுகின்றார்.

 

நற்றிணை -அண்ணாந்து ஏத்திய வனமுலை, பிரசம் கலந்த வெண்சுவை, பெரு நகை கேளாய்

 

நற்றிணை

1

பாடியவர் - தெரியவில்லை

திணை - பாலை

துறை  - உடன்போக்கும் தோழி கையடுத்தது.

துறை விளக்கம்

தலைவியின் விருப்பப்படி அவளைத் தலைவனிடம் கைபிடித்துக் கொடுத்த தோழி, அவனிடம், ‘உன் சொல்லை நம்பி உன்னுடன் வரும் இவளை முதுமை எய்திய பிறகும் கைவிடாது பாதுகாப்பாயாகஎன்று சொல்லி இரவில் வழியனுப்பியது. (உடன்போக்கு: மணந்து கொள்வதற்காக யாருமறியாமல் தலைவன் தலைவியை அழைத்துச் சென்று விடல்: கையடுத்தல்: கைபிடித்துக் கொடுத்தல்)

பாடல்

அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்,

பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த

நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,

நீத்தல் ஓம்புமதி- பூக் கேழ் ஊர!

இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க் 

கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்,

வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன்

பழையன் வேல் வாய்த்தன்ன நின்

பிழையா நல் மொழி தேறிய இவட்கே.  

விளக்கம்

தோழி தலைவனை நோக்கிச் சொல்கிறாள். “தலைவனே! இனிய கள்ளையும் அணிமணிகள் பூண்ட பெரிய தேர்களையும் உடைய சோழ மன்னர்கள் கொங்கரை வென்று அடக்குவதற்காக ஒரு மாவீரனைப் பணியமர்த்தினர். அவன் யானைகள் நிறைந்த பேஎர் எனும் ஊரின் தலைவனான பழையன் என்பவன் ஆவான். குறி தப்பாத வேற்படையே அவனது தனிச்சிறப்பு ஆகும்.  அந்த வேல்போல என்றும் தவறாதது உன் வாக்குறுதி எனத் தலைவி உன்னை நம்பி ஏற்றுக் கொண்டிருக்கிறாள். இப்போது நான் உன்னிடம் ஒப்படைக்கும் இத்தலைவியின் அண்ணாந்து உயர்ந்த மார்புகள் தளர்ந்தாலும், நீண்ட அழகிய கூந்தல் நரைத்தாலும் இவளைப் பிரியாமல் பாதுகாப்பாயாக !” என்று கூறுகின்றாள்.



2

பாடியவர் - போதனார்

திணை  - பாலை

துறை -  1. மனைமருட்சி         2. மகள்நிலை உரைத்தது

துறை விளக்கம்

1.  உடன்போக்கு மேற்கொண்ட மகளை எண்ணி நற்றாய் வருந்தி உரைத்தது. 

2.  மணம் நிகழ்ந்தபின் தலைவியின் இல்லச் சிறப்பினைக் கண்டு வந்து விவரித்த செவிலித்தாயிடம் நற்றாய் உரைத்தது.

பாடல்

பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்

விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்தி,

புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல்,

'உண்' என்று ஓக்குபு பிழைப்ப, தெண் நீர்

முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  

அரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர்

பரி மெலிந்து ஒழிய, பந்தர் ஓடி,

ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி

அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல்?

கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென,      

கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள்,

ஒழுகு நீர் நுணங்கு அறல் போல,

பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே!

விளக்கம்

“பொற்கலத்தில் தேன் கலந்த வெண்மையான சுவை பொருந்திய பாலை  ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டி ‘இதைக் குடிஎன்று அவளுடைய  செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்து, முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்க, பாய்ந்து அவள் ஓட, நடை தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்?  திருமணம் புரிந்த கணவனின் குடும்பத்தில் வறுமை ஏற்பட்டதால், அவளுடைய தந்தை கொடுத்த செல்வமிக்க உணவை மறுத்து, நீர் இருக்கும் பொழுது நனைந்து பின் நீர் இல்லாத பொழுது உலரும் நுண்ணிய மணல் போல, ஒரு பொழுதின்றி ஒரு பொழுது உண்ணும் வலிமையுடையவள் ஆக இருக்கின்றாள்” இப்பொழுது என்று வியக்கின்றாள் தாய்.

3

பாடியவர் - ஔவையார்

திணை - குறிஞ்சி

துறை - பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகளை முகம் புக்கது

துறை விளக்கம்

தலைவன் பொருளீட்டும் பொருட்டுத் தலைவியைப் பிரியவேண்டிய சூழல் ஏற்படப்போகிறது என்று தோழியிடம் கூறுகின்றான். அச்செய்தியைத் தலைவி தாங்கமாட்டாள் என்பதை அறிந்த தோழி, தலைவனை வெறுப்பதுபோல் கூறி, தலைவி முகம் கொடுத்தவுடன் வினையே ஆடவர்க்கு உயிர் என்பதை எடுத்துரைக்கின்றாள்.

பாடல்

பெரு நகை கேளாய், தோழி! காதலர்

ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்

பொம்மல் ஓதி! நம் இவண் ஒழியச்

செல்ப என்ப, தாமே; சென்று,

தம் வினை முற்றி வரூஉம் வரை, நம் மனை

வாழ்தும் என்ப, நாமே, அதன்தலை-

கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்ப,

படு மழை உருமின் உரற்று குரல்

நடு நாள் யாமத்தும் தமியம் கேட்டே.    

விளக்கம்

“தோழி! இதைக் கேள். தலைவன் ஒருநாள் உன்னைப் பிரிந்து சென்றாலும் உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்ததுபோலத் துன்பப்படுவாய். அப்படி இருக்கையில் உன்னை இங்கே தனியே விட்டுவிட்டு அவர் மட்டும் பொருளீட்டச் செல்ல இருக்கிறார். அவர் பொருளீட்டிக்கொண்டு திரும்பும் வரையில், படமெடுத்து ஆடும் பாம்பு நடுங்கும்படியாக, நள்ளிரவில் முழங்கும் இடி ஒலியைக் கேட்டுக்கொண்டே உயிர் வாழ வேண்டுமாம். இது என்ன கொடுமை” என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.