வெள்ளி, 5 ஏப்ரல், 2024

தனிப்பாடல்

 

தனிப்பாடல்

தமிழ் இலக்கிய வரலாற்றில் தனிப்பாடலுக்குத் தனிச்சிறப்பு உண்டு. பல்வேறு புவலர்களால், பல்வேறு காலங்களில் பாடப்பட்ட பாடல்கள் தொகுக்கப்பட்டுத் தனிப்பாடல் திரட்டு என்று பெயர் பெற்றுள்ளது. தனிப்பாடல் திரட்டில் உள்ள சில புலவர்கள் குறித்துப் பின்வருமாறு காணலாம்.

ஔவையார்

            தமிழ் இலக்கியங்களில் ஔவையார் என்ற பெயரில் பல புலவர்கள் காணப்படுகின்றனர். சங்காலத்தில், இடைக்காலத்தில், பிற்காலத்தில் என ஒளவையார் பெயரில் இலக்கியங்கள் இருக்கின்றன. தனிப்பாடல் திரட்டில் இவர் பாடியதாக எண்பது பாடல்கள் காணப்படுகின்றன.

காளமேகப் புலவர்

கும்பகோணத்தை அடுத்த நந்திபுரத்தில் பிறந்தவர். இயற்பெயர் வரதன். காலம் கி.பி. 15ஆம் நூற்றாண்டு. இறைவியின் அருளால் காளமேகம் போன்று கவிதைகள் வழங்கியதால் காளமேகப் புலவர் என்று அழைக்கப்படுகின்றார். ஆசு கவி பாடுவதில் (நினைத்தவுடன் பாடுவது) வல்லவர். வசை பாடுவதிலும் வல்லவர். அதனால், “ஆசு கவியால் அகில உலகெங்கும் வீசுபுகழ்க் காளமேகம்” என்று புகழப்பட்டவர். இவருடைய பாடல்கள் நகைச்சுவை மிகுந்தவை. இருநூறுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். சரசுவதி மாலை, திருவானைக்கா உலா, சித்திர மடல் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

இரட்டைப் புலவர்கள்

இளஞ்சூரியர், முதுசூரியர் என்ற இரட்டையர்களே இரட்டைப் புலவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களுள் ஒருவர் முடவர், மற்றொருவர் பார்வை அற்றவர். காலம் கி.பி15ஆம் நூற்றாண்டு. “கண்பாயக் கலம்பகத்திற்கு இரட்டையர்கள்” என்று போற்றப்படுகின்றனர். பார்வையற்றவரின் தோளில் முடவர் அமர்ந்து கொண்டு வழிகாட்ட இருவரும் பயணம் செய்வர். பாடல்களில் முதல் இரண்டு அடியை ஒருவர் பாடப் பின்னிரண்டடியை மற்றொருவர் பாடி முடிப்பது இவர்களின் வழக்கமாகும்.  தில்லைக் கலம்பகம், திருவாமாத்தூர்க் கலம்பகமும், ஏகாம்பரநாதர் உலா, கச்சிக் கலம்பகம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர்.

அந்தகக் கவி வீரராகவ முதலியார்

தொண்டை நாட்டில் பொன்விளைந்த களத்தூரில் பிறந்தவர். காலம் கி.பி17ஆம் நூற்றாண்டு. வசை பாடுவதில் வல்லவர். பார்வையற்றவர். சேயூர்க் கலம்பகம், திருக்கழுக்குன்ற மாலை, திருவாரூர் உலா ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

சத்தி முத்தப் புலவர்

            கும்பகோணத்தை அடுத்த சத்திமுத்தம் என்ற ஊரில் பிறந்தவர். வறுமையில் வாடிய இப்புலவர் பாண்டிய மன்னன் மாறன் வழுதியிடம் பரிசில் பெறச் சென்றார். மழையில் மாட்டிக் கொண்டு ஒரு குட்டிச் சுவரின் அருகில் ஒதுங்கியிருக்கும்போது நாரை ஒன்று மேலே பறக்கக் கண்டார். தன் மனைவிக்கு நாரையைத் தூதாக அனுப்புவதுபோல் “நாராய் நாராய் செங்கால் நாராய்” என்ற பாடலைப் பாடினார். நகர சோதனையில் ஈடுபட்டிருந்த மாறன் வழுதி இப்பாடலின் உவமைக்கு மகிழ்ந்து, அப்புலவனின் வறுமை தீர்த்ததாகக் கூறப்படுகின்றது.

           

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்

 

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்

திராவிட இயக்கத்தால் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன.  மேடைத்தமிழ், இதழியல் தமிழ், திரைத்தமிழ், அறிவியல் தமிழ், ஆட்சித்தமிழ் உள்ளிட்ட என்ற புதிய இலக்கியச் சிந்தனைகள் உருப்பெற்றன.

திராவிட இயக்கத்தின் அறிஞர் பெருமக்கள்

திராவிட இயக்கத்தை வளர்த்தெடுக்க கவிதைகள், உரைகள், மேடைப் பேச்சுகள், சிறுகதைகள், நாடகங்கள் முதலிய இலக்கிய வகைகள் பயன்பட்டன. அவ்வகையில் பேரறிஞர் அண்ணா, பெரியார், கலைஞர் கருணாநிதி, உவமைக் கவிஞர் சுரதா, நாஞ்சில்நாதன், கண்ணதாசன், வாணிதாசன், முடியரசன், கவிஞர் தமிழ்ஒளி, அப்துல் ரகுமான், வைரமுத்து, ஈரோடு தமிழன்பன், நிர்மலா சுரேஷ், கவிஞர் கனிமொழி, தமிழச்சி தங்க பாண்டியன், கவிஞர் சல்மா உள்ளிட்ட பலர் திராவிட இயக்கத்தின் கருத்துகளைத் தங்கள் படைப்புகளின் வாயிலாக வெளிப்படுத்தினர். அவர்களுள் குறிப்பிடத்தக்க சான்றோர்களான பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் குறித்து பின்வருமாறு காணலாம்.

பெரியாரும் மொழிச் சீர்த்திருத்தமும்.

பெரியார் என்று மதிப்புடன் அழைக்கப்படுகின்ற ஈ.வெ.ராமசாமி அவர்களால் தமிழ் எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. உயிர் எழுத்தான “ஐ“ என்பதை “அய்“ என்றும், “ஔ“ என்பதை “அவ்“ என்றும் எழுதுமாறு வலியுறுத்தினார். சான்றாக, “ஐயா“ என்பதை “அய்யா“ என்றும், “ஔவை“ என்பதை “அவ்வை“ என்றும் எழுதி, அவ்வழக்கத்தை நடைமுறைப்படுத்தினார். மேலும், மெய் எழுத்துகளில் சில உயிர்மெய்க் குறியீடுகளான ஐ, உ, ஊ, ஒ, ஓ என்ற எழுத்துகளுடன் கூடி வருகின்ற எழுத்துகளைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்றும், அதன் மூலம் தமிழ்க் கற்பதும் தட்டச்சு செய்வதும் எளிதாகும் என்றும் அறிவித்து, அதற்கான வரி வடிவங்களைத் தானே உருவாக்கி தன்னுடைய அச்சகத்திலும் பயன்படுத்தினார். இவருடைய இச்சீர்த்திருத்தத்தைத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டு 1978ஆம் ஆண்டு அதனை நடைமுறைப்படுத்தியது. மேலும், பெரியாரின் சிந்தனைகள் பல இதழ்களில் தலையங்கங்களாக இடம் பெற்றுள்ளன. மேடையிலும், தலையங்கக் கட்டுரையில் அவர் பயன்படுத்திய எளிய தமிழ், படிப்போரைக் கவர்ந்தது.

மேடைத்தமிழும் பேரறிஞர் அண்ணாவும்

அண்ணாவின் மேடைப் பேச்சுகள் இலக்கியமாக மதிக்கப்படுகின்றன. அவருடைய உரைகள் கவிதை நடையில், இலக்கியச் செழுமை மிக்கதாக அமைந்திருப்பது சிறப்பு. இன்று மேடைப் பேச்சு ஒரு கலையாக மதிக்கப்படுவதற்கு அண்ணாவின் உரைகளும் ஒரு காரணமாகும். மேடைப் பேச்சில் தனக்கென்று ஓரு புதிய வழியை ஏற்படுத்திக் கொண்டு மக்கள் மனதில் சீர்த்திருத்த கருத்துகளை விதைத்தார். வேலைக்காரி, ஓர் இரவு, நீதி தேவன் மயக்கம் உள்ளிட்ட புரட்சி மிகுந்த நாடகங்களையும், செவ்வாழை, சொர்க்கத்தில் நரகம், பிடி சாம்பல் முதலிய சிறுகதைகளையும், இரங்கூன் ராதா, பார்வதி பி.ஏ முதலிய நாவல்களையும் எழுதித் தமிழுலகிற்குப் புத்துயில் அளித்தார். “தம்பிக்கு“ என்ற பெயரில் அவர் எழுதிய கடிதங்கள் சமுதாயத்தின் மீதும், தமிழ் மொழியின் மீதும் அவர் கொண்டிருந்த அக்கறையை வௌிப்படுத்துகின்றன. திரைப்படங்களில் இவரது உரையாடல் அடுக்கு மொழியில் அமைந்து மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அதனால் “அடுக்கு மாழி அண்ணா” என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

திரைத்தமிழும் கலைஞரும்

            தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பல்வேறு படைப்புகள் மூலம் தொண்டாற்றியவர் கலைஞர் கருணாநிதி. ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம், பொன்னர் சங்கர் முதலிய நாவல்கள் அவரது சமத்துவ சிந்தனைகளை வெளிக்காட்டின. விஷம் இனிது, சித்தார்த்தன் சிலை உள்ளிட்ட சிறுகதைகள் சமய மறுப்புக் கொள்கைகளை வலியுறுத்தின. இவருடைய “அணில் குஞ்சு” என்ற சிறுகதை மதநல்லிணக்கத்தை எடுத்துக்காட்டுகின்றது. நாடகத்துறையோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்ட கலைஞர் நாடகத்தைப் படைப்தோடன்றி நடிக்கவும் செய்தார். ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசியை மையமாகக் கொண்டு மந்திரிகுமாரி என்ற நாடகத்தைப் படைத்தார். பிற்காலத்தில் இது திரைப்படமாகவம் வெளிவந்தது. உதயசூரியன், நானே அறிவாளி, புனித ராஜ்யம் உள்ளிட்ட நாடகங்கள் அரசியல் பிரச்சார நாடகங்களாக வெளிவந்தன. இவருடைய நாடகங்கள் கேலியும் கிண்டலும் நிறைந்திருக்கும் அங்கத வகையில் அமைந்தவை. திரைத்துறையில் வசனங்களின் மூலம் புதிய வரலாறு படைத்தவர் கலைஞர். மனோகரா, மந்திரிகுமாரி, பூம்புகார், பராசக்தி முதலிய திரைப்படங்களின் வசனங்கள் மாறுபட்ட கோணத்தில் தமிழை அடையாளம் காட்டின. அவருடைய “குறளோவியம்“ மிகச் சிறந்த படைப்பாகப் போற்றப்படுகின்றது. எளிய முறையில் பாமர மக்களும் படித்து இன்புற, “தொல்காப்பியப் பூங்கா“ என்ற நூலை எமுதியுள்ளார்.

மூவரின் தமிழ் மாநாடுகள்

            பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகிய மூவரும் தங்களின் படைப்பால் தமிழுக்குத் தொண்டு செய்ததோடு, பல்வேறு மாநாடுகளை நடத்தித் தமிழ் மொழியை உலகரங்கிற்குக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர்களாகப் போற்றப்படுகின்றனர். பெரியாரின் திருக்குறள் மாநாடு, அறிஞர் அண்ணாவின் உலகத்தமிழ் மாநாடு, கலைஞரின் செம்மொழி மாநாடு ஆகியவை தமிழின் மொழி வளமையை, இலக்கணச் சிறப்பை, இலக்கியச் செழுமையை உலக அறிஞர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. குறிப்பாக, இன்றைய கணினி உலகில் தமிழை அடுத்தத் தளத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில் “தமிழ் இணையம் 1999” என்ற பெயரில் மாநாட்டை நடத்திய பெருமை கலைஞரையே சாரும். கணினித்தமிழை வளர்த்தெடுக்கும் நோக்கில் “தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தைத் தொடங்கிய பெருமையும் கலைஞருக்கு உண்டு. இதனால் அறிவியல் துறையில் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றும் வல்லமை தமிழ் மொழிக்கு உண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

 

ஞாயிறு, 31 மார்ச், 2024

தொல்காப்பியப் பூங்கா

 

தொல்காப்பியப் பூங்கா - கலைஞர் கருணாநிதி

எழுத்து – முதல் நூற்பா

தொல்காப்பியப் பூங்கா என்ற நூலில் கலைஞர் கருணாநிதி அவர்கள் தொல்காப்பியத்தின் நூற்பாக்களுக்குப் புதுமையான முறையில் விளக்கம் அளிக்கின்றார். அவற்றுள் எழுத்ததிகாரத்தின் முதல் நூற்பாவிற்குக் கலைஞர் இயற்றியுள்ள கற்பனை நயத்தைப் பின்வருமாறு காணலாம்.

தொல்காப்பியரின் கனவில் அணிவகுத்த எழுத்துகள்

தொல்காப்பியர் “எழுத்து“ என ஓலையில் எழுதிவிட்டு, சிந்தனை உறக்கத்தில் இருந்தார். எல்லா மொழிகளுக்கும் ஒலிதான் மூலம் என்பதால் தொல்காப்பியரின் கனவில் ஒலி எழுப்பியவாறு எழுத்துகள் நடந்து வந்து அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அணிவகுத்து நின்றன. முன்வரிசையில் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய எழுத்துகளும், பின்வரிசையில் க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் ஆகிய எழுத்துகளும் அணிவகுத்தன.

குற்றியலிகரமும் குற்றியலுகரமும்

அப்போது சுவர் ஓரமாக இரு நிழல்கள் தோன்றி ஒலி எழுப்பின. அவற்றின் ஒலி சற்று குறுகியதாகக் கேட்டமையால் தொல்காப்பியர் விழி திறந்து நோக்கினார்.

ஒரு நிழல் – என் பெயர் இகரம் என்றது

மற்றொரு நிழல் – என் பெயர் உகரம் என்றது.

தொல்காப்பியர் அந்த நிழல்களைப் பார்த்து “நீங்கள் குற்றியலிகரம், குற்றியலுகரம் என்ற வரிசையில் இடம் பெறுவீர்கள். முதல் எழுத்துகள் முப்பதின் வரிசையில் உங்களை அமர வைக்க முடியாது” என்று கூறிவிட்டார்.

ஆய்த எழுத்து

அப்போது கம்பு ஒன்றை ஏந்திக் கொண்டு ஒரு புதுமையான உருவம் தோன்றி, “இந்த முப்பதோடு என்னை இணைக்க ஒப்புகிறீர்களா?” என்று கேட்டது. தொல்காப்பியர், “நீ ஆயுதம் ஏந்தி ஆய்த எழுத்தாக வந்தாலும் உன்னை முதல் வரிசையில் நிற்க வைத்து விடுவேன் என்று நினைப்பா?” என்று கேட்டார். அவரது கோபம் உணர்ந்த ஆய்த எழுத்து, “ஐயனே என்னை முதல் வரிசையில் வைக்காவிட்டாலும், முக்கியமான சமயங்களில் நான் உதவிக்கு வருவேன்” என்று அடக்கமாகக் கூறியது. தொல்காப்பியர் கேலியாகச் சிரித்துக் கொண்டே எழுத்ததிகாரத்தின் முதல் நூற்பாவை எழுதி முடித்துவிட்டு, “நீ எனக்கு உதவிட வருகிறேன் என்றாயா? நல்ல வேடிக்கை” என்று புன்னகை புரிந்தவாறு கூறினார். “ஆமாம்! தாங்கள் எழுதிய முதல் நூற்பாவிலேயே எனக்கு இடம் கொடுத்து விட்டீர்களே! என்று மகிழ்ச்சியாகத் துள்ளிக் குதித்தது. தொல்காப்பியர் தாம் எழுதியதைத் திரும்பப் படித்தார்.

“எழுத்தெனப் படுப

அகர முதல் னகர ஈறுவாய்

முப்பஃதென்ப

சார்ந்து வரல் மரபின் மூன்றலங்கடையே” (எழுத்து, நூல் மரபு- 1)

“அவைதாம்

குற்று இயல் இகரம், குற்று இயல் உகரம்

ஆய்தம் என்ற

முப்பால் புள்ளியும் அவற்றோர் அன்ன” (எழுத்து, நூல் மரபு – 2)

அதில் “முப்பஃ தென்ப” என்ற தொடரில் ஆய்த எழுத்து அமர்ந்து கொண்டதை அவரும் வியப்புடன் நோக்கி நிறைவான மகிழ்ச்சி கொண்டார்.

விளக்கம்

தமிழ் எழுத்துகளுள், உயிர் எழுத்துப் பன்னிரெண்டும், மெய் எழுத்து பதினெட்டும் ஆகிய முப்பது எழுத்துகள் முதல் எழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. குறுகிய ஒலியைக் கொண்ட இகரம் குற்றியலிகரம் என்றும், குறுகிய ஒலியைக் கொண்ட உகரம் குற்றியலுகரம் என்றும், “ஃ“ என்ற எழுத்து ஆய்த எழுத்து என்றும் கூறப்படுகின்றன. இவை மூன்றும் சார்பெழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாமல், பிற எழுத்துகளோடு பொருந்தி வரும் தன்மை கொண்டவை.