புதன், 18 ஆகஸ்ட், 2021

திருத்தில்லைப் பதிகம் - திருஞானசம்பந்தர்

 

திருத்தில்லைப் பதிகம் 

திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தர்  சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் ஒருவர். தேவார மூவருள் முதலாமவர். இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில்சீர்காழி என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாத இருதயர், தாயார் பகவதி அம்மையார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மை அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது  உமாதேவியார்சிவபெருமானுடன்  இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் தமிழில் அறிவுசேரர் என்று பொருள்பட திருஞானசம்பந்தர் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். மகன்மை நெறியில் இறைவனை வழிபட்டார். இவர் பாடிய பதினாறாயிரம் பதிகங்களுள் 384 பதிகங்களே கிடைத்துள்ளன. இவர் பாடிய பதிகங்கள் பன்னிரு திருமுறைகளுள் முதல் மூன்று திருமுறைகளாக வைத்துப்போற்றப்படுகிறது.

வேறு பெயர்கள்

ஆளுடைய பிள்ளை, காழி வள்ளல் என்ற வேறு பெயர்களாலும் வழங்கப்படுகிறார். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் என்று பாராட்டப்பட்டார். ஆதி சங்கர்ர் தன்து சௌந்தர்ய லகரியில் இவரை திராவிட சிசு என்று குறிப்பிட்டுள்ளார்.

இறை ஒளியில் கலந்தார்

பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க தனது பதினாறாவது வயதில் திருநல்லூர் நம்பாண்டர் மகள் சொக்கியாரை மணம் முடிக்கச் சம்மதித்தார். திருப்பெருமணநல்லூரில் திருமணத்திற்கு முன் ஒரு பதிகம் பாடி திருமணக்கோலத்துடன் சுற்றம் சூழ இறைஒளியில் கலந்து விட்டார். 

அற்புதங்கள்

மூன்று வயதில் உமையம்மையாரிடம் திருமுலைப்பால் உண்டமை, சிவபெருமானிடத்தே பொற்றாளமும், முத்துப்பல்லக்கும், முத்துச்சின்னமும், முத்துக்குடையும், முத்துப்பந்தரும் பெற்றமை, வேதாரணியத்தில் திருக்கதவு அடைக்கப் பாடியமை, பாண்டியனுக்குக் கூனையும் சுரத்தையும் போக்கியமை, தேவாரத் திருவேட்டை அக்கினியில் இட்டுப் பச்சையாய் எடுத்தமை, வைகையிலே திருவேட்டை விட்டு எதிரேறும்படி செய்தமை,  சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றமை, விடத்தினால் இறந்த வணிகனை உயிர்ப்பித்தமை.

திருஞானசம்பந்தர் 220 பதிகளுக்குச் சென்று இறைவனை வழிபட்டதாகக் கூறப்படுகின்றது. அவற்றுள் சிதம்பரத்தில் உள்ள நடராசப் பெருமானைப் பாடிய திருத்தில்லைப் பதிகத்திலிருந்து பதினொரு பாடல்கள் இங்கே பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

பதிகம் - அமைப்பு முறை

± திருஞானசம்பந்தரின் பதிகங்களில் முதல் ஏழு பாடல்கள் தலவரலாற்றின் பெருமையை எடுத்துரைக்கின்றார்.

±      எட்டாவது பாடல் இராவணன்  செயலை விளக்குகிறது.

± ஒன்பதாவது பாடல் அயன், அரி இவர்களுக்கு அரிதான சிவபெருமானின் பெருமையை இயம்புகின்றது.

±   பத்தாவது பாடல் சமண பௌத்த சமயங்கள் துன்பம் தரும் தீங்கினை உடையன என்றும் போலி சமயங்கள் என்ற பாங்கில் அமைத்திருக்கக் காணலாம்.

± பதினோராவது பாடலில் தன் பெயரை ஊரையும் குறிப்பிட்ட பின்னர், இந்தப் பதிகத்தைப் பாடுவோருக்குக் கிடைக்கும் பயன்களை விளக்கி கூறியுள்ளார்.

பாடல் எண்: 01

கற்றாங்கு எரி ஓம்பி கலியை வாராமே

செற்றார் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய

முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே

பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.

பொருள்:

வேதம் முதலிய நூல்களைக் கற்று, அவற்றின் நெறியிலே நின்று, வேள்விகள் செய்து, இவ்வுலகில் வறுமையை வாராமல் ஒழிக்கும் அன்பர்கள் வாழ்கின்ற தில்லையில் எழுந்தருளியவன் சிவபெருமான். பிறை நிலவைச் சூடியவனாகிய அச்சிவபெருமானின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு வாழ்பவர்களைப் பாவம் தொடர்வதில்லை.

பாடல் எண்: 02

பறப்பைப் படுத்தெங்கும் பசு வேட்டு எரி ஓம்பும்

சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய

பிறப்பு இல்பெருமானை பின் தாழ்சடையானை

மறப்பு இலார் கண்டீர் மையல் தீர்வாரே.

பொருள்:

பல இடங்களிலும் வேள்விச் சாலைகளை அமைத்து, ஆன்ம போதத்தைக் கொன்று, அன்பர்கள் வாழும் தில்லையில் உள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளியவன் சிவபெருமான். அவன் பிறவி என்பதைப் பெறாதவன். அத்தகு சடை முடி கொண்ட சிவபெருமானை மறவாது வணங்குபவர்கள், ஆணவம், கன்மம், மாயை என்ற மயக்க உணர்வுகளிலிருந்து விடுதலை பெறுவர்.

பாடல் எண்: 03

மை ஆர் ஒண்கண்ணார் மாட நெடுவீதிக்

கையால் பந்து ஓச்சும் கழிசூழ் தில்லையுள்

பொய்யா மறைபாடல் புரிந்தான் உலகு ஏத்தச்

செய்யான் உறைகோயில் சிற்றம்பலம்தானே.

பொருள்:

மை தீட்டப்பட்ட ஒளி பொருந்திய கண்களை உடைய பெண்கள் மாட வீதிகளில் தம் கைகளால் பந்து எறிந்து விளையாடுவர். அப்படிப்பட்ட அழகுடைய உப்பங்கழிகள் சூழ்ந்துள்ள தில்லை, வேதப்பாடங்களை விரும்புகின்ற சிவபெருமான் உறைந்திருக்கின்ற கோவிலைக் கொண்டுள்ளது. அது உலக மக்கள் யாவரும் தொழுகின்ற கோயிலாக விளங்குகின்றது.

பாடல் எண்: 04

நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்

பிறை வந்து இறைதாக்கும் பேரம்பலம் தில்லைச்

சிறைவண்டு அறை ஓவாச் சிற்றம்பலம், மேய

இறைவன் கழல்ஏத்தும் இன்பம் இன்பமே.

பொருள்:

மாடவீடுகளில் நிறைந்துள்ள வெண்மையான கொடிகள் வானத்திலுள்ள பிறையின் நெற்றியை நேரே தீண்டுமாறு வந்து தாக்கும் அளவிற்கு உயர்ந்தது தில்லைப்பதி. அப்பதியில் சிறகுகளை உடைய வண்டுகள் எப்போதும் ஒலிக்கும் சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் திருவடிகளைப் பரவுவதே இன்பம் ஆகும்.

பாடல் எண்: 05

செல்வ நெடுமாடம் சென்று சேணோங்கிச்

செல்வ மதி தோய செல்வம் உயர்கின்ற,

செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய

செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே.

பொருள்:

வானளாவ உயர்ந்து நிற்கின்ற செல்வ வளம் மிக்க மாட வீடுகள் உடையது தில்லைப்பதி. அம்மாட வீடுகளின் மதில்கள் யாவும் வானத்தில் உள்ள மதியினை உரசிச் செல்கின்றன. அத்தகு அழகு நலன் வாய்ந்த, ஞானச் செல்வர்கள் பலர் வாழ்கின்ற திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் வீடுபேறாகிய செல்வத்தைத் தருகின்றான். அவன் திருவடிகளை வாழ்த்துவதே நமக்குப் பெரும் செல்வமாகும்.

பாடல் எண்: 06

வருமாந் தளிர்மேனி மாது ஓர்பாகம் ஆம்

திருமாந் தில்லையுள் சிற்றம்பலம் மேய

கருமான் உரி-ஆடைக் கறைசேர் கண்டத்து எம்

பெருமான் கழல் அல்லால் பேணாது உள்ளமே.

பொருள்:

மாந்தளிர் போன்று மென்மையாண திருமேனியை உடைய உமையம்மையைத் தன் உடலின் ஒரு பாகமாக வைத்துள்ள இறைவன், திருமகளின் அருளால் நிறைந்து விளங்கும் செல்வச் செழிப்பான தில்லை நகரில் உள்ள சிற்றம்பலத்தில் உறைகின்றான். கரிய நிறம் கொண்ட யானையின் தோலை உரித்து ஆடையாக அணிந்தவனாகவும், நஞ்சினை உண்டு அதைத் தன் கழுத்தில் தேக்கியதால் கறை படிந்த கழுத்தினை உடையவனாகவும் இருக்கும் சிவபெருமானின் திருவடிகளை அன்றி என் உள்ளம் வேறு எதையும் விரும்பாது.

பாடல் எண்: 07

அலையார் புனல்சூடி ஆகத்து ஒருபாகம்

மலையான் மகளோடும் மகிழ்ந்தான் உலகு ஏத்தச்

சிலையால் எயில் எய்தான் சிற்றம்பலம் தன்னைத்

தலையால் வணங்குவார் தலை ஆனார்களே.

பொருள்:

அலைகள் வீசுகின்ற கங்கை நதியைத் தன் முடியில் சூடியவன். உமையம்மையைத் தன் திருமேனியில் ஒரு பாகமாக வைத்தவன். மேருமலையாகிய வில்லால் முப்புரங்களை அழித்தவன். இத்தகு சிறப்பு வாய்ந்த சிற்றம்பலத்துப் பெருமானைத் தலை தாழ்த்தி வணங்குபவர்கள் தலையானவர்கள் ஆவர்.

பாடல் எண்: 08

கூர்வாள் அரக்கன் தன் வலியைக் குறைவித்து

சீராலே மல்கு சிற்றம்பலம் மேய

நீரார் சடையானை நித்தல் ஏத்துவார்

தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே.

பொருள்:

கூர்மையான வாளை உடைய அரக்கர் குலத்தைச் சேர்ந்த இராவணின் வலிமையை அழித்தவன். சிறந்த புகழ் எய்திய சிற்றம்பலத்தின்கண் எழுந்தருளியவன். கங்கையினைத் தன் தலைமுடியில் தரித்தவனாகிய சிவபெருமானை நாள்தோறும் வணங்குபவர்க்குத் தீராத நோய்கள் எல்லாம் தீர்ந்து விடும்.

பாடல் எண்: 09

கோள் நாக(அ)ணையானும் குளிர்தாமரையானும்

காணார் கழல் ஏத்த கனல் ஆய் ஓங்கினான்

சேணார் வாழ்தில்லைச் சிற்றம்பலம் ஏத்த

மாணா நோயெல்லாம் வாளா மாயுமே.

பொருள்:

பாம்புப் படுக்கையில் பள்ளி கொள்ளும் திருமாலும், தாமரைமேல் விளங்கும் நான்முகனும், சிவனின் அடிமுடிகளைக் காண முடியாதவர்களாக சிவனின் திருவடிகளைப் பற்றிய வேளையில், தீ வடிவில் ஓங்கி நின்றவன் சிவபெருமான். சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள அவனைப் போற்றிப் பாடினால் கொடிய நோய்கள் எல்லாம் ஒழிந்து போகும்.

பாடல் எண்: 10

பட்டைத் துவராடைப் படிமம் கொண்டாடும்

முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே

சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய

நட்டப் பெருமானை நாளும் தொழுவோமே.

பொருள்:

மரப்பட்டையின் சாயம் ஏற்றிய ஆடையை உடுத்திய புத்தரும், நோன்புகள் பலவற்றை மேற்கொண்டு திரியும் சமணர்களும் உரைக்கின்ற அறியாமையோடு கூடிய உரைகளைக் கேட்காமல், ஒழுக்கத்தால் மேம்பட்டவர்கள் வாழ்கின்ற சிறப்புடைய சிற்றம்பலத்தில் எழுந்தருளிய நடராசப்பெருமானை நாள்தோறும் நாம் தொழுவோம்.

பாடல் எண்: 11

ஞாலத்து உயர்காழி ஞானசம்பந்தன்

சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம் மேய

சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை

கோலத்தால் பாட வல்லார் நல்லாரே.

பொருள்:

சீர்காழியில் பிறந்த ஞானசம்பந்தன் ஒழுக்கமுடையவர்களால் புனிதமாகப் போற்றப்படும் தில்லைச் சிற்றம்பலத்தில் சூலப்படையுடைய எழுந்தருளிய சிவபெருமான் மீது பாடிய இத்தமிழ் மாலையாகிய திருப்பதிகத்தைப் பாடவல்லவர் நல்லவர் ஆவர்.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

அற்புதத் திருவந்தாதி - காரைக்காலம்மையார்

 

அற்புதத் திருவந்தாதி 

காரைக்காலம்மையார்

நூல் குறிப்பு

அற்புதத் திருவந்தாதி  என்னும் நூல் சைவத்திருமுறைகளில்  பதினோராம் திருமுறைத் தொகுதியில் அமைந்துள்ளது. இந்நூலை அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான  காரைக்கால் அம்மையார் எழுதியுள்ளார். இந்நூல் அந்தாதி முறையில் பாடப்பெற்ற முதல் நூல் என்பதால் ஆதி அந்தாதி என்றும், இறைவனின் மீது பாடப்பெற்றதால் திருவந்தாதி என்றும் அழைக்கப்படுகிறதுஇந்நூல் வெண்பா யாப்பில் அமைந்துள்ளது. இதன் காலம் கி.பி ஆறாம் நூற்றாண்டு. இந்நூல் 101 வெண்பாப் பாடல்களைக் கொண்டது.  இவ் அந்தாதி சைவ நெறி குறித்தும், சிவபெருமானை முழுமையாகச் சரணடைவதைக் குறித்தும் கூறுகின்றது. சிவபெருமானின் திருஉருவச் சிறப்பினையும், திருவருட் சிறப்பினையும், இறைவனின் குணத்தையும் விரிவாக இந்நூல் பாடுகிறது.

காரைக்காலம்மையார்

காரைக்கால் அம்மையார் நாயன்மார்களில் ஒருவர். சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர். காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதால் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப் பெறுகிறார். பரமதத்தன் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்த இவர், ஒரு நாள் தன் கணவன் கொடுத்தனுப்பிய இரு மாம்பழங்களில் ஒன்றினைச் சிவனடியாருக்குப் படைத்துவிட்டார். உணவு உண்ண வீட்டிற்கு வந்த பரமதத்தன் ஒரு மாம்பழத்தை உண்டுவிட்டு, இன்னொரு மாம்பழத்தினைக் கேட்க, செய்வதறியாது திகைத்த  அம்மையார் இறைவனிடம் வேண்டி ஒரு மாம்பழத்தினைப் பெற்றார்.  அந்நிகழ்வை நேரில் பார்த்த பரமதத்தன் இவர் இறைவன் அருள் பெற்றவர் என்பதை உணர்ந்து அம்மையாரை விட்டு இல்லற வாழ்விலிருந்து நீங்கினார். வேறு நாட்டிற்குச் சென்று மறு திருமணம் செய்து கொண்டு, ஒரு பெண் குழந்தையும் பெற்றார். இதனால் மனமுடைந்த அம்மையார் கணவனுக்காகத் தாங்கிய அழகு உருவம் நீங்கிப் பேய் வடிவத்தைத் தர வேண்டும் என்று இறைவனை வேண்டினார்.  அதுமுதற்கொண்டு இறைவனைப் பாடுதல் ஒன்றேயே தன் தொழிலாகக் கொண்டார். முதன்முதலாக இசைத்தமிழால் இறைவனைப் பாடிய பெருமை இவருக்கு உண்டு. அந்தாதி எனும் இலக்கண முறையை தமிழுக்கு அறிமுகம் செய்தார். அற்புதத் திருவந்தாதிதிருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்திருஇரட்டை மணிமாலை போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

 

அற்புதத்திருவந்தாதி

பாடல் – 1

பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்   

விளக்கம்

நஞ்சை உண்டதால் நீல நிறம் கொண்ட கழுத்தினை உடைய சிவபெருமானே! நான் இவ்வுலகில் பிறந்து மொழியினைப் பயின்று பேசத் தொடங்கிய காலம் முதல் உன்மீது கொண்ட அன்பினால் உன் திருவடிகளையே என் மனம், மொழி, மெய்களால் இடைவிடாது எண்ணிப் போற்றி வழிபடுகின்றேன். என் பிறவித் துன்பத்தைத் தீர்த்து எனக்கு எப்போது அருள் செய்வாய்!

பாடல் – 2

இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்
படரும் நெறி பணியாரேனும் - சுடர் உருவில்
என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்(கு)
அன்பறா தென்நெஞ் சவர்க்கு               

விளக்கம்

இறைவன் எனக்கு நேருகின்ற இடர்களைக் களையவில்லை என்றாலும், மனம் இரங்கி எனக்கு அருள் செய்யவில்லை என்றாலும், நான் செல்ல வேண்டிய நல்வழிகளைக் காட்டவில்லை என்றாலும், நெருப்பின் வடிவில் எலும்பு அணிந்து ஆடுகின்ற சிவனிடம் நான் கொண்டுள்ள அன்பு ஒருபோதும் குறையாது.

பாடல் – 3

அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கே நாம் அன்பாவதல்லால் - பவர்ச்சடைமேல்
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்

விளக்கம்

ஏழு பிறவியிலும் சிவபெருமான் ஒருவரையே வணங்குவோம். இன்பம் வந்தபோதிலும், துன்பம் வந்தபோதிலும் அவருக்கே அன்பு செய்வோம். கொடிபோல் விரிந்து படர்ந்த சடையின்மேல் பிறை சூடிய அந்த சிவபெருமானைத் தவிர வேறொருவருக்கும் ஆட்பட மாட்டோம்.

பாடல் – 4

ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டால்
கேளாத தென்கொலோ கேளாமை - நீளாகம்
செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம்
எம்மைஆட் கொண்ட இறை

விளக்கம்

நீண்டு உயர்ந்த திருமேனி முழுவதும் செந்நிறமும், திருமிடறு மட்டும் நீல நிறம் பெற்று எங்களை ஆட்கொண்ட இறைவனே! உம் திருவடித் தொண்டு செய்யும் அடியவர்களாகிய நாங்கள் எங்கள் துன்பத்தை எடுத்துக் கூறி முறையிட்டால் அம்முறையீட்டை உம் திருச்செவியிற் கோளாமல் போனது ஏன்? எங்களை உன் உறவாக ஏற்றுக் கொள்ளாததும் ஏன்?

பாடல் – 5

இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் - இறைவனே
எந்தாய் எனஇரங்கும் எங்கள் மேல் வெந்துயரம்
வந்தால் அது மாற்றுவான்.

விளக்கம்

எப்பொருளிலும் நீக்கமற நிறைந்திருப்பதால் இறைவனே எல்லா உயிர்களுக்கும் உடல், கருவி, உலகில் வாழ்வதற்கான நுகர்பொருள் ஆகியவற்றைப் படைத்தளிக்கும் வல்லமை பெற்றவன். தன்னால் தோற்றம் பெற்ற யாவற்றையும் மீண்டும் ஒடுக்கி ஆட்சி செய்பவனும் அவ்விறைவனே! எமது தந்தையே என அன்பினால் வேண்டும் எங்கள்மேல் கொடிய துன்பங்கள் வந்து வருந்தும்போது, அவற்றை அறவே நீக்கி எங்களை வாழ்விப்பவனும், முழு முதல்வனாகிய சிவபெருமானே ஆவான்.

 

 

 

        

 

 

 

சனி, 24 ஏப்ரல், 2021

ஆங்கில மரபுத் தொடர்கள் - தமிழாக்கம்

ஆங்கில மரபுத் தொடர்கள் - தமிழாக்கம்

வ.எண்

ஆங்கில மரபுத் தொடர்

தமிழாக்கம்

1.

To take into

கருத்தில் கொண்டு

2

To look after

மேற்பார்வை செய்தல்

3

A1

முதல் தரம்

4

Abc

அடிப்படையான அறிவு

5

To add fuel to the fire

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது

6

A golden age

பொற்காலம்

7

To go ahead

முன்னேறுதல்

8

All in all

முழு அதிகாரமுடைய

9

All out

முழு மனத்துடன்

10

Once for all

முடிவாக

11

Above all

எல்லாவற்றிற்கும் மேலாக

12

Above board

ஒளிவு மறைவற்ற

13

Over and above

கூடுதலாக

14

Account for

விவரித்தல்

15

On account of

ஏனெனில்

16

Arm in arm

கை கோர்த்து

17

From  A to Z

தொடக்கத்திலிருந்து முடிவு வரை

18

Back out

வாக்கு மீறுதல்

19

Back bite

புறங்கூறுதல்

20

Bad blood

வெறுப்பு

21

Beard the lion

தைரியமாகச் சந்தித்தல்

22

Bell the cat

பூனைக்கு மணி கட்டுதல்

23

Balck mail

பயமுறுத்தல்

24

Once in a blue moon

மிக அரிதாக

25

Miss the boat

வாய்ப்பு பறிபோதல்

26

Breathing time

குறுகிய ஓய்வுக் காலம்

27

Brush

ஒதுக்கித் தள்ளுதல்

28

Chalk out

திட்டமிடு

29

Cock and bull story

கட்டுக்கதை

30

Nip in the bud

முளையிலேயே கிள்ளி எறிதல்

31

High and dry

தனியே தவிக்க விட்டுச் செல்லுதல்

32

Jack of all trades

பல திறமைகளைப் பெற்றிருத்தல்

33

To look down upon

ஏளனமாக

34

To hit the mark

இலக்கை அடைதல்

35

To talk back

அகந்தையுடன் பதில் கூறுதல்

36

To take off

தரையை விட்டு மேலே கிளம்புதல்

37

To tear oneself

துயரத்துடன் பிரிதல்

38

To tell upon

பாதித்தல்

39

Ups and downs

அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும்

40

Upon my word

நிச்சயமாக

41

At one’s zenith

பெரிய பதவியில்

42

Breath freely

கவலையின்றி இயல்பாக இருத்தல்

43

To bring to book

குற்றம் சாட்டுதல்

44

Beat a retreat

பின்வாங்குதல்

45

To turn one’s back upon

அலட்சியம் செய்தல்

46

Back stair influence

பரிவுரை

47

Back and forth

முன்னும் பின்னும்

48

Bacon

இலட்சியத்தை அடைதல்

49

To save one’s back

காயமின்றித் தப்பித்தல்

50

Back bone

ஆதரவு தரும் மனிதர் அல்லது பொருள்

51

By accident

தற்செயலாக

52

For instance

சான்றாக

53

To call up

நினைவிற்கு

54

Dog sleep

சிறு தூக்கம்

55

Call off

திரும்பப் பெறுதல்

56

Be of a mind

இணங்கு

57

Called on

சந்தித்தல்

58

Bring to mind

நினைவுப்படுத்திப்பார்

59

Not a dog chance

சிறு வாய்ப்புக்கூட இன்றி

60

At discretion

மனம் போனபடி

61

At a discount

உயர்வாகக் கருதப்படாமல்

62

To work like a horse

கடின உழைப்பு

63

Hot and strong

கோபத்துடன்

64

Keep one’s head

பொறுமை இழக்காதிரு

65

Nip in the bud

முளையிலேயே கிள்ளி எறி

66

Be absorbed by

தன்னை மறந்து ஈடுபடு

67

Mind your step

எச்சரிக்கையாயிரு

68

Turn over a now leaf

திருந்திப் புதுவழி தொடங்கு

69

Win by head

மயிரிழையில் வெற்றி பெறுதல்

70

Win one’s way

போராடி முன்னேறுதல்

71

To look after

மேற்பார்வை செய்தல்

72

Answer back

எதிர்த்துக் கூறுதல்

73

All by oneself

தன்னந்தனியாக

74

Run over

அடிபடுதல்

75

Body politic

பொதுமக்கள்

76

Cry out

எதிர்த்தல்

77

Boast of

தற்பெருமை கொள்ளல்

78

Cast to the wind

புறக்கணி

79

Pen and ink

எழுத்து மூலம்

80

A pillar of faith

நம்பிக்கைத் துருவம்

81

In peril of

ஆபத்தான நிலையில்

82

Pin point

நுட்பமான

83

With a pinch of salt

முன் எச்சரிக்கையுடன்

84

Pit fall

எதிர்பாராத ஆபத்து

85

Rotten egg

உபயோகமில்லாத மனிதர்

86

A house of cards

மணல் வீடு கட்டுதல்

87

Heavy purse

செல்வந்தன்

88

Light purse

ஏழை

89

Put off

காலம் தாழ்த்துதல்

90

Put on

அணிந்துகொள்

91

Put up with

தாங்கிக்கொள்

92

The quality oa a defect

நன்மையோடு கலந்த தீய குணம்

93

The defect of quality

தீமையோடு கலந்த நன்மைக் குணம்

94

Really and truly

உண்மையில்

95

Tempt fate

அழிவைத் தேடிக் கொள்ளல்

96

Rain or shine

எல்லாச் சூழலிலும்

97

Radical error

அடிப்படைத் தவறு

98

Behind the scence

திரைக்குப் பின்னால்

99

The lion’s share

பலனில் பெரும் பங்கு

100

Castles in spain

மனக்கோட்டை