வெள்ளி, 21 மார்ச், 2025

அறிவியலும் மனித வாழ்வும்

 

அறிவியலும் மனித வாழ்வும்

மனிதனுடைய அன்றாட வாழ்வில் அறிவியல் பெரும் பங்காற்றி வருகின்றது. அறிவியல் தொழில்நுட்பங்கள் இல்லாமல் இன்று மனிதனால் இயங்குவது கடினம். அத்தகைய அறிவியல் மனித வாழ்வில் எவ்வாறு தோன்றியது? எவ்வாறு வளர்ச்சி பெற்றது என்பதை அறிவது அவசியம்

அறிவியல்விளக்கம்

அறிவியல் என்ற சொல் scientia என்ற இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். தரவுகளின் அடிப்படையில் உயிர்களை, இயற்கையை, சமூகத்தை, உலகத்தைப் புரிந்து கொள்வதே அறிவியல் ஆகும். ஏன்? எதற்கு? எப்படி என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தேடுவது அறிவியல். அறிவியலை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை,

  • இயற்கை அறிவியல்உலகத்தை ஆராய்வது
  • சமூக அறிவியல்மக்களை, சமூகத்தை ஆராய்வது
  • முறைசார் அறிவியல்கணிதம் உள்ளிட்ட அளவைகளை ஆராய்வது.

என்பனவாகும். அறிவியலுக்கு முன்கணித்ல் என்பது அடிப்படையாக அமைகின்றது.

மனித வாழ்வில் அறிவியல்

மனித வாழ்வில் அறிவியலின் தோற்றத்தை

  • தோற்றம் - விலங்குகளை வேட்டையாடி, அதன் இறைச்சியைப் பச்சையாக உண்டது.
  • வளர்ச்சி - கற்களைக் கொண்டு நெருப்பினை உருவாக்கி அதன் மூலம் இறைச்சியைச் சுட்டு உண்டது
  • உச்சம்வேளாண்மை செய்யக் கற்றுக் கொண்டது
  • இன்றுதொழில்நுட்பங்களை இயக்குவது

என்றவாறு விளக்கலாம். மனிதன் தன் தேவைக்கேற்ப உலகத்தை மாற்றியமைக்கும்போது புதிய புதிய சிந்தனைகள் உருப்பெறுகின்றன. புதிய புதிய கருவிகள் உருவாகின்றன. சமுதாயம் மாற்றம் பெறுகின்றது. மக்கள் பல வகையில் பயனடைகின்றனர். இது ஒரு தொடர் நிகழ்வாக அமைகின்றது. ஆகவே, மனிதன் தான் கண்களால் கண்டவற்றை உறுதியாக நம்பத் தொடங்கும்போது அறிவியல் உருப்பெற்றதாகக் கொள்ள இடமளிக்கின்றது.  ஆதி மனிதன் எதையெல்லாம் நம்பத் தொடங்கினானோ அவை மெய்யியல் என்ற தன்மையில் ஆளக்கற்றுக்கொண்டான். அந்த மெய்யியலைத் தான் இன்று இயற்பியல், வேதியியல், உயிரியல், வானியல் என்று நாம் அறிகின்றோம்.

தமிழ்ச்சமூகமும் அறிவியலும்

தமிழர்கள் நீண்ட நெடிய வரலாறு கொண்டவர்கள். கற்காலம் தொடங்கி இக்காலம் வரை தங்கள் அறிவாற்றலைப் பயன்படுத்தி, தங்களுக்குத் தேவையான வசதிகளைக் கண்டுபிடித்து நாகரிகத்தை வளர்த்தவர்கள். சான்றாக, கற்காலத்தில் காய்கறிகளையும், விலங்குகளின் இறைச்சியையும் பச்சையாக உண்டு வாழ்ந்தனர். கற்களைக் கொண்டு நெருப்பினைக் கண்டுபிடிக்கப்பட்ட பின் அவற்றைத் தீயில் இட்டு உண்டனர். பின்னர் நெருப்பின் பயன்பாடு அதிகரித்து அவற்றின் மூலமாக உணவைச் சமைத்து உண்டனர். இன்று மின் அடுப்பு, மின்சக்தி மூலமாக உணவைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றோம். இது போன்று எண்ணற்ற அறிவியல் சிந்தனைகளைத் தமிழர்கள் கொண்டிருந்தனர் என்பதைக் காணும்போது வியப்பு மேலிடுகின்றது. அன்றைய தமிழர்கள் உருவாக்கிய, பயன்படுத்திய அறிவியலின் வளர்ச்சியே இன்று நாம் காண்கின்ற அறிவியல் புரட்சியாகும். உலகின் மூத்த குடி என்று போற்றப்படுகின்ற தமிழினத்தவர் அறிவியல் அறிவைப் பெற்றிருந்தனர் என்பதற்குப் பல்வேறு இலக்கியங்களும், இன்றைய அகழ்வாராய்ச்சிகளும் சான்றுரைக்கின்றன. அவற்றைப் பின்வருமாறு காணலாம்.

நிலவியல்

நிலவியல் என்பது தான் வாழ்க்கின்ற பூமியின் தோற்றம், வடிவம் ஆகியவற்றை அறிவது. அதன்படி அண்டம், ஐம்பூதங்கள், நிலப்பகுப்பு ஆகியவை குறித்த தமிழரின் கொள்கைகள் வியப்பானவை. உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்பதை, நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் (தொல்காப்பியம், மரபியல், 91) தொல்காப்பியம் கூறுகின்றது.

மண்ணியல்

நம் முன்னோர்கள் செம்மண், வண்டல் மண், கரிசல் மண், உவர் மண் என மண்ணின் வகைகளை நான்காகப் பிரித்துள்ளனர். மண்ணின் வகைகளை அறிந்ததோடு அவற்றில் பயிரிடும் முறையையும் அறிந்திருந்தனர் என்பதை, “ஓவத்தன்ன கோபச் செந்நிலம்” (அகநானூறு. பாடல் 54) என்று அகநானூறும், “செந்நிலப் புறவின்“(நற்றிணை 321) நற்றிணையும் கூறுகின்றன.

மழை அறிவியல்

மழை நீரால்தான் உலகம் இயங்குகின்றது. உயிர்கள் வாழ்கின்றன என்பதைத் தமிழர்கள் அறிநிதிருந்தனர். கடலில் இருந்து நீர் ஆவியாகி, கரு மேகங்களாக மாறி, மலையைச் சூழ்ந்து மழையைப் பொழிவிக்கின்றன என்பதை, “வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇ பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தனஎன்றவாறு நெடுநல்வாடை குறிப்பிடுகின்றது.

இயற்பியல்

ஒளி விலகல் என்ற இயற்பியல் விதியின் காரணமாகவே, சூரியன் மேற்குத் திசையில் மறைந்த பின்னரும் செந்நிறத்தோடு காட்சியளிக்கின்றது என்ற கருத்தைவிசும்பு நீத்த இறந்த ஞாயிற்றுப் பசுங்கதிர் மழுங்கிய சிவந்து வாங்கு அந்திஎன்று புறநானூறு கூறுகின்றது.

அணுவியல்

அணு பற்றிய கொள்கை 1803 ஆம் ஆண்டு ஜான்டால்டன் என்பவரால் வெளியிடப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே தமிழ் இலக்கியங்களில், “அணுவுள் அவனும் அவனுள் அணுவும் (திருமந்திரம்), ‘அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் பூட்டி (ஒளவையார்) என்றவாறு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்னும் இதுபோன்று மருத்துவம், வேதியியல், வானியல், உலோகவியல் என அறிவியலின் அனைத்து நிலைகளையும் தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன. அவர்களின் கண்டுபிடிப்புகளின் பரிணாம வளர்ச்சியே இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி என்பதில் ஐயமில்லை.

இன்றைய அன்றாட வாழ்வில் அறிவியல்

அடுக்களையில் இருந்து அலுவலகம் வரை நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் அன்றாட வாழ்விற்கு இன்றியமையாததாக உள்ளன. மக்களின் மக்களின் நடவடிக்கைகளில் அறிவியலின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே போகின்றது. மின்சக்தியைப் பயன்படுத்தியதால் கணக்கிலடங்காத வசதிகளைப் பெற முடிகின்றது. நீராவியைக் கொண்டு பல பெரிய இயந்திரங்களை இயக்கியதனைத் தொடர்ந்து தரை வாகனங்கள், பறக்கும் விமானங்கள் உள்ளிட்ட எண்ணற்ற போக்குவரத்து சாதனங்கள் உருவாகி விட்டன. விண்வெளிப் பயணமும் சாத்தியமானது. தொலைத் தொடர்பு கருவிகள் மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளன.

கணினியின் வரவு

           இன்று கணினி பல துறைகளில் பயன்படுகின்றது. இதன்வழியாக டிம் பெர்நேர்ஸ் - லீ ( Tim Burners Lee) என்பவரால் 1994 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வையக வியாபக வலை (World Wide Web :www ) மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது.  மின் அஞ்சல்கள் மூலமும், முகம் பார்த்து பேசும் வசதி கொண்ட தொலை பேசி மூலமும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் இருந்து கொண்டே ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளுகின்றனர். கணினி மூலம் நாளிதழ்களும் புத்தகங்களும் வெளியிடும் முறைகளும் விரிவும், விரைவும் பெற்றுள்ளது. இன்று செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பம் நம்மை வியக்க வைக்கிறது.

மின்னணு

நம் வாழ்வில் பயன் படுத்தும் பல கருவிகள் மின்னணு (Electronics) பொறியியல் முறையில் உற்பத்தியாக்கப்படுகின்றன. அவற்றில் கைத்தொலை பேசிகள், தொலைக்காட்சித் திரைகள். வங்கி அட்டைகள் போன்ற பல பொருட்களில் மின்நுண்மங்கள் (micro chips) உபயோகிக்கப்படுகின்றன. இவை கண்டறியப் பட்டதனால் வர்த்தகத் துறையில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றினை உற்பத்தி செய்யும் வர்த்தக நிலையங்கள் பல கோடி பெறுமதியான பன்னாட்டு வணிகத்தில் ஈடுபடுகின்றன பலருக்கு வேலைவாய்ப்புகள் அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரங்கள் வளர வழி வகுக்கின்றன.

மனிதனும் அறிவியலும்

அறிவியல் மூலம் பல அழிவுகளை சமூகங்கள் எதிர்கொண்ட போதும், தீமைகளைத் தவிர்த்து  நன்மைகளைப் பெருக்குவதற்கே  அறிவியல் வல்லுனர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அறிவியல் வளர்ச்சியின் காரணமாக,  பல புதிய ஆராய்ச்சிகளும் கண்டு பிடிப்புக்களும் மக்களின் கண்மூடித்தனமான நம்பிக்கைகள் தவறானவை என அறியவும் வழி வகுத்தன.

விளைவுகள்

மனிதன் படிப் படியாக இயந்திரங்களுக்கு அடிமையாகின்றான் என்று குறைபடுவோரும் உண்டு. ஆக்கபூர்வமாக அறிவியல் பயன்பட வேண்டுமானால், கடந்த காலங்களைப் போல உலகப் போர்களினாலும் விபத்துக்களினாலும் மக்கள் அழிவது தவிர்க்கப்பட வேண்டும். அறிவியலை மனிதரின் முன்னேற்றத்திற்கு மட்டும் உபயோகிக்க வேண்டும்.

அறிவியல் கல்வி தேவை

அறிவியலின் பல பிரிவுகள் பல நூற்றாண்டு காலமாக கல்விக் கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் ஆரம்பிக்கப்பட்டு பயிற்றுவிக்கப் படுகின்றன. கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், சமூகவியல் ஆகிய பெரும் பிரிவுகளாக கற்கை நெறிகள் இன்றைய அறிவியலில் அடங்கி உள்ளன. நுண்ணிய ஆய்வுக்கு உட்படும் அறிவியலின் வளர்ச்சி கற்கை நெறிகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. ஆகவே நம் தமிழின் பெருமையையும், அறிவியலின் வளர்ச்சியையும் எதிர்வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டுமெனில் அறிவியல் தமிழை முழுவதுமாகக் கற்க வேண்டியது அவசியம்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக