வியாழன், 21 செப்டம்பர், 2023

ஊதாரிப்பிள்ளை - இயேசு காவியம்

 

இயேசு காவியம்  

ஊதாரிப்பிள்ளை

ஒரு தந்தை இரு மக்கள் ஊர் முழுதும் சொத்து

ஒரு பிள்ளை அவர்களிலே மணியான முத்து

சிறுபையன் ஊதாரி தேறாத நெத்து

தீராத மழையினிலே கரையேறும் வித்து

தன் பாகம் வேண்டுமெனத் தந்தையிடம் கேட்டான்

தந்தை அவன் மொழி கேட்டுச் சரிபாதி தந்தான்

தந்தானே யல்லாது தாளாது துடித்தான்

தன் பிள்ளை வாழட்டும் என்றேதான் கொடுத்தான்.

குருட்டுமகன் தன் சொத்தைக் குறைந்தவிலை விற்றுக்

கொண்டோடி வெளிநாட்டில் கும்மாளமிட்டான்!

பொருட்பெண்டிர் மதுவென்று போனவழி சென்று

பொருள் தேய்ந்து புகழ்தேய்ந்து தெருவினிலே நின்றான்!

அந்நாட்டில் பெரும்பஞ்சம் அவ்வேளை சூழ

அறியாத இளமைந்தன் அலைந்தானே வாழ!

தன்னாட்டு மனிதனிடம் ஒரு வேலை தேட

தந்தானே ஒருவேலை பன்றிகளோடாட!

பன்றிக்குத் தருகின்ற உணவேதான் உணவு

பாவிக்கு நாளெல்லாம் தந்தையவன் கனவு

அந்நேரம் தெளிந்ததுகாண் அவனுடைய அறிவு

அப்பாவின் கால்களிலே விழுகின்ற நினைவு!

என்தந்தாய் வானுக்கும் உமக்கும் எதிரானேன்

எத்தனையோ ஊழியர்கள் இங்கிருக்கப் போனேன்.

உன்வீட்டுக் கூலிகளில் ஒருவனென ஏற்பாய்!

உன்பிள்ளை என்று சொலத் தகுதியில்லை காப்பாய்!

இப்படிப்போய் விழ வேண்டும் என்றெண்ணிச் சென்றான்.

எதிர்பார்த்துக் காத்திருந்த தந்தையின்முன் நின்றான்.

அப்பா என் மகனே என்றணைத்தானே தந்தை

அன்பான தந்தையின்முன் அழுதவன் சிந்தை.

எப்போது வருவாய் என்று எண்ணியிருந்தேனே

இளைத்தாயே என் மகனே கண்மணியே தேனே

தப்பான பிள்ளையல்ல எதுவும்சொல்லாதே

சந்தர்ப்பம் செய்த சதி! வருவாய் இப்போதே!

யாரங்கே பணியாள் வா! பட்டாடை நகைகள்

அத்தனையும் அணியுங்கள் அலங்கார வகைகள்

பேர்சொல்லும் மகனுக்குப் பருங்கன்றின் கறிகள்

பிழையாமல் செய்யுங்கள் விரைவில் எனச் சொன்னான்.

மாலையிலே மூத்தமகன் மனைக்குவரும்போது

மனையிலே சங்கீதம் நடனவகை நூறு

சாலையிலே நின்றபடி ஏன் சத்தம்? என்றான்

தம்பி இன்று வந்துள்ளார் என்றொருவன் சொன்னான்

ஆத்திரத்தில் வெளிப்புறமே மூத்தமகன் நின்றான்

அப்போது தந்தையவன் அந்த இடம் வந்தான்

சாத்திரத்தை மறந்தவனைத் தடபுடலாய் ஏற்றீர்

சாப்பாடு நடனமென ஏற்றுகிறீர் போற்றி!

உங்களுடன் இருந்தவரை நானென்ன கண்டேன்

ஒருநாளும் எனக்கென்று விருந்துவகை உண்டா,

கண்கலங்கி மூத்தமகன் இவ்வாறு சொல்ல

கனிவோடு தந்தையவன் மறுவார்த்தை சொன்னான்.

என்னோடு என்றும்நீ இருப்பவனேயன்றோ!

என் செல்வம் எந்நாளும் உன்னுடையதன்றோ!

உன் தம்பி இறந்ததன்பின் உயிர் பெற்று வந்தான்!

உண்மையிலே மறுபிறவி அதற்காகச் செய்தேன்!

விளக்கம்

தந்தை ஒருவர் தன் இரு மகன்களுடன், ஊர் முழுவதும் செல்வாக்குடனும், செல்வத்துடனும் வாழ்ந்து வந்தார். மூத்த மகன் குணத்தில் சிறந்தவனாக, தந்தையின் சொல்லை மதித்து நடந்தான். இளைய மகன் தந்தை சொல்லைக் கேட்காமல் ஊதாரித்தனமாகச் சுற்றித் திரிந்தான். ஒருநாள் இளைய மகன் தன் தந்தையிடம் தன் சொத்தைப் பிரித்துத் தருமாறு வற்புறுத்தினான். வேறு வழியின்றி தந்தை சொத்துக்களைப் பிரித்து அவனுக்குச் சேர வேண்டிய பங்கைக் கொடுத்தார். தன் பிள்ளையின் போக்கைக் கண்டு மனம் வருந்தினார். இருப்பினும் இந்தச் செல்வங்களைக் கொண்டு தன் பிள்ளை நன்றாக வாழ்வான் என்று நம்பினார்.

ஆனால் இளைய மகன் தன் சொத்துக்களைக் குறைந்த விலையில் விற்று விட்டு, அதன் மூலம் கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்று மது, மாது என தன் மனம் போன போக்கில் வாழ்ந்தான். பொருள் அனைத்தும் இழந்தான். அந்த நாட்டில் பெரும்பஞ்சம் ஏற்பட்டது. அந்தப் பஞ்சத்தில் சிக்கிக்கொண்டு மீள வழி தெரியாமல் மாட்டிக் கொண்டான். தன் நாட்டைச் சேர்ந்த மனிதர்களைச் சந்தித்து ஒரு வேலை தேடி அலைந்தான். ஒருவன் பன்றிகளை மேய்க்கும் வேலை கொடுத்தான். அந்தப் பன்றிகளுக்குக் கொடுக்கும் உணவுதான் அவனுக்கும் கிடைத்தது. அவ்வேளையில் தன் தந்தையின் நினைவால் வாடினான். தன் தவறை உணர்ந்தான். தன் தந்தையைத் தேடிச் சென்று அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, “என் தந்தையே உனக்கு எதிராக நின்றேன். எத்தனையோ ஊழியர்கள் இங்கே சுகமாக வாழ, அவர்களுள் ஒரு ஊழியனாக நான் இங்கேயே இருக்கின்றேன். உன் கூலிகளில் ஒருவனாக என்னை ஏற்பாய். ஏனெனில் உன் பிள்ளை என்று சொல்ல எனக்குத் தகுதியில்லை” என்று கூற வேண்டும் என்று எண்ணியவனாகத் தன் தந்தையிடம் சென்றான்.

தன் மகன் எப்போதாவது திருந்தி தம்மிடமே வந்து விடுவான் என்று காத்திருந்த தந்தை, தன் மகனைக் கண்டதும், தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். “நீ எப்போது வருவாய் என்றுதான் நான் காத்திருந்தேன். இப்படி இளைத்திருக்கிறாயே” என்று கூறித் தன் மகனைத் தேற்றினார். மேலும் “நீ தப்பான பிள்ளையல்ல. காலம் செய்த சதி இது. ஆகவே வருந்தாதே” என்று கூறினார். பின்பு, “யாரங்கே பணியாட்களே! பட்டாடை நகைகள், அலங்கார வகைகள் யாவற்றையும் கொண்டு வந்து இவனுக்கு அணிவியுங்கள்என்று ஆணையிட்டார். தன் மகனுக்கு கன்றின் கறிகளுடன் விருந்து படையுங்கள் என்று கூறினார். அன்று மாலை மூத்த மகன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடே நடனங்களும் பாடல்களுமாக விழாக்கோலம் கொண்டிருப்பதைக் கண்டு வியந்தான். தன் பணியாட்களிடம் கேட்க, அவர்கள், “தங்கள் தம்பி திரும்ப வந்துள்ளார். அவனின் வரவை உங்கள் தந்தை கொண்டாடுகின்றார்” என்று கூறினர். அதைக் கேட்ட மகன் மிகுந்த கோபம் கொண்டு வீட்டின் வெளியிலேயே நின்றான். தன்னைத் தேடி வந்த தந்தையிடம், “சாத்திரங்களை மறந்தவனுக்குத் தடபுடலாக வரவேற்பு கொடுக்கின்றீர். உங்களுடன் இருந்தவரை இதுபோன்று எனக்காக எந்த விருந்தும், விழாவும் நீங்கள் கொண்டாடியதில்லை” என்று கண்கலங்கிக் கூறினான். அதற்குத் தந்தை, “மகனே! நீ எப்போதும் என்னுடன் இருப்பவன். என் செல்வம் யாவும் எப்போதும் உனக்கே உரிமையாகும். உன் தம்பி இறந்து இப்போது உயிர் பெற்று வந்திருக்கின்றான். அவன் மறுபிறவி எடுத்ததற்காகவே இந்த ஏற்பாடுகள்” என்று கூறி சமாதானம் செய்கின்றார்.

பூசலார் நாயனார் புராணம்

 

பூசலார் நாயனார் புராணம்

கதைச் சுருக்கம்

தொண்டை நாட்டில் திருநின்றவூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் பூசலார். அவர் சிவபக்தியில் சிறந்தவராய், வேதத்தில் வல்லவராய் விளங்கினார். நாயனார் திருக்கோயில் ஒன்றினைக் கட்டிக் குடமுழுக்கு நீராட்ட விரும்பினார். அதற்குரிய பொருள் கிடைக்காமையால் மனத்திற்குள்ளேயே எல்லாப் பொருள்களையும் கொண்டு சேர்த்துப் பிரதிட்டை செய்யும் நாளையும் குறித்தார். அச்சமயத்தில் காஞ்சி மாநகரில் பல்லவ வேந்தன் கோயில் கட்டிப் பிரதிட்டை செய்யும் நாளைக் குறித்தான். சிவபிரான் மன்னன் கனவில் தோன்றித் “திருநின்றவூரில் பூசல் என்பவன் கோயில் கட்டிப் பிரதிட்டை செய்ய உள்ளான். நாம் அங்குச் செல்வதால் உனது ஆயலப் பிரதிட்டையைப் பின்னொரு நாளில் வைத்துக்கொள்” என்றருளினார். உடனே மன்னர் விழித்தெழுந்து திருநின்றவூரை அடைந்தான். ஆங்குப் புதிதாகக் கட்டப்பட்ட கோயில் எதுவும் இல்லை என அறிந்தான். பின்பு பூசலாரை அடைந்து தொழுது “அடிகள் கட்டிய திருக்கோயில் எங்குள்ளது? என வினவி அத்திருக்கோயிலின் பிரதிட்டை நாள் இன்று என இறைவரால் அறிந்தேன்” என்றான். பூசலார் மருட்சியடைந்து தாம் மனத்துக்கண் கட்டிய கோயிலின் முறையினை விளக்கினார். மன்னன் நாயனாரைத் தொழுது விடைபெற்றான். நாயனார் தம் மனக்கோயிலுள் சிவபிரானைப் பிரதிட்டை செய்தார். சில காலம் மனக்கோயில் வழிபாடு செய்து இறைவர் திருவடி நிழலைச் சேர்ந்தார்.

 

பூசலார் தம் மனதில் கோயில் அமைத்தல்

பாடல் எண் 1

            பகைமை கொண்ட முப்புர அசுரர்களின் பொன், வெள்ளி, இரும்பு ஆகிய பறக்கும் கோட்டைகளை எரித்து அழித்த சிவபிரானுக்குக் கோயில் எடுக்க வேண்டும் என்று எண்ணி, எந்தப் பொருள்களும் இல்லாத வறுமையில், மனத்தின்கண் எழுந்த உணர்வுகளைக் கொண்டு நல்ல ஆலயத்தை உருவாக்கிய திருநின்றவூரின்கண் விளங்கும் பூசலார் தம் நினைவால் அமைத்த கோயிலை உரைக்கத் தொடங்கினேன்.

பாடல் எண் 2

உலகில் ஒழுக்கநெறி உயர்ந்து மேவும் பெருமையுடைய தொண்டை நாட்டில் நான்கு வேதங்களும் நன்கு ஓதப்பெறும் தொன்மையான திருநின்றவூர். அங்கு இறைவனின் அடியார்கள் தம் கொள்கையில் சிறந்து நிற்பர்.

பாடல் எண் 3

வேத நெறி தழைத்து மேவும் வகையில் பூசலார் திருநின்றவூரின்கண் தோன்றினார். அவருடைய உணர்வுகள் யாவும் சிவபிரான் திருப்பாதங்களையே சார்ந்தன. அன்பு மாறாத நெறி பெருகி வளரும் தன்மையில் வாய்மையுடன், வேதத்தின் நியதியில் பொலிவுடன் விளங்கினார்.

பாடல் எண் 4

சிவனடியார்களுக்கு ஏற்ற பணிகளைச் செய்தலே தமக்குரிய திருத்தொண்டு என்று எண்ணியவராக, சிவபிரான் எழுந்தருளுவதற்கு ஒரு கோயிலை அமைக்க வேண்டும் என்று விரும்பினார். தன்னிடம் பொருட்செல்வம் இல்லை என்று உணர்ந்தும், கோயில் அமைக்கும் எண்ணத்தில் உறுதியுடன் நின்றார்.

பாடல் எண் 5

கோயில் அமைக்க அவருடைய உள்ளம் விரும்பியது. ஆனால், கோயில் அமைப்பதற்குரிய பெருஞ்செல்வத்தை வருந்தித் தேடியும் கிடைக்காததால் என்ன செய்வேன் என்று மனம் வருந்துகின்றார். மனதுள்ளேயே அக்கோயிலைக் கட்ட வேண்டும் என்று எண்ணி அதற்குரிய செல்வத்தைச் சிறுகச் சிறுகத் தம் சிந்தனையிலேயே திரட்டிக் கொண்டார்.

பாடல் எண் 6

தொழிற் கருவிகளோடு கட்டுதற்குரிய சாதனங்களுடன் தச்சர்களையும் தேடிக் கொண்டு ஆயலம் எடுப்பதற்குரிய நல்ல நாளும் விரும்பி, ஆகம விதிப்படி அடிநிலை எடுத்து, தம் அன்பின் நிறைவினால் இரவும் பகலும் உறங்காது மனதுக்குள்ளேயே கோயிலைச் செதுக்கினார்.

பாடல் எண் 7

கோபுரத்தின் அடி முதல் முடி வரை அமைந்துள்ள அடுக்குகள் யாவற்றிலும் சித்திர வேலைப்பாடுகள் அமையுமாறு மனத்தினால் அமைத்து, விமானத்தின் முடிவில் சிகரமும் சிற்ப நூலில் சித்திரங்களும் உருவாக்கினார். இத்தகைய பணி யாவும் நீண்ட நாட்கள் செய்யப்படும் பணியாக தமது நினைவில் நிலைநிறுத்திக் கொண்டார்.

பாடல் எண் 8

விமானத்தின் உச்சியில் கூர்மையான சிகரம் அமைத்து, சுண்ணச் சாந்து பூசி சிற்ப அலங்காரங்களைச் செய்த பின்பு, திருமஞ்சனத்திற்குரிய கிணறும், கோயிலைச் சுற்றி மதில்களைக் கட்டிக் குளமும் அமைத்தார். சிவபிரான் திருமேனியின் திருவுருவமாகிய சிவலிங்க மூர்த்தியைப் பிரதிட்டை செய்யும் நாளைக் குறித்தார்.

பல்லவ மன்னன் கனவில் சிவபிரான் தோன்றுதல்

பாடல் எண் 9

பல்லவ வேந்தன் காஞ்சி மாநகரில் பெருஞ்செல்வத்தில் கற்கோயிலை முழுமையாகக் கட்டி முடித்தான். பின்பு சிவபிரானைப் பிரதிட்டை செய்ய குடமுழுக்கு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான். அதற்கு முன் நாள், கொன்றை மலர் சூடிய சிவபிரான் மன்னன் கனவில் தோன்றினார்.

பாடல் எண் 10

“திருநின்றவூரில் பூசல் என்னும் அன்பன் பலநாள் மனத்துக்கண் அமைத்த புகழ் மிக்க ஆலயத்துள் நாளை நாம் புகுகின்றோம். ஆதலால் நீ செய்யும் குடமுழுக்குச் செயலை நாளைய தினம் தவிர்த்துப் பின்பு ஒருநாளில் அமைத்துச் செய்வாய்” என்று கூறி மறைந்தார்.

பல்லவ மன்னன் பூசலாரைக் கண்டு வணங்குதல்

பாடல் எண் 11

திருத்தொண்டராகிய பூசலார் நாயனாரின் பெருமையை சிவபிரான் சொல்லக் கேட்ட பல்லவ மன்னன், அத்திருப்பணி செய்தவரைக் கண்டு வணங்குதல் வேண்டும் என்று விருப்பம் கொண்டு திருநின்றவூரை சென்றடைந்தான்.

பாடல் எண் 12

திருநின்றவூரை அடைந்த வேந்தன், அன்பராகிய பூசலார் அமைத்த கோயில் எப்பக்கம் உள்ளது என்று அங்கு வந்தவர்களைக் கேட்க, அவர்களும், “தாங்கள் கூறும் பூசலார், கோயில் எதுவும் அமைத்தது இல்லை” என்றனர். அந்நிலையில் இறைவனின் அடியவர்கள் அனைவரும் தன்னைச் சந்திக்க வருமாறு உரைத்தான் மன்னன்.

பாடல் எண் 13

அன்பர்கள் அனைவரும் வந்து அரசனைக் காண, மன்னன் அவர்களிடம் “பூசலார் என்பவர் யார்?” என்று வினவ, அவர்களும், “குற்றம் இல்லாத அந்த அன்பர் இந்த ஊரைச் சேர்ந்தவர்” என்று கூற, பூசலாரை நாடிச் சென்றான் மன்னன்.

பாடல் எண் 14

திருத்தொண்டராகிய நாயனாரைக் கண்ட மன்னன் தொழுது போற்றி, “எட்டுத் திசைகளில் உள்ளவரும் தொழுமாறு நீங்கள் கட்டிய கோயில் எங்குள்ளது? இன்று அக்கோயிலில் தேவர் தலைவனான சிவபிரானைப் பிரதிட்டை செய்யப் போவதை அறிந்து இறைவன் அருள் பெற்று உம்மைக் கண்டு அடிபணிய வந்தேன்” என்று கூறினான்.

பூசலார் தாம் கட்டியது மனக்கோயில் என்று உரைத்தல்

பாடல் எண் 15

மன்னன் உரை கேட்ட நாயனார் மருட்சி அடைந்தவராக, “என்னை ஒரு பொருளாகக் கொண்டு எம்பிரான் அருள் செய்தார். பணமும் பொருளும் கிடைக்கப்பொறாமையால் உள்ளத்தால் முயன்று நினைந்து நினைந்து அமைத்த கோயில் இதுவேயாகும்” என்று தாம் மனத்துள் எழுப்பிய ஆலயத்தை மன்னனுக்கு விளக்கமாக எடுத்துக் கூறினார்.

பாடல் எண் 16

நாயனாரின் உரை கேட்ட மன்னன், அங்கு நிகழ்ந்த அதியசயத்தை எண்ணிக் “குற்றமற்ற திருத்தொண்டர்தம் பெருமைதான் என்னே!” என்று போற்றி, தான் சூடிய மாலை தரையில் பதியுமாறு நிலத்தில் வீழ்ந்து பூசலாரை வணங்கினான். பின்பு முரசு ஒலிக்கும் படையோடு தன் காஞ்சி மாநரை அடைந்தான்.

பூசலார் தம் மனக்கோயிலில் சிவபிரானைப் பிரதிட்டை செய்தல்

பாடல் எண் 17

பூசலார் தாம் சிந்தையால் அமைத்த கோயிலில் சிவபிரானை நற்பெரும் பொழுதில் பிரதிட்டை செய்தார். பல நாட்கள் நலம் விளங்கும் பூசைகள் யாவும் செய்தார். திருநடனம் புரியும் இறைவனின் அழகிய திருப்பாதத்தில் சேர்ந்தார்.

 

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

மானுக்குப் பிணை நின்ற படலம் - சீறாப்புராணம்

மானுக்குப் பிணை நின்ற படலம்

முகமது நபி மலை வழியே சென்ற காட்சி

        மேகம் வானில் குடையாக இருந்து நிழல் தருகின்றது. மலர்கள் தேனைச் சிந்துகின்றன. மலையைப் பார்க்கிலும் திண்ணிய தோள்களை உடைய வள்ளல் முகமது நபி அவர்கள் குற்றமற்ற வேதத்தினை பொழிந்து இஸ்லாம் எனும் மார்க்கத்தை வளர்த்துக் கொண்டிருந்த ஒரு நாளில், மக்கமா நகரத்தின் எல்லையை விட்டு அகன்று தன் சீடர்களுடன் சோலைகள் சூழ்ந்த ஒரு மலை வழியாகச் சென்று கொண்டிருக்கிறார். அவ்வனத்தில் வேடன் ஒருவன் மான் ஒன்றை வலையில் பிடித்து வைத்திருப்பதைக் கண்டு மானை நோக்கிச் சென்றார்.

வேடனின் தோற்றம்

    வேடன் காட்டடில் திரிகின்ற விலங்குகளைக் கொன்று அதன் மாமிசத்தை அறுத்து, கொம்புகளில் வளைத்து, நெருப்பில் சுட்டு உண்டு, தனது உடலை வளர்ப்பதைத் தவிர வேறு ஒன்றையும் அறியாதவன். காலில் செருப்பையும், தனது இடையில் கந்தைத் துணியையும், தோளில் விலங்குகளைப் பிடிக்கின்ற வலையையும், கையில் பெரிய கோதண்டம் எனும் ஆயுதத்தையும், முதுகில் அச்சத்தைத் தருகின்ற கூரிய அம்பினையும், தோளில் வாளாயுதத்தையும் கொண்டு காட்சி அளித்தான். உடல் முழுவதும் வியர்வையோடு மாமிசம் உண்ணப்பட்ட வாயோடு, கொலை வெறி கொண்ட கண்களோடு தோற்றமளித்தான்.

மானைக் கண்ட நபிகளின் நிலை

    வேடன் ஒரு மானைக் கோபத்துடன் தன் வலையில் சேர்த்துக் கட்டி வைத்திருப்பதைத் தன் கண்களால் கண்டார் நபி பெருமான். செழிப்புற்ற சோலை கொண்ட மலை வழியே சென்ற நபிகள், தேன் சிந்தும் மலர்களைப் பார்க்கவில்லை. மலையில் வீழ்கின்ற அருவிகளைப் பார்க்கவில்லை. நல்ல நிழலைப் பார்க்கவில்லை. ஈச்ச மரங்களின் காய்களையும், அவை மழை போல பொழிவதையும் பார்க்கவில்லை. வேடனால் கட்டுண்டு துன்பப்பட்டுக் கொண்டிருந்த அந்த மானையே பார்த்துக் கொண்டு அதன் அருகே சென்றார்.

நபிகளைக் கண்ட மானின் நிலை

    கருணை மிகுந்த கண்களும், அழகு பொருந்திய முகமும், கஸ்தூரி மணம் கமழும் உடலும் கொண்டு தம்மை நோக்கி வருவது பரிசுத்தத் தூதராகிய முகமது நபிகள் என்று நிம்மதி அடைந்து, “இறைவனது தூதர் வந்து விட்டார், எனவே இவ்வேடனால் நம் உடலுக்கும் உயிருக்கும் இனி துன்பமில்லை. நம் கன்றையும் மானினத்தோடு சேர்ந்து காணலாம்” என்று தனக்குள் மகிழ்ந்தது.

மானின் துயர் நிலை

  • தரையில் வெள்ளியை உருக்கிவிட்டது போலத் தனது மடியில் பால் சிந்தியிருக்கவும், கண்களில் நீர் பொழிய உடலில் இருந்து பெருமூச்சு வெளிவர, திரும்புவதற்குக் கூட வழியில்லாமல் காலில் கட்டுண்டு கிடந்த மானின் அருகில் நபிகள் சென்றார்.
  • கொடி போன்ற உடம்பிலும், இலையைப் போன்ற குளம்பிலும் இட்ட சுருக்கினால் வேதனைப்பட்டுக் கிடந்த மானின் உடல் பதைக்கின்ற நிலையையும், அதன் பெருமூச்சையும் கண்ட நபிகள் மானின் அருகே அன்பு சுரக்க நின்றார்.
  • அக்காட்டில் உள்ள மரங்களில் உள்ள மலர்கள் செந்தேனைப் பொழிந்தன. அக்காட்சி மானின் துயரத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் மரங்கள் கண்ணீர் சிந்துவது போல இருந்தது.
  • மானைக் கட்டி வைத்திருந்த வேடனைக் கண்ணால் காண்பதும் பாவம் என்பது போல, பறவைகள் தத்தம் இனத்தோடு கூட்டுக்குள் புகுந்தன.
  • பறவைகள் கூட்டுக்குள் புகுந்தபோது பூக்களில் உள்ள தேனை உண்ட வண்டுகள் இசை பாடின. அந்த இசையானது, “முகமது நபி வருவார். மானை மீட்பார். வருந்த வேண்டாம்” என்று கூறுவது போல இருந்தது.

மான் தன் துயர் நிலையை நபிகளிடம் கூறியது

    காட்டில் வேடனால் கட்டுண்டு கிடந்த மான், தன்னருகில் வந்து நின்ற முகமது நபியை நோக்கி, “இறைவனது உண்மையான தூதரே, என் உயிர் போன்ற சுற்றமும், என் கலைமானும், என் கன்றும் ஒன்றாகத் திரண்டு இந்த மலையின் பக்கத்தில் பயமின்றிப் புல் தரையில் மேய்ந்து வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு ஓர் இளங்கன்று வேண்டுமென்று விரும்பியும், நான் கருவுறாததால் வருத்தமடைந்தோம். பின் உங்கள் பெயரைப் போற்றி வணங்கியதால் எனக்குக் கரு உருவாகி வளர்ந்தது. எனக்கும் எனது கலைமானுக்கும் ஓர் இளங்கன்று பிறந்தது. நாங்கள் இன்பக்கடலில் மிதந்தோம். இம்மலையின் பக்கம் துன்பமின்றி வாழ்ந்தோம். ஆனால் என் முன்வினையினை நான் அறியவில்லை. நாங்கள் மலைச்சாரலில் ஒரு நாள் தழையுண்டு பசி தீர்த்து அச்சமின்றி உலவி வந்தோம். நாங்கள் நின்றிருந்த திசையின் எதிரிலிருந்த மலை முகட்டில் இருந்து ஒரு வரிப்புலியின் முழக்கம் கேட்டது. அதைக் கேட்ட நாங்கள் அச்சமடைந்து ஒவ்வொரு திசைக்கும் தனித்தனியாகச் சிதறி ஓடினோம். ஒடிய வேகத்தில் நான் என் கலைமானையும், கன்றையும் காணாது வேறு ஒரு காட்டில் புகுந்தேன்.

    சென்ற திசை தெரியாது நான் புகுந்த காட்டுக்குள் மறைந்திருந்த இவ்வேடன், வலையைச் சுற்றி எனக்குச் சுருக்கிட்டான். புலியிடமிருந்து தப்பிச் சிங்கத்தின் வாயில் சிக்கியது போன்ற நிலையில், நான் மனமுடைந்து ஒடுங்கி நின்றேன். நான் சிக்கியதைக் கண்ட வேடன், “என் பசிக்கு உணவு கிடைத்தது” என்று கூறி என்னுடைய நான்கு கால்களையும் உடம்பினையும் ஒரு கயிற்றால் கட்டினான். என்னை இவ்வனத்திற்குள் கொண்டு வந்து இறக்கினான். நெஞ்சில் கவலை கொண்டு நான் தளர்வுடன் இருக்கும்போது நீங்கள் வருவதைக் கண்களால் கண்டு தளர்ச்சி நீங்கினேன்” என்று தான் வேடனிடம் சிக்குண்ட சூழலை நபிகள் பெருமானிடம் விளக்கிக் கூறியது.

நபிகளிடம் மான் விடுத்த வேண்டுகோள்

    வேடனிடம் சிக்குண்ட மான் நபிகள் நாயகத்திடம், “விலங்கு சாதியாயினும் நான் கூறும் சொற்களைக் கேட்பீராக! நான் இவ்வேடனால் இறப்பதற்கு அஞ்சவில்லை. பிறந்த உயிர்கள் ஓருநாள் இறப்பது நிச்சயம். நான் என் கலைமானுடன் பிரிவில்லாமல் சில நாள் வாழ்ந்தேன். அன்புடன் ஒரு கன்றினையும் ஈன்றேன். இனி நான் எது குறித்து வாழ வேண்டும். மூங்கில் இலைப் பனி நீர் போல இவ்வுலக வாழ்க்கை நிலையற்றது. காட்டில் எங்காவது இறவாமல் உம்முடைய முகம் நோக்கி இறப்பதே மேலானது. வரிப்புலியின் முழக்கம் கேட்டு மானினம் சிதறித் தனித்தனியாக ஓடிப் பிரிந்தது. என்னைக் காணாது ஆண்மான் காட்டில் தேடி அலைந்ததோ? அல்லது வரிப்புலியின் வாயில் அகப்பட்டு இறந்ததோ? என் பிரிவினால் புல்லினை உண்ணாமல் நீரினை அருந்தாமல் கண்ணீர் வழிய நெருப்பில் இட்ட இளந்தளிர் போல உடல் பதைத்து நிற்கும். என் கன்று நான் பிடிபடுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் பிறந்தது. எனது மடியில் சுரந்த பாலும் வழிகின்றது. என் கன்று தன் தந்தையிடம் சேர்ந்ததோ? புலியின் வாயில் அகப்பட்டு இறந்ததோ? என்னைத் தேடி அலைகின்றதோ? உன்றும் அறியேன். எனக்கு இதுவன்றி வேறு கவலையில்லை.

    கலிமா என்னும் மூலமந்திரத்தின் வழியாக, அனைவரையும் சுவர்க்கத்தில் புகச் செய்யும் புண்ணியனே! இவ்வேடனின் பசியைத் தீர்க்க விருப்பமாக உள்ளேன். அதற்கு முன் என் கால்களைப் பிணைத்துள்ள பிணைப்பை நீக்கி, என்னைத் தாங்கள் பிணையாக நின்று விடுவித்தல் வேண்டும். என்னைத் தாங்கள் விடுவித்தால் நான் என் கலைமானைச் சேர்ந்து அதன் கவலையைப் போக்கி என் நிலையை என் இனத்திற்குச் சொல்லி விட்டு என் கன்றுக்குப் பாலூட்டிவிட்டுச் சில மணி நேரத்தில் திரும்பி விடுவேன்” என்று வேண்டி நின்றது.

நபிகள் பிணையாக இருக்க இசைந்தமை

          மானின் வேண்டுகோளைக் கேட்ட நபிகள், வேடனை நோக்கி, “இந்த மான் தனது கன்றின் துயர் தீர்த்து வரும்வரை நான் இதற்குப் பிணையாக நிற்கிறேன். எனவே இதனை விடுதலை செய்து விடு” என்று கூறினார்.

வேடனின் மறுமொழி

        நபிகளின் உரையைக் கேட்ட வேடன் சிரித்து, “முட்கள் நிறைந்த காட்டில் முகத்து வியர்வை உள்ளங்கால் வரை நனைய ஓடி எந்த வேட்டையும் கிடைக்கப் பெறாத நிலையில் அம்மானைப் பிடித்துத் தூக்கி வந்தேன். இம்மான் தசையால் என் பசி நீங்கியது என மகிழ்வோடு இருந்தேன். முகமது அவர்களே! நீங்கள் எனக்கு வருத்தம் தரும் சொற்களைக் கூறினீர்கள். இச்சொற்கள் உமக்கு மட்டுமின்றி எவருக்கும் பொருத்தமற்றவை. காட்டில் பிடித்த மானை விட்டுவிட்டால் அது மீண்டும் மனிதனிடம் வருவது முன் எங்கும் நடந்தது உண்டோ? அறிவுடையவர்கள் இவ்வாறு பேசுவது உண்டோ? எனவே ஊனம் மிக்க இச்சொல்லைக் கைவிடுக” என்றான்.

நபியின் மறுமொழி

          வேடனின் சொற்களைக் கேட்ட நபிகள், “குறிப்பிட்டவாறு உன் பசி தீர்க்க இந்த மான் வராவிட்டால் ஒன்றிற்கு இரண்டாக நான் மான்களைத் தருகிறேன்” என்று வேடனிடம் கூறினார். அது கேட்ட வேடன் நபிகளின் மீது நம்பிக்கை வைத்து நபிகளைப் பிணையாக ஏற்றுக் கொண்டு மானை விடுவித்தான்.

கலைமானின் வேண்டுகோளும், பிணைமானின் நேர்மையும்

          வேடனிடம் இருந்த மீண்ட மான் வேறு ஒரு காட்டில் தன் மான் கூட்டத்தையும், தனது குட்டியையும் ஆண்மானோடு கண்டு மகிழ்ச்சியுற்றது. பின்பு தன் ஆண் மானின் மனத்துன்பத்தை நீக்கி, குட்டியைப் பாலை உண்ணும்படிச் செய்து விட்டு, தன் சுற்றத்தாரிடமும் தன் கலைமானிடமும் தான் வேடனிடம் மாட்டிக் கொண்ட சூழலையும், நபிகள் பெருமான் தனக்காகப் பிணையாக இருக்க இசைந்து தன்னை விடுவித்தமையையும் கூறியது. அதனால் நான் மீண்டும் வேடனிடம் செல்ல வேண்டும் என்பதைத் தெரிவித்தது. அதைக் கேட்ட கலைமான், “பகைவர் கையில் இருந்து தப்பி வந்த மான் மீண்டும் கொலைப்பட விரும்பி மனிதர்கள் கையில் அகப்படுதல் உண்டோ?” என்று பெண்மானிடம் கூறியது. 

          இவ்வேண்டுகோளைக் கேட்ட பெண்மான், கலைமானை நோக்கி, “என்னைப் பிணைத்துக் கட்டி வைத்த வேடனின் மனத்தை மாற்றி, தன்னைப் பிணையாகக் கொண்டு என்னை விடுவித்தவர் இறைவன் நபி பெருமான். என் உயிரை வேடனின் பசிக்குத் தந்து நபியினது பிணையை மீட்க நான் மனம் ஒப்பவில்லை என்றால், நான் சுவர்க்கத்தை இழந்து தீய நரகில் புகுவது மட்டுமின்றி வேறு கதியும் பெருமையும் இழக்க வேண்டியிருக்கும். நபிகள் நாயகம் சொன்ன சொல்லை மாற்றிவிட்டு மறந்திருந்தால் நான் வரிப்புலியின் வாய்ப்பட்டு இறப்பதே தக்கதாகும். எனவே வாழும் விருப்பததைக் கைவிட வேண்டும். முன்பு ஒருநாள் நதியின் வெள்ளத்தில் மான் பிணையொன்று நடக்க, அதன்பின் நபியும் மற்றவரும் நடந்து சென்றனர். அப்போது அறிவில்லாத ஒருவன் நபிகள் சொல்லைக் கேட்காது மாறி நடந்ததால் நதிக்குள் வீழ்ந்து மடிந்தான். இந்த அதிசயத்தை அறியாதவர் யார்? இவற்றையெல்லாம் அறிந்தும், என்னை இங்கே நிறுத்துதல் நன்மையன்று” என்று கூறிக் கன்றுக்குப் பாலூட்டிவிட்டு வேடனிடம் செல்ல எழுந்தது.

மானுடன் கன்றும் செல்ல இசைதல்

          தன் கூட்டத்தை விட்டு அகன்று செல்ல மான் முற்பட்டபோது கன்றானது முன் வந்து, “உன்னை நீங்கி நான் உயிர் வாழ மாட்டேன். அது சத்தியம்” என்று கூறி பிணையுடன் தானும் செல்ல முடிவு எடுத்தது. அதைக் கண்ட பெண்மானும் இறக்க மனமுவந்து செல்வதால் முடிவில்லாத இன்பம் நமக்கு வந்து சேரும் என்று எண்ணி தன் கன்றோடு காட்டை நோக்கிச் சென்றது.

வேடன் நல்லறிவு பெறல்

           பெண்மானும் அதன் கன்றும் சேர்ந்து வருவதைக் கண்ட நபிகள் நாயகம் வேடனை அழைத்து, “ஒரு பிணைக்கு இரண்டாக உன்னிடம் வருகின்றன பார்” என்று கூறினார். பெண்மானும் அதன் கன்றும் நபிகள் பாதத்தில் பணிந்து “பாவியாகிய எனக்காக வேடனுக்குத் தங்களையே பிணையாக்கினீர். இப்போது மீட்டருள வேண்டும்” என்றுரைத்தது. இதனைக் கேட்ட முகமது நபி அவற்றின் பண்பினைச் சுட்டிக் காட்டி, “இந்தப் பிணையை விட்டு விட்டு உனது பசியினைச் தீர்த்துக் கொண்டு பெருநகரினை அடைக” என்றார். வேடனும், “நான் வீடு பேறு பெற்றேன். வாழ்ந்தேன்” என்று அவர் பாதத்தில் வீழ்ந்தான். பின்பு, “வேதநாயகரே என்பால் கலிமாவினை ஓதும். நான் வெறும் கானக வேடன். விலங்கை ஒத்தவன். நான் தெளிவடையுமாறு இஸ்லாம் நெறிக்கு உரியவனாக என்னை மாற்றி அருள வேண்டும்” என்று இரு கையாலும் ஏந்தி நின்றி மகிழ்வோடு கூறினான்.

          முகமது நபிகள் மகிழ்வோடு கலிமா சொல்ல, வேடன் அதனை மனங்கொண்டு ஏற்று இறை நம்பிக்கை வைத்து, அதன்படி நடந்து பெருஞ்செல்வனாகித் தீன் வழியல் நிலையாக நின்றான். மேலும், மானை நோக்கி, “உன்னால் மனித வாழ்வில் பெறக்கூடிய உயர்ந்த கதியினைப் பெற்றேன். பிறவி நோயைப் போக்கினேன். நீயும் பயத்தை விட்டுக் கன்றுடன் உன் கலைமானிடம் சென்று நல்லொழுக்கப்படி வாழ்வாயாக” என்று கூறி வாழ்த்தி அனுப்பினான்.